நீரில்லா நாடு சுடுகாடு என்பார்கள், ஆனால் அதை மாற்றி நீரில்லாத நாடுகள் மற்ற நாடுகளை இயக்கும் சூட்சமத்தை கொண்டிருக்க முடியும் என்பதை நிரூபித்தது சவூதி அரேபியா. சவூதி அரேபியா இவ்வளவு பிரசித்தி பெற்றதற்கும், வல்லரசு நாடுகள் போட்டி போட்டு, கடைசியில் அமெரிக்கா தன் கட்டுப்பாட்டில் சவூதியைக் கொண்டு வந்ததற்கும் 1938ம் ஆண்டு இன்றைய நாளில் நடந்த நிகழ்வுதான் காரணம். உலகமே சவூதி அரேபியாவை உற்று நோக்கவும் இதுதான் காரணம். 1938ம் ஆண்டு மார்ச் 3 அன்றுதான் சவூதி அரேபியாவில் எண்ணெய் வளம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்தான் சவூதி அரேபியாவும், அதன் பணமதிப்பும் எகிற ஆரம்பித்தது. இன்றும் அதன் மதிப்பு ஏறிக்கொண்டுதான் இருக்கிறது. 80 ஆண்டுகளாக எண்ணெய் வளத்தை கொட்டிக்கொண்டிருக்கும் இந்த நாட்டில், ஆள்பவர்கள், ஆட்சிமுறை எல்லாம் மாறினாலும் எண்ணெய் வணிகம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதன்மூலம் ஒட்டுமொத்த ஐக்கிய அமீரகமும் வளர்ச்சி பெற்றுள்ளது. இந்த வளத்துக்காக போரும், படுகொலையும் ஆக்கிரமிப்பும் நடந்துகொண்டே இருக்கின்றன. 1938ல் ஆரம்பித்து இன்றும் உறிஞ்சப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த வளம் தீர்ந்துவிடுமா என்பதைதான் உலக நாடுகள் அனைத்தும் அச்சத்துடன் பார்த்துக்கொண்டிருக்கின்றன.
கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது கோடம்புழா. இப்பகுதியைச் சேர்ந்த தம்பதி முல்லா முஹம்மது - பாத்திமா. இவர்களது மகன் அப்துல் ரஹீம். இவரின் தந்தை இறந்த நிலையில், அப்துல் ரஹீம் கடந்த 2006-ஆம் ஆண்டு ஹவுஸ் டிரைவர் விசாவில் சவூதி அரேபியா சென்றார். அப்போது அவரது வயது 26. வேலை தேடிச்சென்ற அப்துல் ரஹீமுக்கு சவூதியின் ஒரு வீட்டில் வாகனம் ஓட்டும் பணியுடன், அந்த வீட்டு முதலாளியின் மாற்றுத்திறனாளி சிறுவனைப் பராமரிக்கும் பணியும் கொடுக்கப்பட்டது. சிறுவனின் கழுத்தில் பொருத்தப்பட்டிருந்த சிறப்பு கருவி மூலம் உணவு மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. அவ்வப்போது வீல் சேர் மூலமும், காரிலும் சிறுவனை மார்க்கெட்டுக்கு அழைத்துச் சென்று தேவையான பொருட்களை வாங்கிவிட்டு வீடு திரும்புவது அப்துல் ரஹீமின் வேலையாக இருந்து வந்தது.
