Skip to main content

ரஷ்யா - உக்ரைன் போர்: நடந்ததும், நடந்து கொண்டிருப்பதும் என்ன? - ஓர் எளிய விளக்கம் 

Published on 26/02/2022 | Edited on 26/02/2022

 

russia ukraine conflict explained

 

சர்வதேச அரசியல் அரங்கை மிகுந்த பரபரப்புக்கு உள்ளாக்கிய ஆப்கானிஸ்தான் விவகாரம் தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு மெல்ல நீர்த்துப்போன நிலையில், தற்போது ரஷ்யா - உக்ரைன் இடையேயான மோதல் சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மாத இறுதியில் உக்ரைனின் எல்லையில் ஒரு லட்சத்திற்கும் மேலான ராணுவ வீரர்களைக் குவித்த ரஷ்யா, கடந்த வியாழன் அன்று உக்ரைனுக்குள் அதிரடியாக நுழைந்து தாக்குதலைத் தொடங்கியது. மூன்று நாட்களாக நடந்து வரும் மோதலில் 190க்கும் மேற்பட்ட உக்ரைனிய மக்கள் பலியாகியுள்ளதாக உக்ரைனிய அரசு தெரிவித்துள்ளது. ரஷ்யா உக்ரைனுக்கு இடையே என்னதான் பிரச்சனை?

 

1991இல் சோவியத் யூனியன் உடைவதற்கு முன்புவரை உக்ரைன் சோவியத் ஒன்றியத்தில் உறுப்பு நாடாக அங்கம் வகித்தது. பின், சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்து 15 நாடுகளாகப் பிரிந்தபோது ரஷ்யாவும் உக்ரைனும் இறையாண்மையுள்ள தனித்தனி நாடுகளாயின. உக்ரைன் தன்னுடைய ஒருபுற எல்லையை ரஷ்யாவோடும் மற்றொருபுற எல்லையை ஐரோப்பிய யூனியனுடனும் பகிர்ந்து கொள்கிறது. அதே நேரத்தில் கலாச்சார ரீதியாக ரஷ்யாவோடு நெருக்கமான தொடர்பு கொண்ட நாடாக உள்ளது உக்ரைன். இன்றும் உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்குப்பகுதியில் ரஷ்ய மொழி பேசும் மக்கள் அதிக அளவில் வாழ்கிறார்கள். அவர்கள் ரஷ்ய ஆதரவு மனநிலை கொண்டவர்களாக இருப்பதும் தனக்கான அரசியலைத் தீர்மானிப்பதில் உக்ரைனுக்கு இருக்கும் மிகப்பெரும் சவால்களில் ஒன்று.

 

சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்து உக்ரைன் தனி நாடாக மாறினாலும், உக்ரைனைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவே ரஷ்யா விரும்புகிறது. அது தன்னுடைய பாதுகாப்பிற்கு அவசியமானது என்றும் ரஷ்யா கருதுகிறது. ஆனால், உக்ரைனோ அரசியல் ரீதியாக மேற்குல நாடுகளின் உறவை விரும்புகிறது. அதை விரும்பாத ரஷ்யா, உக்ரைனுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது.  இது தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையே இருந்த புகைச்சல், கடந்த 2014ஆம் ஆண்டு மிகப்பெரும் மோதலாக வெடித்தது.

 

ஐரோப்பிய ஒன்றியத்துடனான பொருளாதார ஒருங்கிணைப்பு ஒப்பந்தத்தை ரஷ்ய ஆதரவாளரான உக்ரேனிய அதிபர் விக்டர் யானுகோவிச்சி நிராகரிக்கிறார். அதனைத்தொடர்ந்து, நவம்பர் 2013இல் தலைநகர் கீவ்-இல் அரசுக்கு எதிராக மக்கள் புரட்சி செய்ய ஆரம்பித்தனர். கௌரவத்திற்கான புரட்சி (The revolution of dignity) என அறியப்படும் இந்தப் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமானதையடுத்து, அதிபர் யானுகோவிச் 2014 பிப்ரவரியில் நாட்டை விட்டு வெளியேறுகிறார். அடுத்த ஒரு மாதத்தில் ரஷ்யா, உக்ரைனின் தெற்குப்பகுதியில் இருந்த கிரிமியா தீபகற்பத்தைக் கைப்பற்றி தன் நாட்டுடன் இணைந்து கொண்டது. ரஷ்யாவின் இந்தச் செயலுக்கு உலகம் முழுவதும் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன.

