Skip to main content

பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் தலிபான் எடுத்த நடவடிக்கை!

Published on 18/08/2021 | Edited on 18/08/2021

 

taliban

 

ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், அந்த நாட்டில் ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தலிபான்கள் அமைப்பை நிறுவியவர்களுள் ஒருவரான முல்லா அப்துல் கனி பரதர், ஆப்கானிஸ்தானின் புதிய அதிபராக அறிவிக்கப்படவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

 

இதற்கிடையே தலிபான்களுக்கு எதிரான அமைப்பு ஒன்று அந்நாட்டில் உருவாகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காபூலுக்குள் தலிபான்கள் மீண்டும் நுழையத் தொடங்கியதுமே ஆப்கானிஸ்தான் துணை அதிபராக இருந்த அம்ருல்லா சாலே, "நான் என்றும் எப்போதும் எந்தச் சூழ்நிலையிலும் தலிபான் தீவிரவாதிகளுக்குத் தலைவணங்க மாட்டேன். எனது தலைவர் அகமது ஷா மசூதின் மாண்புக்கு எப்போதும் நான் துரோகம் இழைக்க மாட்டேன்" என தெரிவித்திருந்தார்.

 

அதனைத்தொடர்ந்து அம்ருல்லா சாலே, தலிபான்களுக்கு எதிரான போராளி குழுவின் அகமது ஷா மசூத்தின் மகனான அஹ்மத் மசூத் உள்ளிட்ட சிலருடன் ஆலோசனை நடத்தும் புகைப்படங்கள் வெளியாகின. தலிபான்கள் ஆப்கானிஸ்தான் முழுவதையும் இன்று கைப்பற்றியிருந்தாலும் பாஞ்ஷிர் பகுதி அவர்களின் கட்டுப்பாட்டில் இல்லை. அப்பகுதி தலிபான்களுக்கு எதிரான போராளிகளின் கோட்டையாகக் கருதப்படுகிறது. 90களில் தலிபான் மிகுந்த பலம் பெற்றிருந்தபோதும் பாஞ்ஷிர் பகுதியை அவர்களால் கைப்பற்ற முடியவில்லை. அந்த அளவிற்குப் பாஞ்ஷிர் பகுதியைப் போராளி குழுக்கள் பாதுகாத்துவந்தனர். அதன் தலைவராக அகமது ஷா மசூத் இருந்தார். இதனால் அம்ருல்லா சாலேவும், அகமது ஷா மசூத்தின் மகனான அஹ்மத் மசூத்தும் ஆலோசனை நடத்தும் புகைப்படங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. மேலும், தலிபான்களுக்கு எதிரான இயக்கம் உருவாவதாகவும் தகவல்கள் வெளியாகின.

 

amrullah saleh

 

இந்தநிலையில் அம்ருல்லா சாலே நேற்று (17.08.2021) தனது ட்விட்டர் பதிவில், "ஆப்கானிஸ்தான் சட்டப்படி, நாட்டின் அதிபர் காணாமல் போனாலோ, தப்பி ஓடிவிட்டாலோ, பதவி விலகிவிட்டாலோ அல்லது இறந்துவிட்டாலோ துணை அதிபர்தான் காபந்து அதிபராவர். நான் நாட்டிற்குள்ளே இருக்கிறேன். நான்தான் சட்டபூர்வமான காபந்து அதிபர்" என தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து தலைவர்களின் ஆதரவையும் பெற அவர்களைத் தொடர்புகொண்டுவருவதாகவும் கூறியுள்ளார். இதனால் ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் பரபரப்பு அதிகரித்துவருகிறது.

 

இந்தநிலையில் ஏற்கனவே சிறையிலிருந்த தீவிரவாதிகளை விடுவித்துவந்த தலிபான்கள், தற்போது மேலும் 2,300 தீவிரவாதிகளை சிறையிலிருந்து விடுத்துள்ளனர். விடுவிக்கப்பட்ட தீவிரவாதிகளில் அல்கய்தா, ஐஎஸ்ஐஎஸ் இயக்கங்களைச் சேர்ந்தவர்களும், தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்ற தீவிரவாத அமைப்பின் முக்கிய தளபதிகளும் அடங்குவர்.

