President Gotabhaya Rajapaksa accept resignation letter from cabinet

Advertisment

இலங்கையில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. இதன் காரணமாக இலங்கையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பால், மாவு போன்ற உணவுப் பொருட்கள், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு கிடைக்காததால் வெகுண்டெழுந்த மக்கள், ராஜபக்சே சகோதரர்கள் அரசியலிலிருந்து வெளியேறக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மகிந்த ராஜபக்சே தலைமையிலான அமைச்சரவையில் பதவி வகித்துவந்த அனைத்து அமைச்சர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அனைத்து அமைச்சர்களும் தங்களது ராஜினாமா கடிதத்தை பிரதமர் மகிந்த ராஜபக்சேவிடம் அளித்துள்ளதாக கல்வித்துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தனா தெரிவித்துள்ளார். இதில் ராஜபக்சேவின் சகோதரரான பசில் ராஜபக்சேவும், ராஜபக்சேவின் மகனான நமல் ராஜபக்சேவும் அடக்கம்.

இந்தச் சூழலில், அதிபர் கோத்தபய ராஜபக்சேவை சந்தித்து அனைத்து அமைச்சர்களின் ராஜினாமா கடிதத்தையும் பிரதமர் மகிந்த ராஜபக்சே அளித்தார். 26 அமைச்சர்களின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்ட கோத்தபய ராஜபக்சே, அனைத்து கட்சிகள் அடங்கிய காபந்து அரசினை அமைக்க அழைப்பை விடுத்துள்ளார். விரைவில் புதிய அமைச்சரவையை கோத்தபய ராஜபக்சே அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.