Skip to main content

பாலஸ்தீன விவகாரம்; ஐரோப்பிய நாடுகள் எடுத்த அதிரடி முடிவு!

Published on 22/05/2024 | Edited on 22/05/2024
the Palestinian issue; Action decision taken by European countries

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்தது. இதுவரை 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் ஹமாஸ் அமைப்பின் கடைசி நபரை அழிக்கும் வரை ஓயமாட்டோம் என்று சபதம் எடுத்துள்ள இஸ்ரேல் ராணுவம் காசாவை நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது. 

the Palestinian issue; Action decision taken by European countries

இத்தகைய சூழலில் தான் ஐக்கிய நாடுகள் அவையில் பாலஸ்தீனத்தை முழு நேர உறுப்பினராகச் சேர்க்க வேண்டும் என்று அரபு நாடுகள் கூட்டமைப்பு தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தன. இந்த தீர்மானத்தின் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் அவையின் அவசர கூட்டம் கடந்த 10 ஆம் தேதி (10.05.24) கூடியது. இந்த கூட்டத்தில் பாலஸ்தீனத்தை ஐ.நா அவையில் முழு நேர உறுப்பினராகச் சேர்ப்பது தொடர்பான அறிக்கை மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் 193 நாடுகள் உறுப்பினர்கள் கொண்ட ஐ.நா சபையில், இந்தியா உள்ளிட்ட 143 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.

இந்த தீர்மானத்திற்கு அமெரிக்கா, இஸ்ரேல், ஹங்கேரி, அர்ஜெண்டினா, பப்புவா நியூ கினியா உள்ளிட்ட 9 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து எதிராக வாக்களித்தன. மேலும் 25 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தன. இதன் அதிக பெரும்பான்மை ஆதரவின் மூலம், பாலஸ்தீனம் ஐ.நா சபையில் முழு நேர உறுப்பினராக இருக்கவிருக்கிறது. 

the Palestinian issue; Action decision taken by European countries

இந்நிலையில் பாலஸ்தீனத்தை தனி நாடாக ஸ்பெயின், அயர்லாந்து மற்றும் நார்வே ஆகிய 3 ஐரோப்பிய நாடுகளும் அங்கீகரித்துள்ளன. அதே சமயம் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ள ஸ்பெயின், அயர்லாந்து மற்றும் நார்வே ஆகிய 3 நாடுகளில் இருந்து தூதரக அதிகாரிகளை இஸ்ரேல் திரும்பப் பெற்றுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை செய்வதற்காக தமது நாட்டுத் தூதுவர்களைத் திரும்ப அழைத்துள்ளதாக இஸ்ரேல் விளக்கம் அளித்துள்ளது.

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்காமல் மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியை ஏற்படுத்த முடியாது என நார்வே பிரதமர் ஜோனாஸ் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மே 28 ஆம் தேதி வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதே போன்று பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க பல்வேறு ஐரோப்பிய நாடுகள் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்