ஆப்கானிஸ்தானில் பள்ளிகள் திறக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே மாணவிகள் திரும்ப அனுப்பப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2021- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு பெண் குழந்தைகளின் கல்வி கேள்வி குறியானது. இந்த நிலையில், ஏழு மாதங்களுக்கு பின் 12 வயது முதல் 19 வயதுடைய மாணவிகளுக்காக மேல்நிலைப்பள்ளிகள் திறக்கப்பட்டன. காபூல் உள்ளிட்ட நகரங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு, மாணவிகள் வகுப்புகளுக்கு சென்றனர். ஆனால், சில மணி நேரங்களிலேயே அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
பல மாணவிகள் கண்ணீர் மல்க பள்ளிகளைவிட்டு வெளியேறியதாக, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாணவிகள் ஏன் திருப்பி அனுப்பப்பட்டனர் என்பது குறித்து தலிபான்கள் பதில் கூறவில்லை.