Skip to main content

 நீட்,  நெக்ஸ்ட் இரண்டு தேர்வுகளையும் எதிர்ப்போம்- நாராயணசாமி உறுதி

Published on 22/07/2019 | Edited on 22/07/2019

 

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களுக்கு  நேர்காணல் அளித்தபோது கூறியதாவது:-

’’மாநில பாடத்திட்டத்தில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்வினால் பாதிப்பு ஏற்படும் என்பதால் நீட் தேர்வினை ரத்துசெய்யக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தினோம். புதுச்சேரி சட்டமன்றத்திலும் நீட் தேர்வினை ரத்து செய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினோம். ஆனால் மத்திய அரசு அதற்கு எவ்வித முகாந்திரமும் இல்லாமல் காலம் தாழ்த்தி வருகிறது. தற்போது நாடாளுமன்றத்திலும் தமிழக, புதுச்சேரி எம்.பி.க்கள் நீட் தேர்வினை ரத்து செய்யக்கோரி வலியுறுத்தி வருகின்றனர்.

 

n


இதற்கிடையே மத்திய அரசு தேசிய மருத்துவ கவுன்சில் அமைக்க அமைச்சரவையில் முடிவு செய்துள்ளது. அதற்கான சட்ட வரையறை தயார் செய்து தாக்கல் செய்ய முயற்சி செய்து வருகிறது. இதனால் புதுச்சேரி, தமிழக மாணவர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள். தற்போது கல்வியானது மத்திய, மாநில அரசுகளின் பட்டியலில் உள்ளது. அதை படிப்படியாக மத்திய அரசின் பட்டியலுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

 

அதற்கு முதல்கட்ட முயற்சிதான் இறுதியாண்டு படிக்கும் மருத்துவ மாணவர்கள் நெக்ஸ்ட் எனப்படும் பொதுத்தேர்வு எழுத வேண்டும் என்று ஒன்றை புகுத்த உள்ளனர். 4½ ஆண்டுகள் மருத்துவ படிப்பு படித்துவிட்டு அதன்பின் தேர்வு எழுத வேண்டும் என்றால் மருத்துவ கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் தேவையா? என்ற கேள்வி எழும்புகிறது. எல்லா அதிகாரங்களும் மத்திய மருத்துவ கவுன்சிலுக்கே சென்று சேருகிறது. 


இது ஜனநாயகத்துக்கு பேரிழப்பு. இந்த தேர்வின் மூலம் மாநில அரசுகளின் உரிமை பறிக்கப்படுகிறது. இதனை நாங்கள் எதிர்க்கிறோம். காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் இதற்கு எதிராக குரல் கொடுப்பார்கள். நீட், நெக்ஸ்ட் என்று தேர்வுகளை கொண்டு வந்து மத்திய அரசு மாணவர்களுக்கு எதிராக செயல்படுகிறது. இந்த தேர்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர், உள்துறை மந்திரி, மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரிக்கு கடிதம் எழுத உள்ளேன்.

 

மருத்துவ மாணவர்களுக்கு இப்போது நடத்தப்படும் தேர்வு முறையே சிறப்பாக உள்ளது. அதை மாற்றி இறுதியாண்டில் பொதுத்தேர்வு எழுதுவது என்பதை ஏற்க முடியாது. இதுகுறித்து புதுவை சட்டமன்றத்திலும் விவாதிக்கப்படும்.’’

சார்ந்த செய்திகள்

Next Story

“இரும்புக் கரம் கொண்டு ஒடுக்காவிடில்...” - கமல்ஹாசன் கண்டனம்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
kamal about pudhucherry child issue

புதுச்சேரி மாநிலம் சோலை நகர் பகுதியைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி ஒருவர் அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வந்தார். கடந்த சனிக்கிழமை வழக்கம் போல தெருவில் தனது நண்பர்களுடன் விளையாட சென்றார். ஆனால், சிறுமி மாலை ஆகியும் வீடு திரும்பாததால், சிறுமியின் பெற்றோர் பல இடங்களில் தேடினர். சிறுமி காணாமல் போனது குறித்து முந்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். போலீசார் அக்கம்பக்கத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து சிறுமியை தேடி வந்தனர். அதனடிப்படையில் நேற்று மதியம் அங்குள்ள அம்பேத்கர் நகர் சாக்கடை கால்வாயில் சந்தேகத்திற்கிடமாக மூட்டை ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற போலீசார் மூட்டையை கைப்பற்றிப் பிரித்து பார்த்த போது அதில் சிறுமி கை, கால்கள் கட்டப்பட்டு கிடந்தார்.

இந்த கொலையில் கஞ்சா குடிக்கும் இளைஞர்கள் சிறுமியின் கை கால்களை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்துள்ளனர் என சிறுமியின் தந்தை பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விசாரணையில் அந்த பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞன் மற்றும் அவனுக்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முற்பட்டபோது, சிறுமி மயங்கி விழுந்துள்ளதால் அவரை கொலை செய்து மூட்டை கட்டி சாக்கடையில் வீசி இருப்பது தெரியவந்தது. 