 

தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு, பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட இயக்கமாகும். தற்போது இந்த இயக்கத்தின் முக்கியத் தலைவர்கள் விடுவிக்கப்பட்டிருப்பது பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தலாக அமையும் என கருதப்படுகிறது. பாகிஸ்தானில் சீனப் பொறியாளர்கள் சென்ற பேருந்தின் மீது தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்புதான் தாக்குதல் நடத்தியதாகவும், அத்தாக்குதலுக்குப் பின்னால் இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் இருப்பதாக பாகிஸ்தான் அண்மையில் குற்றஞ்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பொதுமக்கள் 11 பேரைக் கடத்தி துப்பாக்கிச்சூடு; பயங்கரவாதிகளால் பதற்றம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
11 civilians kidnapped and and incident happened in pakistan

பாகிஸ்தான் நாட்டின் பதற்றம் நிறைந்த மாகாணம் பலுசிஸ்தான். இந்தப் பலுசிஸ்தான் பகுதியானது, ஆப்கானிஸ்தான் - ஈரான் எல்லையை ஒட்டி தென்மேற்கு பாகிஸ்தானில் உள்ளது.

இந்த நிலையில், பலுசிஸ்தான் மாகாணம் நோஷ்கி மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்த நெடுஞ்சாலை பகுதியில் துப்பாக்கி ஏந்திய ஒரு பயங்கரவாதக் குழு ஒன்று அந்தப் பேருந்தை வழிமறித்துள்ளது. மேலும், அந்தப் பேருந்தில் இருந்த 9 பேரை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.

அதே போல், அந்த நெடுஞ்சாலையில் சென்ற கார் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில், 2 பேர் பலியாகியுள்ளனர், மேலும் 2 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், அனைவரது உடல்களையும் துப்பாக்கி குண்டுகள் துளைத்த நிலையில், அங்குள்ள பாலம் அருகே மலைப்பகுதியில் பிணமாக  மீட்டனர்.

பின்னர், இந்தச் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் போலீசார் தரப்பில் தெரிவிக்கையில், ‘நோஷ்கி மாவட்டத்தில் துப்பாக்கி ஏந்திய ஒரு பயங்கரவாதக் குழு ஈரானுக்கு சென்ற ஒரு பேருந்தை வழிமறித்து, 9 பேரை கடத்தி துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் கிழக்கு மாகாணமான பஞ்சாப்பை சேர்ந்தவர்கள். இதுவரை, இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை’ என்று கூறப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்தப் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி, பலுசிஸ்தான் முதல்வர் மிர் சர்பராஸ் புக்டி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Next Story

பாகிஸ்தானில் பழங்கால இந்து கோவில் இடித்து தகர்ப்பு!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Demolition of a Historic Hindu temple in Pakistan!

இந்தியா - பாகிஸ்தான் பிரிவதற்கு முன்னாள், ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையொட்டி, கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ‘கைபர் கோவில்’ என்ற பழங்கால இந்து கோவில் ஒன்று செயல்பட்டு வந்தது. அதன் பின்பு, 1947ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததற்குப் பின்னால், அங்குள்ள சிறுபான்மையின மக்களான இந்து மக்கள், இந்தியாவிற்கு புலம் பெயர்ந்து வந்தனர்.

இதனால், 1947ஆம் ஆண்டு முதல், அந்த இந்து கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் உள்ளே சென்று வழிபடவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, அந்த கோவில் மூடப்பட்டுள்ளது. காலப்போக்கில் இந்த கோவிலில் உள்ள செங்கற்கள் ஒவ்வொன்றாக விழுந்து, அந்த கோவில் சிதிலமடைந்து காட்சியளித்துள்ளது.

இந்த நிலையில், அந்தப் பழமையான இந்து கோவில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு முழுமையாக இடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கோவில் அமைந்திருந்த இடத்தில் புதிதாக வர்த்தக வளாகம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து, பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கூறியதாவது, ‘முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மத முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று கட்டிடங்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பை உறுதி செய்வது மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளின் பொறுப்பாகும்’ என்று கூறியுள்ளது.