Skip to main content

கொரிய தமிழ்ச்சங்கத்தின் தமிழர் திருநாள் விழா 2022 

Published on 01/02/2022 | Edited on 01/02/2022

 

Tamil Festival of the Tamil Association of Korea 2022

 

சியோல், தென்கொரியா, கொரிய தமிழ்ச்சங்கத்தின் தமிழர் திருநாள் 2022, திருவள்ளுவர் ஆண்டு 2053, தைத் திங்கள் 16 - 17 (29-30 சனவரி 2022) சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு நாட்கள் இணையவழி இயங்கலையில் இனிதாய் நடைபெற்றது. கொரியாவில் கரோனா பெருந்தொற்று பரவி வரும் நிலையில் நேரடி நிகழ்வு தவிர்க்கப்பட்டது.

 

நிகழ்விற்கு தென்கொரியாவிற்கான இந்தியத்தூதர் ஸ்ரீப்ரியா ரெங்கநாதன், உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், ஊடகவியலாளர் நக்கீரன் ஆசிரியர், எழுத்தாளர் ஆதனூர் சோழன் ஆகியோர் வாழ்த்து அனுப்பியிருந்தனர். சிறப்பு அழைப்பாளர்களாகத் தொழிலதிபர் மற்றும் அரசியல்வாதி காரை செல்வராஜ், வரலாற்று ஆய்வாளர் மற்றும் எழுத்தாளர் இரா. மன்னர் மன்னன் மற்றும் ஒய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி கோ. பாலசந்திரன் ஐ.ஏ.எஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

Tamil Festival of the Tamil Association of Korea 2022

 

முதல்நாள் நிகழ்வானது தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது, கொரிய தமிழ்ச்சங்க கலை மற்றும் பண்பாட்டுக் குழு செயலாளர் சரண்யா பாரதிராஜா வரவேற்புரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, தென்கொரியாவிற்கான இந்தியத்தூதர் ஸ்ரீப்ரியா ரெங்கநாதன் அவர்களின் வாழ்த்துச் செய்தி இடம்பெற்றது. பின்னர் குழந்தைகள் மற்றும் பெரியோர்களின் சங்கப்பொங்கல் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

 

நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட காரை செல்வராஜ், கொரிய தமிழ்ச் சங்கத்தின் நாட்காட்டியினை சிறப்பாக வெளியிட்டார். அவரைத் தொடர்ந்து மற்றோரு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட இரா. மன்னர் மன்னன், 'பண்டையத் தமிழர் அறிவியல் ஓர் வரலாற்றுப் பார்வை' எனும் தலைப்பில் எளிய முறையில் அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் வரலாற்றுத் தரவுகளோடு கருத்துரை வழங்கி சிறப்பித்தார். பின்னர் கொரிய தமிழ்ச் சங்கத்தின் துணைத்தலைவர் முனைவர் கிறிஸ்டி கேத்தரின் நன்றியுரை வழங்க முதல் நாள் விழா நிறைவுபெற்றது. முதல் நாள் விழாவினை மதுமிதா வீரபாண்டியன் தொகுத்து வழங்கினார்.

 

Tamil Festival of the Tamil Association of Korea 2022

 

இரண்டாம் நாள் நிகழ்வானது, நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பிரதாப் சோமசுந்தரம், முதல் நாள் நிகழ்வுகளின் தொகுப்பினைக் கூறி தமிழ்த்தாய் வாழ்த்து பாடித் தொடங்கினார். அவரைத் தொடர்ந்து கொரிய தமிழ்ச்சங்கத்தின் நிகழ்ச்சிகள் இணைச் செயலாளர் முனைவர் பத்மநாபன் மோகன், கொரிய தமிழ்ச் சங்கம் பற்றிய அறிமுக உரையினை வாசித்தார். பின்னர் நிகழ்வில் உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், ஊடகவியலாளர் நக்கீரன் ஆசிரியர் மற்றும்  எழுத்தாளர் ஆதனூர் சோழன் ஆகியோரின் வாழ்த்துச் செய்திகள் இடம்பெற்றன. பின்னர் குழந்தைகள் மற்றும் பெரியோர்களின் சங்கப்பொங்கல், கலை மற்றும் கவிதை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

 

Tamil Festival of the Tamil Association of Korea 2022

 

நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட கோ. பாலசந்திரன் ஐ.ஏ.எஸ், 'அற்றைத் தமிழர் நோக்கும் இற்றைத்தமிழர்' எனும் தலைப்பில் தமிழமுதம் பொங்க இலக்கியச் சுவையோடு அன்றைய தமிழரின் வாழ்வியலை எடுத்துக் கூறினார். மேலும் இன்றைய தமிழரின் கடமையாக அகழ்வாராச்சியின் வழியாக உண்மையான தமிழரின் பெருமையினை நிலை நாட்ட வேண்டும் என்று செவிகளும், மனமும் நிறையும்படி சிறப்புரை வழங்கினார். பின்னர் கொரிய தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் சு. இராமசுந்தரம், கடந்த ஆண்டில் கொரிய தமிழ்ச் சங்கத்தின் செயல்பாடுகளையும் எதிர்காலத் திட்டங்களையும் குறித்து சிறப்பானதொரு தலைமையுரை வழங்கினார். பின்னர் கொரிய தமிழ்ச்சங்கத்தின் தகவல் தொடர்புச் செயலாளர் ஆய்வாளர் சகாய டர்சியூஸ் பீ நன்றியுரை வழங்க, கொரிய தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழா - 2022 நிறைவுபெற்றது.

 

Tamil Festival of the Tamil Association of Korea 2022

 

முன்னதாக, நிகழ்ச்சிக்கான ஏற்படுகளைச் சங்கத்தின் தலைவர் முனைவர் சு. இராமசுந்தரம், துணைத்தலைவர் முனைவர் ஜா. கிறிஸ்ட்டி கேத்தரின், கலை மற்றும் பண்பாட்டுக் குழு செயலாளர் திருமதி. சரண்யா பாரதிராஜா,  நிகழ்ச்சிகளுக்கான இணைச்செயலாளர் முனைவர். மோ. பத்மநாபன், தகவல் தொடர்புச் செயலாளர் ஆய்வாளர். சகாய டர்சியூஸ் பீ மற்றும் தொழில்நுட்ப அமைப்பளார் மு. ஆனந்த் ஆகியோர் செய்திருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தமிழில் பேச முயற்சிக்கிறேன்” - வேலூரில் பிரதமர் மோடி பேச்சு!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
"Trying to speak in Tamil" - PM Modi's speech in Vellore

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் பிரதமர் மோடி இன்று (10.04.2024) வேலூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது வேலூர், திருவண்ணாமலை, ஆரணி, தருமபுரி, அரக்கோணம், கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிடும் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்டார். இந்தப் பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், “எனது அன்பார்ந்த தமிழ் சகோதர சகோதரிகளே, வணக்கம். தமிழில் உரையாற்ற முடியவில்லை என்பதற்காக எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நமது புத்தாண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி தொடங்குகிறது. உங்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக எனது முழு திறமையையும் பயன்படுத்துவேன்.

தமிழகத்தின் பூமியான வேலூர் புதிய சரித்திரம் படைக்கப் போகிறது என்பது டெல்லியில் அமர்ந்திருப்பவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். தமிழகத்தில் பாஜக, பாமகவுக்கு அபரிமிதமான மக்கள் ஆதரவு கிடைத்து வருகிறது. இந்தியா இன்று உலகில் வல்லரசாக வளர்ந்து வருகிறது, இதில் தமிழகம் பெரும் பங்காற்றியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. விண்வெளித் துறையில் இந்தியாவை முன்னோக்கி கொண்டு செல்வதில் தமிழகம் பெரும் பங்காற்றியுள்ளது. உற்பத்தியில் இந்தியாவை முன்னோக்கி கொண்டு செல்வதில் தமிழகத்தின் கடின உழைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழகத்தில் கட்டப்பட்டு வரும் பாதுகாப்பு வழித்தடம், இந்த மாநிலத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என்று நான் நம்புகிறேன்.

