Skip to main content

"காஷ்மீர் மக்கள் முஸ்லிம் உலகில் இருந்து நடவடிக்கையை எதிர்பார்க்கிறார்கள்" - இம்ரான் கான்!

Published on 20/12/2021 | Edited on 20/12/2021

 

imran khan

 

ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்துள்ள தலிபான்கள், தங்களது இடைக்கால ஆட்சியை நடத்திவருகின்றனர். இந்தநிலையில், ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடுமையான உணவு பஞ்சமும் ஏற்பட்டுள்ளது. தலிபான்களுக்கு முன்னதாகவே அங்கு 80 சதவீத மக்கள் போதுமான உணவு கிடைக்காமல் தவித்த நிலையில், தலிபான்கள் நாட்டைக் கைப்பற்றிய பிறகு போதுமான உணவு கிடைக்காமல் தவிக்கும் மக்களின் நிலை 93 சதவீதமாக உயர்ந்துள்ளதாக உலக உணவு திட்டம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

 

இந்தநிலையில் 57 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட இஸ்லாமிய நாடுகள் ஒத்துழைப்பு அமைப்பு நேற்று கூடி, ஆப்கானிஸ்தான் சூழ்நிலை குறித்து விவாதித்தனர். இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தலிபான் அரசு கவிழ்ந்தால் சர்வதேச அளவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு அச்சுறுத்தலாக மாறும் எனக் கூறியுள்ளார்.

 

இது தொடர்பாக இம்ரான் கான் கூறியுள்ளதாவது; வெளிநாடுகளிலிருந்து வரும் உதவி வறண்டு போனால், வெளிநாட்டு இருப்புக்கள் முடக்கப்பட்டால், வங்கி அமைப்பு முடக்கப்பட்டால், ஆப்கானிஸ்தான் மட்டுமல்ல எந்த நாடும் வீழ்ச்சியடையும். தாலிபான்களுடன் இருபது வருடமாக பிரச்சனை இருந்தாலும், 40 மில்லியன் ஆப்கானிஸ்தான் குடிமக்களிடமிருந்து ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தை பிரிக்க வேண்டும் என்று அமெரிக்காவிடம் பேசினேன். ஆப்கானிஸ்தானுக்கு வெளிநாட்டு உதவிகள் கிடைக்க, மனித உரிமைகள், பெண் உரிமைகள் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கம் போன்ற நிபந்தனைகளை அமெரிக்கா வைத்துள்ளது. ஒவ்வொரு சமூகத்திலும் மனித உரிமைகள் மற்றும் பெண்களின் உரிமைகள் வேறுபட்டவை. மனித உரிமைகள் மற்றும் பெண்களின் உரிமைகள் பற்றி நாம் பேசும்போது, ​​​​நாம் கலாச்சாரங்களைப் பற்றி உணர வேண்டும். முன் நிபந்தனைகளுக்கு இணங்க தலிபான்கள் தயாராக உள்ளனர் என்றார். உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், ஆப்கானிஸ்தான் குழப்பத்தை நோக்கிச் செல்லும்.

 

அரசு ஊழியர்கள்,மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோருக்கு சம்பளம் கொடுக்க முடியாத எந்த அரசும் கவிழ்ந்து விடும். பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடும் திறன் ஆப்கானிஸ்தான் அரசுக்கு இல்லையென்றால், ஐஎஸ் பயங்கரவாதக் குழு அச்சுறுத்தலாக மாறும்.சர்வதேச அளவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட ஐஎஸ் அமைப்பிற்கு வல்லமையுள்ளது. நிலையான ஆப்கானிஸ்தான் அரசால் மட்டுமே அதை சமாளிக்க முடியும். இவ்வாறு இம்ரான் கான் தெரிவித்தார்.

 

இம்ரான் கான் தனது பேச்சின் நடுவே காஷ்மீர் விவகாரத்தையும் இழுத்தார். அவர், "பாலஸ்தீனம் மற்றும் காஷ்மீர் மக்கள், தங்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக முஸ்லிம் உலகில் இருந்து ஒரு ஒருங்கிணைந்த நடவடிக்கையை எதிர்பார்க்கிறார்கள்" எனக் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இம்ரான்கான் வழக்கில் புதிய திருப்பம்; பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
 Pakistan court action order on New twist in Imran Khan case

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான்கான், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார். தன்னுடைய பதவிக் காலத்தில், தனக்குக் கிடைத்த பரிசுப் பொருட்களை கருவூலத்தில் சேர்க்காமல் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி ஆகிய இருவரும் விற்பனை செய்து சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் பின், கடந்த 2022 ஆம் ஆண்டு நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வியடைந்த இம்ரான்கான் தனது பிரதமர் பதவியை இழந்தார்.