இந்த நிலையில், கடந்த 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி எப்போதும் போல மாற்றுத்திறனாளி சிறுவனை அப்துல் ரஹீம் காரில் மார்க்கெட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, ட்ராபிக் சிக்னல் விழுந்ததால் கார் சிறிது நேரம் நின்றுள்ளது. ஆனால், காரின் பின் பகுதியில் அமர்ந்திருந்த சிறுவன் காரை இயக்க சொல்லி அடம்பிடித்துள்ளார். உடனே, கார் ஓட்டுனர் அப்துல் ரஹீம் சிக்னல் மீறிச் செல்ல கூடாது என சிறுவனிடம் எடுத்துக்கூறியுள்ளார். ஆனாலும், சிறுவன் பின் சீட்டில் இருந்தபடி சத்தம்போட்டு பிரச்சனை ஏற்படுத்தியிருக்கிறார். மீண்டும் சிக்னலை மீறக் கூடாது எனக் கூறி புரியவைப்பதற்காக திரும்பியபோது அப்துல் ரஹீமின் முகத்தில் சிறுவன் பலமுறை எச்சில் துப்பியிருக்கிறார். அதை தடுப்பதற்காக அப்துல் ரஹீம் கையை நீட்டியபோது சிறுவனின் கழுத்தில் பொருத்தப்பட்டிருந்த உபகரணத்தில் தெரியாமல் கை பட்டதாக கூறப்படுகிறது. இதனால், சிறுவன் மயக்க நிலைக்குச் சென்றுள்ளார். ஆனால், அதனைக் கவனிக்காத அப்துல் ரஹீம் மறுபடியும் வண்டியை ஒட்டிச் சென்றுள்ளார்.
ஒரு கட்டத்தில் சிறுவனின் பேச்சு சத்தம் கேட்காத நிலையில், அப்துல் ரஹீம் பின்பக்கம் திரும்பி பார்த்து அதிர்ந்து போயுள்ளார். சிறுவன் காரிலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து, அப்துல் ரஹீம் நடந்த சம்பவத்தைக் கூறி, அரேபியாவில் வேலை செய்துவந்த கோழிக்கோட்டைச் சேர்ந்த முஹமது நசீர் என்பரிடம் உதவிக்கேட்டுள்ளார். அவர் கொடுத்த ஐடியாவின் படி பணம் பறிக்க வந்த கொள்ளைக்காரர்கள் அப்துல் ரஹீம்மை கட்டிப்போட்டு சிறுவனை தாக்கியதாக முதலாளியிடம் நாடகம் ஆடினார். ஆனால், போலீஸ் விசாரணையில் உண்மை தெரிய வர இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில், முஹம்மது நசீர் பத்து ஆண்டுகள் சிறையில் இருந்து விட்டு ஜாமீனில் வெளியே வந்தார்.
ஆனால், அப்துல் ரஹீம் குற்றவாளி என அறிவித்த கோர்ட் அவருக்கு மரண தண்டனை விதித்தது. கடந்த 18 ஆண்டுகளாக சவுதி அரேபியாவின் அல் ஹைர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே மனம் இறங்கி வந்த சிறுவனின் பெற்றோர் இழப்பீடாக பிளட் மணி என்ற வகையில் ஒன்றரை கோடி ரியால் கேட்டனர். அதன் இந்திய மதிப்பு 34 கோடி ரூபாய் ஆகும். அதனையும் குறிப்பிட்ட காலத்தில் கொடுத்தால் அப்துல் ரஹீம் உயிர் தப்பிக்கலாம் என்ற நெருக்கடி ஏற்பட்டது.
இதனை அறிந்த அப்துல் ரஹீமின் குடும்பத்தினர்கள் நண்பர்கள் சவுதி அரேபியால் பணிபுரியும் மலையாளிகள் என அனைவரும் இணைந்து “சேவ் அப்துல் ரஹீம்’ என்ற செயலியை உருவாக்கி நிதி திரட்டினர். அத்துடன், சிறுவனின் மரணத்திற்கு அப்துல் காரணம் இல்லை எனவும் அது தற்செயலான ஒன்று எனவும் விளக்கமளித்திருந்தனர். இதனிடையே, குறுகிய நேரத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கையும் தாண்டி 34 கோடிக்கும் கூடுதலாகவே நிதி வந்தடைந்துள்ளது.
