![first picture from mars by perseverance](http://image.nakkheeran.in/cdn/farfuture/_KJvNUG1gIaYUdf2OeE1kW22YO-EfJl6EUqsuxhu77s/1613720074/sites/default/files/inline-images/rova-im.jpg)
செவ்வாய் கிரகத்தைப் பற்றி ஆய்வை நடத்தி வரும் விஞ்ஞானிகள், தற்போது அக்கிரகத்தில் உயிர்கள் இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டறியும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர். இதுதொடர்பான ஆராய்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, கடந்த வருடம் ‘பெர்சவரன்ஸ்’ என்ற விண்ணூர்தியை (ரோவர்) செவ்வாய்க்கு அனுப்பியது.
இந்த விண்ணூர்தி செவ்வாய் கிரகத்தில் செய்யும் ஆய்வு மூலம், அங்கு உயிர்கள் இருக்கிறதா என்பது குறித்து தெரிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படும் என ஏற்கனவே நாசா தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த விண்ணூர்தி, கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் பயணம் செய்து நேற்று (18.02.2021) செவ்வாயில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
செவ்வாயில் தரையிறங்கியவுடன் பெர்சவரன்ஸ் விண்ணூர்தி, செவ்வாய் பரப்பைப் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. இந்த கருப்பு - வெள்ளை படத்தை நாசா வெளியிட, அது தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்தப் படத்தில், விண்ணூர்தியின் நிழல் செவ்வாய் கிரகத்தில் படர்ந்திருப்பதும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பெர்சவரன்ஸ் விண்ணூர்தி தரையிறங்கியது, செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது.