Skip to main content

24 ஆயிரத்தை கடந்த உயிரிழப்புகள்; சிக்கலில் துருக்கி அதிபர் 

Published on 11/02/2023 | Edited on 11/02/2023

 

Over 24 thousand casualties; Turkish president in trouble

 

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

 

துருக்கியில் காஸியண்டெப் நகரில் கடந்த 6 ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 4.17 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு பிற்பகலில் எல்பிஸ்டான் பகுதியில் 7.5 ரிக்டர் அளவில் மேலும் ஒரு நிலநடுக்கமும், 3வது முறையாக 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கமும் ஏற்பட்டன. நிலநடுக்கத்தில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் சரிந்ததால் குடியிருப்புகளில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.  நிலநடுக்கப் பாதிப்பில் துருக்கி, சிரியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. துருக்கி அதிபர் எர்டகோன் ஒவ்வொரு நாளும் வேறு வேறு மாகாணங்களுக்குச் சென்று பார்வையிட்டு மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தி வருகிறார்.

 

மீட்புப் பணிகள் அனைத்து பகுதிகளிலும் முடுக்கிவிடப்பட்ட நிலையில் சிறுவர்கள், பச்சிளம் குழந்தைகள், வளர்ப்புப் பிராணிகள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றனர். மீட்புப் பணிகளில் இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகள் துருக்கிக்கும் சிரியாவிற்கும் ஆதரவுக் கரம் நீட்டியுள்ளன. நிலநடுக்கம் ஏற்பட்டு 5 நாட்கள் முடிவடைந்த நிலையில் நேற்றும் மக்களை உயிருடனும் சடலமாகவும் மீட்ட வண்ணம் உள்ளனர். நிலநடுக்கம் ஏற்பட்டு நாட்கள் கடக்கும் நிலையில் பலியானோர் எண்ணிக்கை அதிகமாகலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இருந்த போதும் காஸியெண்டெப் மாகாணத்தில் 94 மணி நேரம் இடிபாடுகளில் சிக்கி இருந்த 17 வயது சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டார். அதுபோல் பலரும் உயிருடன் மீட்கப்பட்டு வருகின்றனர். மீட்புப் பணிகளுக்காக உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியமைப்புகளும் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளும், போயிங் போன்ற நிறுவனங்களும் நிதியுதவிகளை அறிவித்து உதவி வருகிறது.

 

இரு நாடுகளிலும் தற்போது வரை ஏற்பட்ட உயிரிழப்புகள் 24 ஆயிரத்தை தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என மீட்புப் பணிகளில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.  இந்நிலையில், துருக்கியில் வரும் மே மாதம் 14 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் எர்டகோன் மீண்டும் போட்டியிடும் வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் துருக்கியில் இந்நிலை தொடர்வதால் எதிர்க்கட்சிகளுக்கு சாதகமான சூழல் நிலவுகிறது. பேரிடர் சூழலால் தேர்தலை ஒத்திவைக்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Powerful earthquake in Japan

தைவான் நாட்டின் தலைநகர் தைபேயில் உள்ள கிழக்கு கடற்கரை பகுதியில் நேற்று (03.04.2024) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவானது. சுமார் 1 மணி நேரத்தில் 11 முறை நில அதிர்வு உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் கட்டடங்கள், மெட்ரோ ரயில்கள், மேம்பாலங்கள் குலுங்கின. நில நடுக்கம் காரணமாக ஒரு சில இடங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்தன.

இதனால், மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். தைவானில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகி  இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. மேலும்  படுகாயம் அடைந்த 800க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் முன்னெச்சரிக்கையாக இந்தோனேசியா மற்றூம் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் பேரிடர் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கிடையே தைவானில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஜப்பானில் சுனாமிக்கான முன்னெச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. முன்னதாக ஜப்பானில் உள்ள 2 தீவுகளில் சுனாமி அலைகள் தாக்கியதாகவும் தகவல் வெளியாகின. ஜப்பான் நாட்டின் ஒகினவா மாகாண தெற்கு கடலோரப் பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் ஜப்பானின் ஹொன்ஷூவின் கிழக்கு கடற்கரை பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளொகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.3 ரிக்டர் ஆக பதிவாகியுள்ளது. 

Next Story

தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
Powerful earthquake in Taiwan; Tsunami warning in Japan

தைவானில் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தைவான் நாட்டின் தலைநகர் தைபேயில் உள்ள கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று (03.04.2024) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளது. 1 மணி நேரத்தில் 11 முறை நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் கட்டடங்கள், மெட்ரோ ரயில்கள், மேம்பாலங்கள் குலுங்கி உள்ளன. நில நடுக்கம் காரணமாக ஒரு சில இடங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன.

இதனால், மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். தைவானில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது.

அதே சமயம் தைவானில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஜப்பானில் சுனாமிக்கான முன்னெச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜப்பானில் உள்ள 2 தீவுகளில் சுனாமி அலைகள் தாக்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. ஜப்பான் நாட்டின் ஒகினவா மாகாண தெற்கு கடலோரப் பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.