
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறின. இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், தாக்குதல்களை நிறுத்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். அதனை தொடர்ந்து இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்துவதாக அறிவித்தது.
இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாகவும், பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் தஞ்சம் அளிப்பது, நிதி உதவி வழங்குவது உள்ளிட்ட தகவல்கள் குறித்தும் உலக நாடுகளுக்கு ஆதாரங்களுடன் விளக்கமளிக்க அனைத்துக் கட்சி எம்.பிக்கள் அடங்கிய 7 குழுக்களை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, எம்.பிக்கள் அடங்கிய குழுக்கள் பல்வேறு நாடுகளுக்குச் சென்று அங்குள்ள தலைவர்களைச் சந்தித்து விளக்கமளித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருவனந்தபுரம் எம்.பியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சசி தரூர் தலைமையிலான குழு கயானா, பனாமா, கொலம்பியா, பிரேசில் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. தற்போது, சசி தரூர் தலைமையிலான குழு, அமெரிக்காவுக்குச் சென்று அங்குள்ள அதிகாரிகளைச் சந்தித்து விளக்கமளித்தனர்.

இந்த நிலையில், நியூயார்க்கில் வெளியுறவு கவுன்சிலின் போது பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த பத்திரிகையாளர் சந்திப்பில், சசி தரூர் மற்றும் அவரது குழு பங்கேற்று விளக்கமளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, வாஷிங்டன் போஸ்டின் ஊடகவியலாளராக இருக்கும் சசி தரூர் மகன் இஷான் தரூர், திடீரென கேள்வி கேட்க எழுந்தார். தனது மகனை கண்ட சசி தரூர் புன்னகைத்தபடியே, “நீங்கள் எழுந்து நிற்க வேண்டும், இது அனுமதிக்கப்படக் கூடாது. இவர் என்னுடைய மகன்” என்று கூறி மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். இதனை கேட்ட மற்றவர்களும் சிரித்தனர்.
அதற்கு பதிலளித்த இஷான் தரூர், “வாஷிங்டன் போஸ்ட்டில் நான் இருக்கிறேன்” என்று கூறி, “தனிப்பட்ட முறையில் ஒரு கேள்வியைக் கேட்கிறேன். உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது, பாகிஸ்தானின் ஆரம்ப தாக்குதல் குற்றத்திற்கான ஆதாரங்களைக் காட்டுமாறு மற்ற அரசாங்கம் உங்களிடம் கேட்டிருக்கிறார்களா?” என்று கேள்வி எழுப்பினார். மகனின் கேள்விக்குப் பதிலளித்த சசி தரூர், “நீ இந்த கேள்வி எழுப்பியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை, அதனால் எங்களிடம் ஆதாரம் கேட்கப்படவில்லை. ஆனால், ஊடகங்கள் இரண்டு மூன்று இடங்களில் கேட்டிருக்கின்றன. உறுதியான ஆதாரங்கள் இல்லாமல் இந்தியா இதை செய்திருக்காது என்பதை மிகத் தெளிவாகக் கூறுகிறேன்.
பாகிஸ்தானில் இருந்து 37 ஆண்டுகளாகத் தொடர்ச்சியான பயங்கரவாதத் தாக்குதல்கள் நிகழ்ந்து வருகின்றன, அதோடு தொடர்ச்சியான மறுப்புகளும் உள்ளன. அதாவது, ஒரு கன்டோன்மென்ட் நகரத்தில் உள்ள ஒரு ராணுவ முகாமுக்கு அருகில் உள்ள ஒரு பாகிஸ்தானிய பாதுகாப்பான வீட்டில் ஒசாமா பின்லேடன் கண்டுபிடிக்கப்படும் வரை, அவர் எங்கே இருக்கிறார் என்று பாகிஸ்தானுக்குத் தெரியாது என்று கூறப்படுவதை அமெரிக்கர்கள் மறந்துவிடவில்லை. அது தான் பாகிஸ்தான். மும்பை தாக்குதல் நடந்த போது அதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அவர்கள் மறுத்தனர். எனவே பாகிஸ்தான் யார் என்பது எங்களுக்குத் தெரியும். அவர்கள் பயங்கரவாதிகளை அனுப்புவார்கள். அவர்கள் பிடிபடும் வரை அவர்கள் அவ்வாறு செய்யவில்லை என்று மறுப்பார்கள்” என்று தெரிவித்தார்.