"Trying to speak in Tamil" - PM Modi's speech in Vellore

தமிழகத்தை பழைய சிந்தனையில் சிக்க வைக்க நினைக்கும் திமுக, பழைய அரசியலில், ஒட்டுமொத்த திமுகவும் ஒரு குடும்பத்தின் நிறுவனமாகிவிட்டது. திமுகவின் குடும்ப அரசியலால் தமிழக இளைஞர்கள் முன்னேற வாய்ப்பில்லை. திமுகவில் இருந்து தேர்தலில் போட்டியிடுவதற்கும், திமுகவில் முன்னேறுவதற்கும் மூன்று முக்கிய அளவுகோல்கள் உள்ளன. அந்த மூன்று முக்கிய அளவுகோல்கள், குடும்ப அரசியல், ஊழல் மற்றும் தமிழர் எதிர்ப்பு ஆகும். போதை மருந்து மாஃபியாக்கள் யாருடைய பாதுகாப்பில் உள்ளனர். என்சிபியால் கைது செய்யப்பட்ட போதை மருந்து மாபியா கும்பல் தலைவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்.

திமுக மாநிலம், மதம், சாதியின் பெயரால் மக்களைச் சண்டையிட வைக்கிறது. பிரித்து ஆட்சி செய்யும் அரசியலை மக்கள் புரிந்து கொள்ளும் போது திமுகவுக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்காது என்பது திமுகவினருக்கு தெரியும். அதனால்தான் வாக்குக்காக மக்களைத் தங்களுக்குள் சண்டையிட வைக்கிறார்கள், திமுகவின் பல தசாப்த கால ஆபத்தான அரசியலை நான் தொடர்ந்து அம்பலப்படுத்த வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளேன். ஐக்கிய நாடுகள் சபையில், நமது தமிழ் உலகின் பழமையான மொழி என்பதை உலகம் முழுவதும் அறியும் வகையில் தமிழில் பேச முயற்சிக்கிறேன். காசியின் எம்.பி.யாக, காசி தமிழ்ச் சங்கத்தை மேலும் பெருமைப்படுத்த உங்களை அழைக்க வந்துள்ளேன். இரண்டாவதாக, நான் குஜராத்தில் பிறந்தேன், குஜராத்தைச் சேர்ந்த பல குடும்பங்களும் இங்கு வாழ்கின்றன. குஜராத்தியாக, உங்களை சௌராஷ்டிரா தமிழ்ச் சங்கத்திற்கு அழைக்கிறேன்.

"Trying to speak in Tamil" - PM Modi's speech in Vellore

இன்று நாடு முழுவதும் காங்கிரஸும், திமுகவும் செய்யும் இன்னொரு போலித்தனத்தைப் பற்றி மக்கள் விவாதிக்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கினர். எந்த அமைச்சரவையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவு யாருடைய நலனுக்காக எடுக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் மௌனம் காக்கிறது. அந்தத் தீவின் அருகே சென்று மீன் பிடிக்கும்போது தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்படிப்பட்ட மீனவர்களைத் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தொடர்ந்து விடுவித்து அழைத்து வருகிறது. இதுமட்டுமின்றி, ஐந்து மீனவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் நான் அவர்களை உயிருடன் மீட்டேன். திமுகவும், காங்கிரசும் மீனவர்களுக்கு எதிரானவர்கள் மட்டுமல்ல, தேசத்தின் குற்றவாளிகள்” எனப் பேசினார். 

Next Story

'சீரோடும் சிறப்போடும் இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு' - தமிழக அரசு அறிவிப்பு

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
'Second World Tamil Classical Conference with Uniformity and Excellence'-Tamil Government Announcement

முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் தலைமையில் முதலாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெற்றிருந்த நிலையில், சென்னையில் இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், 'இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்ற முத்தமிழுடன் கணித்தமிழும் இணைந்து நற்றமிழாகச் சிறப்புடன் திகழ்கிறது. திமுக பொறுப்பேற்ற மூன்று ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு தனிப்பெரும் நிலையில் தகுதி வாய்ந்த தமிழர்களுக்கு பல்வேறு விருதுகள் வழங்குவதோடு, தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமையாக்குவது, பண்டையத் தமிழர் பண்பாட்டையும், பழங்கால தமிழர்களின் எழுத்தறிவு, வாழ்வியல் முறைகளைப் பறைசாற்றும் வகையில் கீழடி அருங்காட்சியகத்தை அமைத்தது.

அதன் தொடர்ச்சியாக 'பொருநை' அருங்காட்சியகம் அமைக்கும் பணிகளும் நமது பண்பாட்டின் மணிமகுடங்களாகும். வரும் 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் சென்னையில் இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 5 நாட்கள் சீரோடும் சிறப்போடும் நடைபெறும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் நடைபெற்றது. முன்னாள் முதல்வர் கலைஞர் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டைத் தொடர்ந்து இரண்டாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.