sundar pichai about h1b visa suspension

2020 ஆம் ஆண்டின் இறுதி வரை வெளிநாட்டினருக்கு H1B விசா வழங்குவதை நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்ததற்கு சுந்தர் பிச்சை தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

Advertisment

கரோனா வைரஸ் பரவலால் தொழில்துறை முழுவதும் முடங்கியுள்ள சூழலில், கடந்த நான்கு மாதங்களில் அமெரிக்காவில் கோடிக்கணக்கானவர்கள் வேலையிழந்துள்ளனர். இந்தச் சூழலில் உள்நாட்டினருக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில், H1B, H-2B, H-4, L-1, J-1 உள்ளிட்ட விசா வகைகளின் பயன்பாட்டை இந்த ஆண்டு இறுதி வரை அதிபர் ட்ரம்ப் தடை செய்துள்ளார். அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டினருக்கான இந்த விசாவில் சுமார் 74 சதவீதம் வரை இந்தியர்கள் பயன்பெற்று வந்தனர். இந்நிலையில் இதனால் பயன்பெறும் லட்சக்கணக்கான இந்தியர்களும், அவர்களை நம்பியுள்ள அமெரிக்க நிறுவனங்களும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

Advertisment

ட்ரம்ப்பின் இந்த முடிவுக்குப் பெரும்பாலான அமெரிக்க நிறுவனங்கள் எதிர்ப்புத் தெரிவித்து வரும் சூழலில், இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள அல்ஃபபெட் நிறுவனத்தின் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை, "அமெரிக்கப் பொருளாதாரம் உலகளவில் சிறந்து விளங்குவதற்கு வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களின் பங்களிப்பு முக்கியக்காரணம். அப்படி வெளிநாடுகளிலிருந்து வேலைக்கு வரும் மக்களைத் தடுக்கும் வகையில் விசாக்களை நிறுத்தி வைத்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதற்கு என் அதிருப்தியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு என் ஆதரவு தொடரும். அனைவருக்கும் வாய்ப்புகள் கிடைக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.