Skip to main content

அடம்பிடிக்கும் அதிபர்! - அதிகரிக்கும் கரோனா 'பலி' எண்ணிக்கை!

Published on 08/04/2021 | Edited on 08/04/2021

 

jair bolsonaro

 

தென் அமெரிக்க நாடான பிரேசிலில், கரோனா தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை மட்டும், 4195 பேர் கரோனாவிற்கு பலியானார்கள். நேற்று (07.04.2021) கரோனாவால் பாதிக்கபட்ட 3,829 பேர் உயிரிழந்தனர். மேலும் நேற்று ஒரேநாளில் 92,625 பேருக்கு கரோனா உறுதியானது.

 

தொடர்ந்து நாடு முழுவதும் கரோனா அதிகரித்து வருவதால், தேசிய அளவிலான ஊரடங்கை அமல்படுத்தவேண்டும் என பிரேசிலில் கோரிக்கை எழுந்துள்ளது. இருப்பினும் அதற்கு அதிபர் ஜெய்ர் போல்சனோரோ மறுப்பு தெரிவித்து வருகிறார். மேலும் தேசிய அளவிலான ஊரடங்கு அமல்படுத்தப்படாது எனத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், "வீட்டில் இருந்துகொண்டு, மற்ற அனைத்தையும் மூடிவிடுங்கள் என்ற அரசியலை நாங்கள் ஏற்கமாட்டோம்" என அவர் கூறியுள்ளார். அதிபரின் இந்த முடிவால், பிரேசிலில் கரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

 

ஜெய்ர் போல்சனோரோ கரோனாவின் முதல் அலையின்போதே ஊரடங்கை அமல்படுத்த தீவிரம் காட்டவில்லை. இதனையடுத்து அங்கு லட்சக்கணக்கான மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதன்பிறகு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதுவரை பிரேசிலில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கரோனவால் உயிரிழந்துள்ளனர் என்பதும், ஜெய்ர் போல்சனோரோ கரோனாவை சாதாரண சிறிய ஃப்ளூ எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அந்த ஏழு பேரின் நோக்கமும் என்னை...'- உதற வைக்கும் ஜார்கண்ட் சம்பவம்

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
'The aim of those seven people was to sexually assault me'- Shocking Jharkhand incident

ஸ்பெயினை சேர்ந்த தம்பதி இந்தியாவிற்கு சுற்றுலா வந்திருந்த நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் கும்பல் ஒன்றால் தாக்கப்பட்டு பலவந்தமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்தில் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை கையில் எடுத்துள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா செல்வதும், சாகச சுற்றுலா பயணங்கள் மேற்கொள்வதும் அண்மையாவே அதிகரித்து வரும் நிலையில், பிரேசிலை சேர்ந்த ஸ்பானிஷ் பெண் ஒருவர் தன்னுடைய கணவருடன் மோட்டார் சைக்கிளிலேயே உலகின் பல்வேறு நாடுகளில் சுற்றுலா மேற்கொண்டு வந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளாக சுமார் 66 நாடுகளுக்கு இந்த தம்பதி பயணம் செய்துள்ளனர். தாங்கள் மேற்கொள்ளும் சுற்றுலா பயணங்கள் தொடர்பான விவரங்களையும், தங்களுடைய சாதனைகளையும் அவ்வப்போது அவர்களுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றி வந்தனர்.

இதுவரை இத்தாலி, ஈரான் என பல நாடுகளுக்கு சென்ற இந்த தம்பதி ஆப்கானிஸ்தான் சென்றதைத் தொடர்ந்து அடுத்த பயணமாக இந்தியாவை தேர்ந்தெடுத்தனர். கடந்த ஆறு மாதத்திற்கு முன்பாகவே இந்தியாவிற்கு வந்த இவர்கள் தென்னிந்தியாவின் முக்கிய பகுதிகள், லடாக், காஷ்மீர், ஹிமாச்சல்பிரதேஷ் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சுற்றுலாத் தலங்களை பார்த்ததோடு, இந்தியாவில் தாங்கள் மேற்கொண்ட சாகச பயணம் குறித்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களிலும் பதிவேற்றினர்.

அதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் ஒன்றாம் தேதி இருவரும் தனித்தனி பைக்கில் ஜார்க்கண்ட் வழியாக பாகல்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அன்று இரவு தும்கா மாவட்டத்தில் உள்ள குர்மஹாட் என்ற ஒரு குக்கிராமத்தில் தற்காலிகமாக டெண்ட் அமைத்து இருவரும் தங்கியுள்ளனர். அப்போது அந்த பகுதிக்கு வந்த இளைஞர்கள் சிலர், இருவரையும் தாக்கியதோடு பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து சமூக வலைத்தளங்களில் அந்த தம்பதி வீடியோ பதிவிட்டுள்ளனர். அந்த பகுதியில் ரோந்து பணிக்கு வந்த காவல்துறையினர், வெளிநாட்டவர் இருவர் பலத்த காயங்களுடன் கிடப்பதை கண்டு அதிர்ந்து, அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்பொழுது பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், தங்களுக்கு நேர்ந்த முழு துயரத்தையும் அப்பெண் போலீசாரிடம் தெரிவித்தார். அவர் சொன்ன அடையாளங்களை வைத்து விசாரித்த நிலையில் குற்றவாளி ஒருவன் சிக்கினான். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

'The aim of those seven people was to sexually assault me'- Shocking Jharkhand incident

போலீசாரின் நடவடிக்கைக்கு பிறகு அந்த ஸ்பெயின் தம்பதி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், 'எங்களுக்கு நடந்ததுபோல் யாருக்கும் நடக்க கூடாது. ஏழு பேர் பாலியல் வன்கொடுமை செய்தனர். எங்களை அடித்து துன்புறுத்தியதோடு எங்களிடமிருந்த உடைமைகளை கொள்ளையடித்தனர். அவர்களின் நோக்கம் எங்களை பாலியல் வன்கொடுமை செய்வதாகவே இருந்தது. இந்த சம்பவம் எங்களுக்கு இந்தியாவில் நடந்தது' என உலக மக்களுக்கு பேரறிவிப்பு செய்துள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவத்தை தாமாக முன்வந்து விசாரிக்க திட்டமிட்டுள்ள ஜார்க்கண்ட் மாநில உயர்நீதிமன்றம், இந்த சம்பவம் குறித்து ஜார்க்கண்ட் மாநில தலைமை செயலாளர், டிஜிபி ஆகியோர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.