 

மேலும், உக்ரைனின் கிழக்குப்பகுதியில் உள்ள ரஷ்ய ஆதரவு நிலை கொண்ட பிரிவினைவாதிகளுக்கு ரஷ்யா தொடர்ந்து உதவி வருகிறது. அந்தப் பிரிவினை குழுக்களுக்கும் உக்ரைனின் ராணுவத்திற்கும் இடையே நடந்து வரும் போரில் தற்போதுவரை 14,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

 

russia ukraine conflict explained

 

இப்படி பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த மோதல் தற்போது உச்சம் அடைந்திருப்பதற்கான காரணம் என்ன?  ரஷ்யா எதிர்ப்பு மனநிலை கொண்டவரான உக்ரைனின் தற்போதைய அதிபர் ஜெலன்ஸ்கி, மேற்குலக நாடுகளின் உறவை பெரிதும் விரும்புகிறார். உக்ரைனைத் தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டால் ரஷ்யாவின் ஆதிக்கத்திற்கு முட்டுக்கட்டை போடலாம் என்று நம்பும் மேற்குல நாடுகள், நேட்டோ எனும் ராணுவக் கூட்டணியில் உக்ரைனை இணைக்க முயற்சிகள் எடுத்து வருகின்றன. ஏற்கனவே தன்னுடைய அண்டை நாடுகளான போலந்து, லாட்வியா, லிதுவேனியா, எஸ்தோனியா ஆகிய நாடுகள் நேட்டோ அமைப்பில் அங்கம் வகிக்கும் நிலையில், மற்றொரு அண்டை நாடான உக்ரைனும் நேட்டோவில் இணைவதை ரஷ்யா விரும்பவில்லை. கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ படைகளின் ஆதிக்கம் இருக்காது என்ற உத்தரவாதத்தை மேற்குலக நாடுகளிடமிருந்து எதிர்பார்க்கும் ரஷ்யா, தேவைப்பட்டால் ராணுவ ரீதியாக தக்க பதிலடி கொடுப்போம் என்றும் எச்சரித்து வந்தது.

 

இப்படியான சூழலில்தான் தற்போது இரு நாடுகளுக்கும் இடையே போர் வெடித்துள்ளது. தனக்கு அமெரிக்கா, மற்றும் நேட்டோ படைகளின் ஒத்துழைப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு ரஷ்யாவை எதிர்த்து வந்த உக்ரைன், இன்று தனித்து விடப்பட்டுள்ளது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் இன்னும் இணையாததால் உக்ரைனுக்கு படைகளை அனுப்ப முடியாது என்று கூறி நேட்டோ அமைப்பு கைவிரித்து விட்டது. ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட ரஷ்யாவிற்கு எதிரான தீர்மானத்தையும் தன்னுடைய வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி ரஷ்யா தோல்வியடையச் செய்துவிட்டது.

 

உக்ரைனின் அதிபரான ஜெலன்ஸிகியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவரை பாதுகாப்பாக வெளியேற்ற அமெரிக்கா முன்னெடுப்புகளை எடுத்தது. ஆனால், ஜெலன்ஸிகியோ தற்போதைய சூழலில் எங்களுக்கு தேவையானது ஆயுதம்தானேயொழிய பயணம் அல்ல எனத் தெரிவித்துவிட்டார். நாட்டை பாதுகாக்க முன்வரும் அனைவருக்கும் ஆயுதம் வழங்க தயார் எனத் தெரிவித்துள்ள அதிபர் ஜெலன்ஸ்கி, இது எங்கள் நாடு. எங்கள் நாட்டை நாங்கள் ஒருபோதும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்று உறுதியாக உள்ளார். உக்ரைன் ராணுவம் தாக்குதலை நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார் என்று ஒருபுறம் தெரிவித்துள்ள ரஷ்யா, மற்றொருபுறம் செர்னோபில், மெலிடோபோல் ஆகிய முக்கிய நகரங்களைக் கைப்பற்றியதோடு தொடர்ந்து முன்னேறி வருகிறது. இதனிடையே, உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்க 28க்கும் மேற்பட்ட நாடுகள் முன்வந்துள்ளதாக சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகத் தொடங்கியுள்ளதால் ரஷ்யா - உக்ரைன் விவகாரத்தின் அடுத்தகட்ட நகர்வை உலகம் உற்றுக்கவனிக்க ஆரம்பித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்