
வளர்ந்த பொருளாதார நாடுகளாகக் கருதப்படும் ஏழு நாடுகளின் கூட்டமைப்பு ஜி-7 கூட்டமைப்பு என அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் இந்த நாடுகளுக்கு இடையேயான கூட்டங்களில் பொருளாதார முன்னேற்றம், வணிகம் சார்ந்த பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். இந்த கூட்டமைப்பில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளது.
வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் ஜி-7 மாநாடு, இந்தாண்டு கனடாவில் வரும் ஜூன் 15ஆம் தேதி 17ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த ஜி-7 மாநாட்டில் பங்கேற்க கனடா பிரதமர் மார்க் கார்னி அழைப்பு விடுத்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று (16-06-25) மற்றும் நாளை (17-06-25) ஆகிய நாட்களில் பங்கேற்கிறார். கனடாவில் இருக்கும் பிரதமர் மோடி, அங்கு நடக்கும் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவிருக்கிறார். முன்னதாக சைப்ரஸ், குரோஷியா, கனடா ஆகிய நாடுகளுக்கு அரசுமுறையாக பயணம் மேற்கொண்டார். ஜி-7 கூட்டமைப்பில் உறுப்பினராக இல்லாத போதிலும், இந்தியா கடந்த சில ஆண்டுகளாக சிறப்பு அழைப்பாளராக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.