இந்தச் சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்கள் மூலம் பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், எங்கே போகிறோம்? என்ற தலைப்பில் நிறைய சம்பவங்களின் மேற்கோள்காட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, “புதுச்சேரியில் 8 வயது சிறுமி கடத்திக் கொல்லப்பட்டு சாக்கடையில் வீசப்பட்டிருக்கிறாள். உலகின் பாதி நாடுகளைச் சுற்றிப் பார்த்துவிட்டு இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டுப் பெண்ணை ராஞ்சியில் ஒரு கும்பல் வன்புணர்வு செய்திருக்கிறது. மங்களூருவில் காதலிக்க மறுத்த பள்ளி மாணவியின் முகத்தில் ஆசிட் வீசப்பட்டுள்ளது. சென்னையில் காதல் திருமணம் செய்துகொண்ட பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞன் பெண்ணின் சகோதரனால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளான். குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பல கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. 

ஒரு சமூகமாக நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம் எனும் ஆழமான ஐயத்தை இந்தச் சம்பவங்கள் ஏற்படுத்துகின்றன. ஒருபுறம் வளர்ச்சி, வல்லரசு, நல்லாட்சி என்று பெருமை பேசிக்கொண்டிருக்கிறோம். மறுபுறம் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற, போதையின் பிடியில் சீரழிகிற, சாதி மத வெறி பிடித்தாட்டுகிற சமூகமாக மாறிக்கொண்டிருக்கிறோம். மானுட நேயத்தைத் தொலைத்துவிட்டு மிருக நிலைக்குத் திரும்புவதை வளர்ச்சி என்று கருத முடியுமா? குற்றங்கள் எதுவாயினும், அதன் காரணிகள் எவையாக இருந்தாலும் எல்லாவற்றுக்குப் பின்னாலும் இருப்பது மனிதத்தன்மையை மரத்துப்போகச் செய்யும் போதைவஸ்துகள்தான். போதை வஸ்துகள் சகஜமாகப் புழங்கும் தேசத்தில் பெண்களும் குழந்தைகளும் பாதுகாப்பாக வாழவே முடியாது என்பது நிதர்சனம். இந்தச் சீரழிவை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்காவிடில் எதிர்காலம் நம்மை மன்னிக்காது. போதைப் பொருட்களுக்கு எதிரான நமது குரல் வலுக்கட்டும். சமூகத்தைச் சீரழிக்கும் போதைக் கும்பலுக்கு எதிராக நம் எல்லோரது கரங்களும் இணையட்டும். போதையில்லா தேசத்திற்குப் பாதை போட ஒவ்வொருவரும் களமிறங்குவோம்” என குறிப்பிட்டுள்ளார். 

Next Story

ரஜினி பாட்டு பாடிய ஜப்பானிய ரசிகர் - வீடியோ வைரல்

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
japanese sing rajinikanth muthu movie song

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ மாணவர்களுக்கான பன்னாட்டு வணிகத்துறை சார்பில் தொழிற்சாலை - கல்வி நிறுவனங்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. மொத்தம் மூன்று நாள் நடக்கும் இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் ஜப்பான் நாட்டு ரெட்ரோ நிறுவனத்தின் முன்னாள் பொது மேலாளர் கோபுகி சேன் கலந்து கொண்டார். 

அப்போது நடந்த கருத்தரங்கில் தமிழ் மொழி குறித்து பேசிய அவர், தமிழ் தனக்கு நன்றாகவே தெரியும் என்றும், தமிழ் சினிமா பாடலும் பாடுவேன் என்றும் தெரிவித்திருந்தார். இறுதியாக ரஜினியின் முத்து படத்தில் இடம்பெற்ற ‘ஒருவன் ஒருவன் முதலாளி...’ பாடலை முழுவதுமாக பாடி அசத்தினார். அதை அங்கிருந்த மாணவர்கள் உள்பட அனைவருகளும் கைதட்டி ரசித்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. 

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, மீனா, சரத்பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் 1995 ஆம் ஆண்டு வெளியான படம் 'முத்து'. கவிதாலயா ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். ரஜினியின் ஸ்டைல், காமெடி, ஆக்‌ஷன் என கமர்ஷியல் படங்களுக்கு ஏற்ற அனைத்து அம்சங்களும் இந்தப் படத்தில் இருந்ததால் ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர். கிட்டத்தட்ட 170 நாட்களுக்கு மேல் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடியது. மேலும் ஜப்பானில் மட்டும் 180க்கும் மேற்பட்ட நாட்கள் வெற்றிகரமாக ஓடியது. அங்கு வசூலிலும் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.