srilankan 9 th cabinet sworn in

Advertisment

இலங்கையில் மஹிந்த ராஜபக்சே தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தில் பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிவடைய இருந்த சூழலில், ஆட்சிக்காலம் முடிவதற்கு முன்பே அவையைக் கலைத்து தேர்தல் நடத்த இருப்பதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்தார். இதனையடுத்து இலங்கை நாடாளுமன்றம் கடந்த மார்ச் மாதம் கலைக்கப்பட்டுத் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கரோனா பரவலால் இந்த தேர்தல் குறித்த திட்டங்கள் மாற்றப்பட்டு, தேர்தல் தள்ளிப்போடப்பட்டது. இந்நிலையில், கரோனா பரவல் குறைந்துள்ளதை அடுத்து, ஐந்து மாதங்களுக்கு பின்னர் அங்கு கடந்த வாரம் பொதுத்தேர்தல் நடைபெற்றது.

Advertisment

அதில் ராஜபக்சே தலைமையிலான கூட்டணி 150 இடங்களைக் கைப்பற்றியது. இவற்றுள் ராஜபக்சேவின் இலங்கை பொதுஜனக் கட்சி 145 இடங்களைத் தனித்து வென்றுள்ளது. சஜித் பிரேமதாசவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, முஸ்லிம் அமைப்புகளின் ஆதரவுடன் மொத்தம் 55 இடங்களைக் கைப்பற்றியது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 10 இடங்களைக் கைப்பற்றியது. இந்நிலையில் பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது ராஜபக்சேவின் பொதுஜனக் கட்சி. இந்நிலையில், கண்டி ஸ்ரீதலதா மாளிகை வளாகத்தில் உள்ள மகுல்மடுவ மண்டபத்தில் இன்று அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். பதவியேற்புக்கு பின்னர் அமைச்சர்கள் ஜனாதிபதியிடமிருந்து தமது நியமன கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.