இதனையடுத்து, அல்-காதிர் அறக்கட்டளை முறைகேடு மற்றும் பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களைக் கசியவிட்ட சிபர் வழக்கு எனப் பல்வேறு வழக்குகள் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிராகத் தொடரப்பட்டது. பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசியவிட்டதாகக் கூறி தொடரப்பட்ட ‘சிபர்’ வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  இந்த நிலையில் ‘சிபர்’ வழக்கை விசாரித்து வந்த பாகிஸ்தான் நீதிமன்றம் கடந்த ஜனவரி 30ஆம் தேதி இம்ரான் கானிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 

அதே வேளையில், தனக்குக் கிடைத்த பரிசுப் பொருட்களை கருவூலத்தில் சேர்க்காமல் விற்று சொத்து சேர்த்த வழக்கை கடந்த ஜனவரி 31ஆம் தேதி பாகிஸ்தான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி இருவரும் குற்றவாளி என்று கூறி இருவருக்கும் தலா 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த சிறை தண்டனை காரணமாக அவர் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவாகியிருந்தது. 

இந்த நிலையில், பரிசுப் பொருட்களை கருவூலத்தில் சேர்க்காமல் விற்று சொத்து சேர்த்த வழக்கில் இம்ரான்கானுக்கு, அவரது மனைவிக்கும் இஸ்லாமாபாத் விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, இம்ரான்கான் தரப்பில் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான வழக்கு விசாரணை இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது. 

அந்த தீர்ப்பில், இம்ரான்கானுக்கும், அவரது மனைவிக்கு வழங்கப்பட்ட 14 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார். மேலும், சிறைத் தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு மனு, ரம்ஜான் விடுமுறைக்கு பிறகு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படும் என்று தெரிவித்தார். 

Next Story

குடியுரிமை திருத்தச் சட்டம்; இந்திய அரசுக்கு தாலிபான் அறிவுறுத்தல்!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Afghanistan has advised that the CAA should be implemented on a non-religious basis

பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசால் கடந்த 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் (C.A.A.) கொண்டுவரப்பட்டது. அதில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன.

அதாவது இந்த சட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க சி.ஏ.ஏ. வகை செய்கிறது. அதே சமயம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறும் இஸ்லாமிய மக்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்படவில்லை. மேலும் தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவும் சிஏஏ சட்டத்தில் வழிவகை செய்யப்படாததும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி இருந்தார். இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் கடந்த 11 ஆம் தேதி அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது.

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு, பல்வேறு எதிர்க்கட்சிகள், தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயனும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் தங்கள் மாநிலத்தில் சி.ஏ.ஏ சட்டம் அமல்படுத்தப்பட மாட்டாது என்று கூறி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையில், சி.ஏ.ஏ சட்டத்தை ரத்து செய்வதில் சாத்தியம் இல்லை எனவும், அந்த சட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக கூறியிருந்தார்.  

இந்த நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்தை மதவேறுபாடு இன்றி அமல்படுத்தவேண்டும் என தாலிபான் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக  தாலிபான் அரசின்(ஆப்கானிஸ்தான் அரசு) அரசியல் தலைமை அலுவலக தலைவர் சுகைல் ஷாகீன், “இந்தியாவில் சிறுபான்மையினராக உள்ள முஸ்லிம்கள் சம உரிமையுடன் நடத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். இந்தியாவில் புதிதாக அமல் செய்யப்பட்டிருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத வேறுபாடு இன்றி அமல்படுத்த வேண்டும். அந்த சட்டத்தில் முஸ்லிம்களையும் சேர்க்க வேண்டும். ஆப்கானிஸ்தானில் சீக்கியர்கள், இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் சுதந்திரமாக, பாதுகாப்பாக உள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.