Skip to main content

"நீங்கள் தனியாக இல்லை" - பாதிக்கப்பட்டவர்களுக்கு சுந்தர் பிச்சை ஆதரவு...

Published on 01/06/2020 | Edited on 01/06/2020

 

sundar pichai about george floyd issue

 

அமெரிக்காவில் ஜார்ஜ் என்ற கருப்பினத்தவரின் கொலை அந்நாட்டில் போராட்டங்கள் மற்றும் கலவரங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட கருப்பின மக்களுக்கு ஆதரவாக சுந்தர் பிச்சை கருத்து தெரிவித்துள்ளார். 


அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் கருப்பினத்தவர் ஒருவரை போலீஸார் கொன்றதால் ஏற்பட்ட போராட்டங்கள் மற்றும் கலவரங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது. மினசோட்டா தலைநகரான மினியாபொலிஸ் நகரில் கள்ளநோட்டு தொடர்பான விசாரணை ஒன்றின்போது, கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிலாய்ட் எனும் நபர் போலீஸாரின் பிடியில் உயிரிழந்தார்.

இந்த இறப்பிற்கு நீதிவேண்டி அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் போராட்டத்தை துவங்கினர். கடந்த நான்கு நாட்களாக, நாடு முழுவதும் பரவியுள்ள இந்த போராட்டத்தால் அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது. பல இடங்களில் கலவரம் வெடித்ததை தொடர்ந்து 16 மாகாணங்களிலுள்ள 25 நகரங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பல இடங்களில் போலீஸார் கண்ணீர்ப்புகை குண்டுகள் வீசியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் போராட்டக்காரர்களை கலைத்து வருகின்றார்.

 

 


மேலும், வெள்ளை மாளிகையின் அருகிலும் போராட்டங்கள் அதிகரித்துள்ளதால், வழக்கத்துக்கு மாறாக முதன்முறையாக வெள்ளைமாளிகையின் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டு, அப்பகுதியே இருளில் மூழ்கியது. இந்த நிலையில், இதுகுறித்து அல்ஃபாபெட் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை வெளியிட்டுள்ள ட்வீட்டில், "இன்று யு.எஸ். கூகுள் மற்றும் யூட்யூப் முகப்புப் பக்கங்களில், இன சமத்துவத்திற்கான எங்கள் ஆதரவையும், கருப்பின சமூகத்துடன் ஒற்றுமையையும், ஜார்ஜ் ஃபிலாய்ட், பிரோனா டெய்லர், அஹ்மத் ஆர்பெரி மற்றும் குரல் இல்லாத மற்றவர்களின் நினைவாகவும் இதை பகிர்ந்து கொள்கிறோம். துக்கம், கோபம், சோகம் மற்றும் பயத்தை உணருபவர்களே, நீங்கள் தனியாக இல்லை" என தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்