இதையடுத்து, இந்தியா தூதரகம் மூலம் சவுதியில் உள்ள சிறுவனின் குடும்பத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தன் மகனுக்கு உதவிய அனைவருக்கும் நன்றி என்றும், 18 ஆண்டுகளுக்கு பிறகு மகனை காண இருப்பதாக அப்துல் ரஹீமின் தாய் பாத்திமா உருக்கமாக தெரிவித்துள்ளார். இந்த நற்செய்தியைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த கேரள முதல்வர் பினராயி விஜயன், “இது ஒரு உண்மையான கேரளக் கதை. இதன்மூலம் வகுப்புவாதத்தால் உடைக்க முடியாத சகோதரத்துவக் கோட்டை கேரளா என்பது உறுதியாகி உள்ளது. உலகத்தின் முன் கேரளாவை பெருமைப்படுத்திய இந்த நோக்கத்திற்காக அனைத்து நல் உள்ளங்களையும் நாங்கள் மனதார பாராட்டுகிறோம். வெளிநாடுவாழ் மலையாளிகளின் பங்கு, இந்த முயற்சியின் பின்னணியில் இருப்பது பாராட்டுக்குரியது. இந்த ஒற்றுமைக்காக நாம் ஒருமனதாக முன்னோக்கிச் செல்வோம்..” எனத் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரத்தை உமிழும் `தி கேரளா ஸ்டோரி' போன்ற படத்தைக் கொண்டாடும் பாஜகவிற்கு கேரள முதல்வர் பதிலடி கொடுத்திருப்பதாக கேரள மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், ரியல் கேரள ஸ்டோரி இதுதான் என அப்துல் ரஹீமுக்கு மக்கள் செய்திருக்கும் உதவியைக் கொண்டாடி வருகின்றனர்.
சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரளத்தைச் சேர்ந்த அப்துல் ரஹீமை மீட்க கேரள மக்கள் ஒன்றிணைந்து 34 கோடியைத் திரட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் அதிகமாக விளையும் தேங்காய் மற்றும் தென்னை சார்ந்த உற்பத்தி பொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை. ஆனால் ரேசன் கடைகளில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் வழங்கப்படுகிறது. ஆகவே உள்ளூர் விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்க ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யவும், தேங்காய் சார்ந்த மதிப்புக் கூட்டுப் பொருட்களை அங்காடிகள் மூலம் விற்பனை செய்யவும் வலியுறுத்தி பல வருடங்களாகத் தேங்காய் உற்பத்தி விவசாயிகள் தேங்காய் உடைப்பு போராட்டம் முதல் பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளனர். எந்த நடவடிக்கையும் இல்லை.
இந்நிலையில்தான் இதே கோரிக்கையை வலியுறுத்தி 16 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள தென்னை விவசாயிகள் சென்னையில் திரண்டு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக விவசாயிகளை ஒன்று திரட்டும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இதேபோல புதுக்கோட்டை மாவட்ட தென்னை விவசாயிகளின் ஆலோசனைக் கூட்டம் கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் வளாகத்தில் நடந்தது. கூட்டத்தில் எதிர்வரும் 16 ஆம் தேதி சென்னையில் நடக்கும் போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொள்வது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், கீரமங்கலம் சுற்று வட்டார கிராம தென்னை விவசாயிகளை ஒருங்கிணைத்து தொடங்கப்பட்ட நக்கீரர் தென்னை உற்பத்தி நிறுவனம் பல மாதங்களாக மூடப்பட்டுள்ளது குறித்து விவசாயிகள் கேள்வி எழுப்பிய நிலையில், நிறுவனத்தின் நிர்வாகிகளில் ஒருவரான செல்வராஜ் கூறும்போது, நக்கீரர் பண்ணை நட்டத்தில் இயங்கவில்லை. ரூ. 50 லட்சம் நிதி ஒரு தனி நபரிடம் உள்ளது. அதில் சுமார் ரூ. 20 லட்சம் வரை கடன் உள்ளது என்றார். இந்த நிறுவனம் மீண்டும் செயல்படுவது சம்பந்தமாக ஆலோசிக்க வேண்டும் என்றனர் பல விவசாயிகள். தற்போது நக்கீரர் பண்ணை பற்றி ஆலோசிக்க வேண்டாம். சென்னை போராட்டம் முடிந்தவுடன் விரைவில் இதேபோல கூட்டம் ஏற்பாடு செய்து ஆலோசித்து மீண்டும் நிறுவனம் இயங்க நடவடிக்கை எடுக்கலாம் என்று முடிவானது.