Skip to main content

இலங்கையில் ஏப்ரல் 18 முதல் பங்குச்சந்தையை தற்காலிகமாக மூட உத்தரவு!

Published on 16/04/2022 | Edited on 16/04/2022

 

Order to close the stock market in Sri Lanka from April 18!

 

இலங்கையில் வரும் ஏப்ரல் 18- ஆம் தேதி முதல் ஐந்து நாட்களுக்குப் பங்குச்சந்தைகளை மூட, பங்கு பரிவர்த்தனை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. 

 

இலங்கையில் நிலவிவரும் மோசமான பொருளாதார சூழலுக்கு மத்தியில், அந்நாட்டின் அரசுக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அரசைக் கண்டித்துப் போராட்டம் நடைபெறும் இடங்களின் முன்பாக காவல்துறை வாகனங்கள் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. இதில் முக்கியமாக தலைநகர் கொழும்பில் அதிபர் மாளிகை அருகே கலிமுகத் திடலில் மக்கள் நடத்தி வரும் தன்னெழுச்சிப் போராட்டத்திற்கு, கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆதரவு வழங்கி வருகின்றனர். 

 

அரசியல் கட்சிகள் அல்லாத மக்கள் ஒன்றிணைத்து நடத்தி வரும் இந்தப் போராட்டத்திற்கு நாடு தழுவிய அளவில் ஆதரவு அதிகரித்து வருகிறது. மக்கள் அங்கேயே சமைத்துச் சாப்பிட்டு, அரசு எதிராகப் போராட்டத்தைத் தொடர்கிறார்கள். இச்சூழலில், இந்த இடத்திற்கு அருகே திடீரென ஏராளமான காலி ட்ரக் வண்டிகள் கொண்டு வரப்பட்டன. 

 

இதனால் போராட்டக்காரர்கள் கைது செய்யப்படலாம் என்று தகவல் பரவிய நிலையில், போராட்டக்காரர்களை அச்சுறுத்தும் அரசின் போக்குக்குப் பலரும் கண்டனம் தெரிவித்தனர். போராட்டக்காரர்களை விரட்ட நினைத்தால், பின்விளைவுகளை அரசுச் சந்திக்க நேரிடும் என்று இலங்கை வழக்கறிஞர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் குரல் எழுப்பிய நிலையில் வாகனங்கள் அங்கிருந்து திரும்பினர். 

 

இப்படி போராட்டம் நாளுக்குநாள் வலுத்துவரும் நிலையில், வரும் ஏப்ரல் 18- ஆம் தேதியிலிருந்து ஐந்து நாட்களுக்கு வர்த்தகத்தை நிறுத்தி வைக்குமாறு, இலங்கை பங்கு பரிவர்த்தனை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. நாட்டின் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு பங்குதாரர்கள் விடுத்த வேண்டுகோளைப் பரிசீலித்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பங்கு பரிவர்த்தனை ஆணைக்குழு இயக்குநர் அறிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
Tamil Nadu fishermen incident for Sri Lanka Navy 

தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. அதோடு படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இத்தகைய சூழலில் நேற்று காலை (08.04.2024) ராமேஸ்வரத்திலிருந்து 250 மேற்பட்ட விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.

அதன்படி ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து விட்டு இன்று (09.04.2024) அதிகாலை 3 மணியளவில் மீனவர்கள் கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது ராட்சத மின் விளக்கு ஒளியை வீசியுள்ளனர். மேலும் ஒலிபெருக்கி மூலம்,‘இங்கிருந்து வெளியேறுங்கள். இல்லையென்றால் உங்களைக் கைது செய்வோம்’ என எச்சரிக்கை செய்துள்ளனர். அதன் பின்னர் மீனவர்களின் பல லட்சம் மதிப்புள்ள படகுகள், மின் பிடி வலைகள் மற்றும் ஜி.பி.எஸ். கருவிகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.

அதே சமயம் இரும்பு கம்பியைக் கொண்டு மீனவர்கள் மீது தாக்குதல் இலங்கை கடற்படையினர் நடத்தியதாகவும், மீனவர்களின் வலைகளை அறுத்து வீசி சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒரு மீனவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மற்றொரு மீனவருக்குத் தோள் மற்றும் இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் காயம் அடைந்த 2 மீனவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தாக்குதல் நடத்திய சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் விடுவிப்பு!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Tamil Nadu fishermen released from Sri Lankan jail

தமிழக மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. இத்தகைய சூழலில் மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 19 மீனவர்கள் கடந்த மார்ச் 6 ஆம் தேதி (6.03.2024) மீன் பிடிக்க கடலுக்குச் சென்றிருந்தனர். இவ்வாறு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். மேலும், மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி கைது செய்தனர். அதோடு மீனவர்கள் பயன்படுத்திய 2 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அதே சமயம் மீனவர்கள் 19 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், மயிலாடுதுறையைச் சேர்ந்த 9 பேர், புதுக்கோட்டையைச் சேர்ந்த 4 பேர், புதுச்சேரி, காரைக்காலில் இருந்து 6 பேர் என மொத்தம் 19 மீனவர்கள் இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அதன் பின்னர் இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அப்போது மீனவர்களை தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் பொன்னாடை போர்த்தி வரவேற்று, அரசின் சார்பில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.