Skip to main content

"இந்தியாவில் தோன்றிய கரோனாவே காரணம்" - கெஜ்ரிவாலுக்கு சிங்கப்பூர் பதிலடி!

Published on 19/05/2021 | Edited on 19/05/2021

 

arvind kejriwal

 

இந்தியாவில் கரோனா பரவல் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்திவந்த நிலையில், தற்போது தினசரி கரோனா பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது. இருப்பினும், இந்தியாவில் மூன்றாவது அலை ஏற்படும் என மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்துவருகின்றனர். மேலும், மூன்றாவது அலை ஏற்பட்டால் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்றும் அவர்கள் தெரிவித்துவருகின்றனர்.

 

இந்தநிலையில், சிங்கப்பூரில் சமீபகாலமாகப் பரவிவரும் மரபணு மாற்றமடைந்த கரோனா வைரஸ் குறித்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்தார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "சிங்கப்பூரில் பரவிவரும் புதிய வகை கரோனா குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானது என்று கூறப்படுவதுடன், அது இந்தியாவில் மூன்றாவது அலையாக வரக்கூடும். எனவே சிங்கப்பூருடனான விமானச் சேவைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், தடுப்பூசி செலுத்துவதில் குழந்தைகளுக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்" என தெரிவித்திருந்தார்.

 

இந்தநிலையில், இதற்குப் பதிலளிக்கும் விதமாக சிங்கப்பூரின் சுகாதார அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அந்தநாட்டு சுகாதாரத்துறை, "சிங்கப்பூர் வகை கரோனா என்று எதுவுமில்லை. சமீபத்திய வாரங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு B.1.617.2 என்ற மரபணு மாற்றமடைந்த கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது இந்தியாவில் உருவானதாகும். பைலோஜெனடிக் சோதனையில், B.1.617.2 வகை கரோனாவிற்கு சிங்கப்பூரில் ஏற்பட்டுள்ள பல கரோனா கிளஸ்டர்களுடன் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளது.

 

அண்மையில் B.1.617.2 மரபணு மாற்றமடைந்த கரோனா, இந்தியாவில் உருவானதற்கு எந்த ஆதாரமும் இல்லை என இந்திய அரசு மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்