lee hsien loong

Advertisment

அமெரிக்காவின் பைசர் நிறுவனமும் ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கரோனா தடுப்பூசிக்கு, டிசம்பர் 2- ஆம் தேதி, பிரிட்டனும், டிசம்பர் 4- ஆம் தேதி பஹ்ரைனும் அனுமதி வழங்கின. அதனைத்தொடர்ந்து, பைசர் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அனுமதி வழங்கியுள்ளன.

இந்தநிலையில், பைசர் தடுப்பூசிக்கு ஆசியா கண்டத்தில் முதல் நாடாக சிங்கப்பூர் அனுமதி வழங்கியுள்ளது. பைசர் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து பேசிய சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், "நானும் எனது அமைச்சரவை சகாக்களும் முதலில் கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ளவோம். இதில் வயதானவர்களும் இடம்பெறுவர். கரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என்று என்னைப்போன்ற மூத்தவர்கள் நம்புகிறோம் என்பதைக் காட்டுவதற்கே இதனைச் செய்யவுள்ளோம்" எனக் கூறியுள்ளார்.

Advertisment

மேலும் லீ சியன் லூங், கரோனா தடுப்பூசி சிங்கப்பூர் குடிமக்களுக்கும், சிங்கப்பூரில் நீண்டகாலமாக வசிப்பவர்களுக்கு இலவசம். கரோனா தடுப்பூசி செலுத்துவதில் வயதானவர்கள், எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்கள், கரோனா தடுப்பில் ஈடுபடும் முன்களப் பணியாளர்கள் ஆகியோர்க்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி 2021-ன் மூன்றாம் காலாண்டில், நாட்டில் உள்ள அனைவருக்கும் போதுமான அளவிற்குக் கைவசம் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.