Skip to main content

2023 ஆம் ஆண்டின் சிறந்த வார்த்தையாக ‘ரிஸ்’ தேர்வு - அதன் பொருள் என்ன தெரியுமா?

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

'Rizz' chosen as the word of the year 2023...do you know what it means?

 

ஒவ்வொரு ஆண்டும் அந்தாண்டிற்கான சிறந்த ஆங்கில வார்த்தையை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சகம் வெளியிடும். அந்த வகையில், 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த வார்த்தையாக ரிஸ் (Rizz) என்ற வார்த்தையை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சகம் தேர்வு செய்து வெளியிட்டுள்ளது.

 

2023 ஆம் ஆண்டு மக்கள் மனநிலை ஆர்வம் மற்றும் அக்கறைகளை பிரதிபலிக்கும் வகையில், 8 சிறந்த வார்த்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்த 8 வார்த்தைகளில் சிறந்த வார்த்தையை முடிவு செய்வதற்கு ஆக்ஸ்போர்டு அகராதியியலாளர்கள் இடையே பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த வாக்கெடுப்பின் முடிவில், 2023 ஆம் ஆண்டின் சிறந்த வார்த்தையாக ரிஸ் (Rizz) என்ற வார்த்தை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 

 

கடந்த 12 மாதங்களில் இந்த ரிஸ் (Rizz) என்ற வார்த்தை அதிக அளவு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது என்று கூறப்படுகிறது. இந்த வார்த்தை, காதலை வெளிப்படுத்துதல் அல்லது கவர்ச்சிக்கான இணைய மொழியாக பெரும்பாலும் இளைஞர்களால் பயன்படுத்தப்படுகிறது. 

 

ரிஸ் என்ற வார்த்தைக்கு ஆக்ஸ்போர்டு அகராதி விளக்கம்: ஸ்டைல், வசீகரம் அல்லது கவர்ச்சி; காதல் அல்லது பாலியல் இணையரை ஈர்க்கும் திறன். சுருக்கமாக, இது Charisma என்ற வார்த்தையின் மையப்பகுதி. ரிஸ் (to Rizz up) என்ற சொல்லை வினைச் சொல்லாகவும் பயன்படுத்தலாம். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மக்களுக்குத் திடீர் பாதிப்பு; ஆக்ஸ்ஃபோர்டு தடுப்பூசி செலுத்துவதை நிறுத்திய உலக நாடுகள்!

Published on 12/03/2021 | Edited on 13/03/2021

 

OXFORD VACCINE

 

உலகை ஆட்டிப்படைத்து வரும் கரோனாவிற்கு எதிராக, சில நாடுகள் தடுப்பூசியைக் கண்டறியும் முயற்சியில் இறங்கினர். அதில், அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தடுப்பூசியைக் கண்டுபிடித்து மக்களுக்குச் செலுத்தத் தொடங்கியது மட்டுமில்லாமல், பல்வேறு உலக நாடுகளுக்கும் வழங்கின. 

 

இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ராஜெனெகா நிறுவனமும் இணைந்து தயாரித்த தடுப்பூசி, மக்கள் பயன்பாட்டிற்கு வந்தவுடன் பிற நாடுகளுக்கும் வழங்கப்பட்டது. இந்தநிலையில், டென்மார்க் நாடு, இந்த தடுப்பூசி செலுத்திக்கொண்ட மக்களுக்கு இரத்த உறைவு ஏற்படுவதாகக் கூறி, தடுப்பூசி செலுத்துவதை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து ஐஸ்லாந்து, நார்வே, ஆஸ்திரியா, இத்தாலி, ருமேனியா, எஸ்டோனியா, லாட்வியா, லிதுவேனியா மற்றும் லக்சம்பர்க் ஆகிய நாடுகளும் அதே காரணத்தைக் கூறி தடுப்பூசி செலுத்துவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.

 

இந்தநிலையில் உலக சுகாதார நிறுவனம், ஆக்ஸ்ஃபோர்டு தடுப்பூசியைப் பயன்படுத்தலாம் எனத் தெரிவித்துள்ளதோடு, தாங்கள் அந்த தடுப்பூசி குறித்து ஆய்வுசெய்து செய்து வருவதாகவும் கூறியுள்ளது. அதேசமயம் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில், தடுப்பூசியால் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்பதால் தடுப்பூசி செலுத்தும் பணியைத் தொடரப்போவதாக தெரிவித்துள்ளன. 'ஆக்ஸ்ஃபோர்டு-அஸ்ட்ராஜெனெகா' தடுப்பூசியை இந்தியாவில், சீரம் நிறுவனம் 'கோவிஷீல்ட்' என்ற பெயரில் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 


 

Next Story

இந்தியாவில் கரோனா தடுப்பூசிக்கு நிபுணர் குழு ஒப்புதல்!

Published on 02/01/2021 | Edited on 02/01/2021

 

covid 19 vaccine

 

அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டு, சில நாடுகளில் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கும் வந்துவிட்டது. இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் மருந்து உற்பத்தி நிறுவனமான அஸ்ட்ராஜெனெகாவும் இணைந்து தயாரித்த தடுப்பூசிக்கு இங்கிலாந்து சமீபத்தில் அனுமதி வழங்கியது. 

 

இங்கிலாந்தில் அனுமதியளிக்கப்பட்ட அந்த தடுப்பூசியை, இந்தியாவில் ‘கோவிஷீல்ட்’ என்ற பெயரில் சீரம் நிறுவனம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனெகாவுடன் இணைந்து தயாரித்ததோடு, இந்தியாவில் பயன்படுத்த அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தது.

 

இந்நிலையில் மத்திய மருந்து தரக் கட்டுப்பாடு அமைப்பின் சிறப்பு நிபுணர் குழு, நேற்று கூடி ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசி குறித்து ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனைக்குப் பிறகு, இந்தியாவில் கோவிஷீல்ட் தடுப்பூசியை அவசரகால அடிப்படையில் பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.

 

இருப்பினும் இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கிய பின்னரே, இந்தியாவில் தடுப்பூசி பொதுவான பயன்பாட்டிற்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.