
ஜம்மு - காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி (22.04.2025) பயங்கரவாதக் கும்பல் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 26 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இன்று (07.05.2025) நள்ளிரவு 01.44 மணி அளவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் நள்ளிரவில் முப்படைகள் கூட்டாக இணைந்து அதிரடி தாக்குதல் நடத்தினர்.
9 இடங்களில் இலக்குகளை குறிவைத்து தீவிரவாத அமைப்புகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் 26 தீவிரவாதிகள் உயிரிழந்ததாகவும், 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியது. தொடர்ந்து பதில் தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில் தற்போதுவரை போர் பதற்றம் நீடித்து வருகிறது.
இந்நிலையில் பாகிஸ்தானில் நாடு முழுவதும் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகள் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. லாகூர் விமான நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல் நடைபெற்ற நிலையில் வான் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கையாக பாகிஸ்தான் நாடு முழுவதுமான உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளை ரத்து செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.