Skip to main content

ஐக்கிய அரபு அமீரகம் மீதான தாக்குதல்; பதிலடி தந்த சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள்!

Published on 19/01/2022 | Edited on 19/01/2022

 

saudi arabia

 

ஏமன் நாட்டில் அதிபர் அப்தரபு மன்சூர் ஹாடி தலைமையிலான அரசுப் படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் மோதல் நடந்துவருகிறது. இந்த மோதலில் அரசுப் படைகளுக்கு ஆதரவாக ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் உள்ளிட்ட நாடுகளின் கூட்டு படைகள் சவுதி அரேபியா தலைமையில் ஹவுதி அமைப்புக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனையடுத்து ஹவுதி அமைப்பு, அந்த கூட்டு நாடுகளுக்கு எதிராக தாக்குதல்களை நிகழ்த்திவருகிறது. ஹவுதி அமைப்புக்கு ஈரான் ஆதரவளித்து வருகிறது.

 

இந்தநிலையில் நேற்று முன்தினம் ஹவுதி அமைப்பு, ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் புதிய விமானநிலையம் உள்பட இரண்டு இடங்களில் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.

 

இதனையடுத்து சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள், ஹவுதி அமைப்பினரை குறிவைத்து, அவர்களது கட்டுப்பாட்டில் இருக்கும் ஏமன் நாட்டின் தலைநகர் சனாவில் வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். பலியான இந்த இருபது பேரில் 14 பேர் ஒரே கட்டிடத்தில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஏமன் மீது அமெரிக்கா, இங்கிலாந்து அதிரடி தாக்குதல்

Published on 12/01/2024 | Edited on 12/01/2024
US,UK incident on Yemen

மத்திய கிழக்கின் செங்கடல் வழியாக ஆப்பிரிக்கா, ஐரோப்பா நோக்கி பயணிக்கும் கப்பல்களுக்கு அடிக்கடி அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு வருகின்றன. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்க போர்க் கப்பல்கள் அந்த பகுதிக்கு வந்துள்ளதுதான் இதற்கான காரணம் எனக் கூறப்படுகிறது. ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் பல்வேறு தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ட்ரோன்களை பயன்படுத்தி கப்பல்களைத் தாக்குவது தொடர் கதையாகி வருகிறது.

இந்நிலையில் ஏமன் நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் தாக்குதல் நடத்தியுள்ளன. ஹவுதி கிளர்ச்சியாளர்களைக் குறிவைத்து இரு நாடுகளும் தாக்குதல் நடத்துவதால் பதற்றம் அதிகரித்துள்ளது. செங்கடல் பகுதியில் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்துவதற்குப் பதிலடியாக இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. ஈரான்  ஆதரவு  பெற்ற ஹவுதி இயக்கம் ஏமனிலும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் ஏமன் நாட்டின் தலைநகரான சனா, அல் ஹுதைதா, சத்தா, தாமர் ஆகிய நகரங்களின் மீது அமெரிக்கா, இங்கிலாந்து வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. விமானம் மற்றும் கடற்படைகள் மூலம் ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஆயுதக் கிடங்குகள் உள்ளிட்ட 12 மையங்களைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடைபெற்று வருகிறது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் இந்த தாக்குதலுக்கு 10க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. தேவைப்பட்டால் தாக்குதலை மேலும் தீவிரப்படுத்துவோம் எனவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் இந்த தாக்குதலால் காசாவில் நடக்கும் போர் தீவிரமடையும் எனவும் அஞ்சப்படுகிறது. 

Next Story

கையில் காசில்லை, பசி, பட்டினி; கதறும் மகன்; கண்ணீர் வடிக்கும் தாய்

Published on 06/12/2023 | Edited on 06/12/2023
ad

 

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டம் தலைவன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் அன்னத்தாய். இவரது மகன் மணிபாலன். மின்னணு சாதனங்கள் நிபுணர் என்று வெளிநாட்டில் வேலை இருப்பதாகக் கூறி சேப்டி யூனியன் காண்ட்ராக்ட்டிங் கம்பெனி என்ற நிறுவனத்தின் மூலமாக சவுதி அரேபியாவிற்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். ஆனால் அவர் என்ன வேலை செய்தார் என்று தெரியவில்லை. அவரது விசா காலம் 15.10.2023 அன்றுடன் முடிந்துவிட்டது. ஆனால் அவர் வேலை பார்த்து வந்த நிறுவனம் அவரது விசாவை நீட்டிப்புச் செய்ய எந்தவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

 

இதனால் அவர் அங்கு வேறு இடத்தில் பணிக்கோ உணவு போன்ற அத்தியாவசியப் பொருட்களைப் பெற வெளியில் கூட செல்ல முடியவில்லை. அவர் ஓரிடத்தில் முடங்கிக் கிடப்பதோடு அன்றாட உணவுக்கே கஷ்டப்பட்டும், கையில் பணமில்லாமல் மன உளைச்சல் ஏற்பட்டு கிட்டத்தட்ட பைத்தியம் பிடித்ததுபோல் தனித் தீவு ஒன்றில் புலம்பிக் கொண்டிருப்பதாகவும், அன்றாடம் நெருக்கடிகள், பசி, பட்டினியால் அழுது புலம்புவதாகத் தனது தாயிடம் செல்போனில் கதறி அழுதுள்ளார்.

 

மேலும், தன்னை எப்படியாவது தாய் நாட்டிற்கு அழைத்து வர ஏற்பாடு செய்யக் கேட்டு கண்ணீரும் கதறலுமாய் திரிவதை வீடியோவாகத் தனது தாய்க்கு அனுப்பியிருக்கிறார். இதனால் உறைந்து போனது மணிபாலனின் குடும்பம். தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்து மகனை எப்படியாவது இந்தியாவிற்கு மீட்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீரும் கம்பலையுமாய் கதறியிருக்கிறார் தாய் அன்னத்தாய். தவிர வீடியோ ஒன்றில் வேதனையாக, முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கிறார். நிலை குலைந்துபோயிருக்கிறது மணிபாலனின் குடும்பம்.