Skip to main content

’இப்பச்சைத்துரோகத்தை இனமானத்தமிழர்கள் இனியும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்’- சீமான்

Published on 25/10/2018 | Edited on 25/10/2018
see


 
முல்லைப்பெரியாற்றில் புதிய அணைக் கட்ட கேரள அரசிற்கு மத்திய அரசு அனுமதியளித்திருப்பது தமிழகத்திற்குச் செய்யும் பச்சைத்துரோகம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்த அவரது அறிக்கை:  ’முல்லைப்பெரியாறு அணையின் கீழ்ப்புறத்தில் புதிய அணைக் கட்டுவதற்கானப் பணிகளை முடுக்கிவிட்டுள்ள கேரள அரசின் முயற்சிக்கு மத்தியச் சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியிருப்பது பெரும் அதிர்ச்சியினை அளிக்கிறது. முல்லைப்பெரியாற்று அணையின் குறுக்கே புதிய அணைக் கட்டினால் தமிழகத்தின் ஒப்புதலைப் பெற்ற பிறகே கட்ட முடியும் என்று 2014ஆம் ஆண்டு வழங்கப்பட்டத் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருக்கிறபோது, அதனைத் துளியளவும் மதியாது மத்தியச் சுற்றுச்சூழல்துறை கேரள அரசிற்கு அனுமதி வழங்கியிருப்பது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிக்கிற அதிகார அத்துமீறல். தமிழகத்தின் உணர்வையும், உரிமையையும் காலில் போட்டு மிதித்துப் புறந்தள்ளுகிற தான்தோன்றித்தனம். தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட இப்பச்சைத்துரோகத்தை இனமானத்தமிழர்கள் இனியும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்பதை ஆளும் வர்க்கம் கவனத்தில்கொள்ள வேண்டும்.

 

திண்டுக்கல், இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி ஆகிய 5 மாவட்டங்களிலுள்ள 2 இலட்சம் ஏக்கருக்கு மேலான வேளாண் நிலங்களின் நீர்த்தேவையினையும், பலகோடி மக்களின் குடிநீர்த் தேவையினையும் நிறைவுசெய்துவரும் முல்லைப் பெரியாற்றின் கீழ் புதிய அணை கட்ட அனுமதியளித்திருப்பது முல்லைப்பெரியாற்று உரிமையை மொத்தமாகக் கேரளாவிற்குத் தாரைவார்க்கும் கொடுஞ்செயல். இதன்மூலம் முல்லைப்பெரியாற்றில் வரும் சொட்டு நீரும் தமிழகத்திற்கு இனி சொந்தமில்லை என்கிற நிலை உருவாகிறப் பேராபத்து உள்ளது. 
முல்லைப்பெரியாற்று அணையின் கீழ்ப்பகுதியில் 1214அடி நீளம், 174.6 அடி உயரம் என்கிற விகிதத்தில் புதிய அணையும், அதற்குத் துணையாக 82 அடியில் இன்னொரு அணையும் கட்டப்படவுள்ளது. கேரள மாநிலம், பீர்மேடு வட்டத்திலுள்ள, மஞ்சுமலை கிராமத்தில் அமையவிருக்கிற இப்புதிய அணை கட்டப்படுகிற இடம், வண்டிப் பெரியாரிலிருந்து 8 கி.மீ தொலைவில் இருக்கிறது. 6,63 கோடி திட்டமதிப்பீட்டில் கொண்டுவரப்படும் இத்திட்டத்தின் மூலம் 0.017 டி.எம்.சி அதிக நீரை மட்டுமே தேக்கி வைக்க முடியும். அதேநேரத்தில், முல்லைப்பெரியாறு புலிகள் சரணாலயத்தின் 123 ஏக்கர் வனப்பகுதியானது நீரில் மூழ்கும் ஆபத்திருக்கிறது என்பதன் மூலம் சுற்றுச்சூழல் சமன்பாட்டுக்கு இப்புதிய அணை எதிரானது என்பதனை உணர்ந்துகொள்ள வேண்டும்.

 

முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ள உத்தரவிட்டதோடு, பேபி அணையைப் பலப்படுத்தி அணையின் மொத்த கொள்ளளவான 152 அடியாக அணையின் நீர்மட்டத்தை உயர்த்தவும் வழிகோலியது 2014ல் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பு. ஆனால், கேரள அரசோ இதற்கு நேர்மாறாக அண்மையில் கேரளாவில் பெய்தப் பெருமழையினைக் காரணம் காட்டி புதிய அணை கட்டுவதற்குரிய அனுமதியை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடமிருந்துப் பெற்றிருக்கிறது. கேரளப் பெருவெள்ளத்திற்கு மலைகளைக் குடைந்து சாலைகள், விடுதிகள், சுரங்கங்கள் போன்றவை அமைக்கப்பட்டத்ததும், மின்சார உற்பத்திக்காக தேவையற்று அணைகள் கட்டப்பட்டதுமே முதன்மைக் காரணங்களென ஆய்வுகள் அறுதிபடத் தெரிவிக்கின்றன. கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டு பெரும்பாலான மாவட்டங்கள் நீரில் மூழ்கியதற்கு அதிகப்படியான மழைப்பொழிவுதான் காரணமே ஒழிய, முல்லைப் பெரியாறு போன்ற அணைகள் அல்ல என மத்திய நீர் ஆணையமும் தெளிவுப்படுத்தி (சிடபிள்யுசி) அறிவித்துவிட்டது. இருந்தபோதிலும், புதிதாக அணை கட்டக் கேரள அரசு துடியாய் துடிக்க வேண்டியத் தேவையென்ன? முல்லைப்பெரியாற்று அணை உறுதியாக இருப்பதை உச்ச நீதிமன்றமே உறுதிப்படுத்திவிட்டப் பிறகும், புதிய அணை கட்ட ஒப்புதல் வாங்க வேண்டிய அவசியமென்ன என்கிற வினாக்களுக்கு இதுவரை விடையளிக்கப்படவில்லை.

 

மேற்குத்தொடர்ச்சி மலையைப் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியென அறிவித்திருக்கிற கஸ்தூரி ரங்கன் தலைமையிலான மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் ஆணையத்தின் அறிக்கையின்படி, முல்லைப்பெரியாறு பகுதியில் புதிய அணைகட்டுவது என்பது முழுக்க முழுக்க சுற்றுச்சூழல் சீர்கேட்டை விளைவிக்கும் எனத் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. மாமனிதர் பென்னி குக் அவர்களால் தமிழர்களுக்காகக் கட்டப்பட்ட முல்லைப்பெரியாற்று அணையினைத் தங்களுக்கானதாகச் சொந்தம் கொண்டாடுகிற கேரள அரசு, அவற்றை செயலிழக்கச் செய்துவிட்டு புதிய அணையினைக் கட்டிப் பயன்பாட்டுக் கொண்டு வருவதன்மூலம் முல்லைப்பெரியாற்று உரிமையினை தாங்களே முழுமையாக அபகரித்துக் கொள்ளப் பெரும் சதிச்செயல் புரிகிறது என்பதனை எச்சரிக்கையுணர்வோடு அணுக வேண்டும்.

 

எனவே, முல்லைப்பெரியாற்றின் கீழ்ப்பகுதியில் புதிய அணை கட்டுவதற்குரிய சாத்தியக்கூறுகளை ஆராயக் கேரள அரசுக்கு அனுமதி அளித்திருக்கும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியைத் திரும்பப் பெற வேண்டும் எனவும், முல்லைப்பெரியாற்றின் குறுக்கே அணை கட்டும் கேரள அரசின் சதிச்செயல்களுக்கு ஒருபோதும் துணைபோகக் கூடாது எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக மத்திய அரசை வலியுறுத்துகிறேன். இவ்விவகாரத்தில் தமிழக அரசு உரியச் சட்டப்போராட்டங்களையும், அரசியல் அழுத்தங்களையும் கொடுத்து முல்லைப்பெரியாற்று உரிமையை நிலைநிறுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்துகிறேன்.’’


 

சார்ந்த செய்திகள்

Next Story

“தி.மு.க. அரசு தொடர்ந்து வேண்டாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறது” - சீமான் பிரச்சாரம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 D.M.K. Govt continues to engage in unnecessary work says Seeman campaign

கடலூர் நாடளுமன்ற தொகுதியில்,  நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மணிவாசகத்தை ஆதரித்து கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் வடலூரில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “வள்ளலார் 1867ஆம் ஆண்டு ஏற்றி வைத்த அணையா அடுப்பு இன்று வரை பசிப்பிணியை போக்கி வருகிறது. வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியில் 10 லட்சம் முதல் 15 லட்சம் மக்கள் வரை நின்று வழிபட்டு வருகின்றனர். அந்த இடத்தில் திராவிட மாடல் அரசு, தோண்டி சர்வதேச மையம் அமைக்கப் போகிறது. திடீரென தி.மு.க. அரசிற்கு வள்ளலார் மீது என்ன கரிசனம். இதற்கு முன் இவர்கள் ஆட்சி செய்தார்கள்

அப்போதெல்லாம் வள்ளலாரை  தெரியவில்லையா? காரணம் இந்த சர்வதேச மையம் அமைக்க ரூ100 கோடி நிதி ஒதுக்கி, முதல்வர் ஸ்டாலின் மைத்துனர் பொறுப்பாளராக உள்ளார். சர்வதேச மையம் அமைப்பது மகிழ்ச்சி தான். ஆனால், அதனை மக்கள் கூடி வழிபடும் பெருவெளியில் அமைக்கக்கூடாது வேறு இடத்தில்  அமைத்துக் கொள்ளலாம். தேர்தல் நேரத்தில் இதனை ஏன் செய்ய வேண்டும். இன்னும் இரண்டு நாட்கள் பரப்பரை முடிந்தவுடன் இவர்கள் எப்படி தோண்டுகிறார்கள் என பார்ப்போம் .

ஏர்போர்ட் வேண்டாம் அந்த இடத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்று கூறினால் ஏர்போர்ட் கட்டுவோம் என கூறுகின்றனர். இயற்கை துறைமுகங்கள் இருக்க செயற்கை துறை முகங்கள் ஏன் எனக் கேட்டால் 1111 ஏக்கரில் செயற்கை துறைமுகம் கட்டுவோம் என கூறுகின்றனர். ஏற்கெனவே வ .உ .சி., காமராஜர் பெயரில் இருக்கும் இரண்டு துறைமுகங்களில் 50 சதவீதம் வேலை இல்லாத போது செயற்கை துறைமுகம் எதற்கு? தொடர்ந்து வேண்டாத வேலைகளில் திராவிட மடல் அரசு ஈடுபட்டு வருகிறது.

சர்வதேச சமயத்தை பெருவழியில் அமைக்க வேண்டாம். அரசில் தொடர்ந்து நீங்களே நீடிக்கப் போவதில்லை. சர்வதேச  மையத்தை  பெருவெளியில் அமைத்தால் மீண்டும் பழையபடி அந்த இடத்தில் மக்கள் வழிபடும் நிலைக்கு கொண்டு வரும் வீண் செலவை எங்களுக்கு வைக்காதீர்கள்.  திருவண்ணாமலையில் சிப்காட் வேண்டாம் என மக்கள் போராட்டம் நடத்தினால் அதை அமைச்சர் எ.வ.வேலு மூலம் மீண்டும் கொண்டுவர முயற்சி செய்கின்றார். தில்லியில் போராடிய விவசாயிகளை மீது துப்பாக்கி சூடு நடத்துகிறது மோடி அரசு.

தமிழகத்தில் போராடும் மக்கள் மீது குண்டர் சட்டத்தை போட்டு அடக்குமுறையை கையாளுகிறது தி.மு.க. அரசு. இந்த இரண்டு அரசுகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இந்தியாவில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் ,பி.ஜே.பி. தான் தொடர்ந்து ஆண்டு வருகிறது. கல்வியில் தரம் உயர்ந்திருக்கிறதா? குடிநீருக்கு வழியுள்ளதா? மருத்துவ கட்டமைப்பு உயர்ந்துள்ளதா? எதுவும் இல்லை. மக்கள் துன்பம், துயரம், பசி, பட்டினி, வேலையில்லா திண்டாட்டம் என தொடர்ந்து வருகிறது.

மாற்றம், முன்னேற்றம் எதுவுமே இல்லை. இது ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கான தேர்தல். நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். கடந்த முறை 39 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. ஏதாவது மாற்றத்தை கொண்டு வந்தார்களா. இந்த தொகுதியில் படித்தவர், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர், ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்தவர் மணிவாசகம்  வேட்பாளராக இருக்கிறார். சிந்தித்துப் பார்த்து  அவருக்கு மைக் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்றார்.

நாம் தமிழர் கட்சி தொகுதி தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட நிர்வாகி சீனிவாசன், சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்

Next Story

'கர்நாடகாவில் நீர் இல்ல... காங்கிரஸ் பாஜகவுக்கு இங்க ஓட்டு இல்ல..'-தஞ்சையில் சீமான் பரப்புரை 

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
 'No water in Karnataka... No vote for Congress'-Seeman lobbying in Thanjavur

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூரில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஹிமாயூன் கபீரை ஆதரித்து தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் சாலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரையில் ஈடுபட்டார். அப்பொழுது பேசிய அவர், ''இங்கு வாக்குகேட்டு வரும் காங்கிரஸ் மற்றும் திமுக, பாஜகவின் தலைவர்களின் கருத்து என்னவாக இருக்கிறது. ஒரு சொட்டு தண்ணீர் தர முடியாது எனச் சொல்லும் கட்சிக்கு ஓட்டு கேட்டவர் முதல்வர் ஸ்டாலின். மானமிக்க, மண்ணை நேசிக்கக்கூடிய தலைவனாக இருந்தால் தண்ணி தரவில்லை, உங்களுக்கு எதற்கு ஓட்டு? கூட்டணியும் இல்லை, சீட்டு இல்லை என்று முடிவு எடுத்திருக்க வேண்டுமா வேண்டாமா? ஆனால் காங்கிரசுக்கு 10 சீட்டு கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால் நாம் என்ன முடிவெடுக்க வேண்டும் என்றால் ஒரு சொட்டு தண்ணீர் இல்லை என்றால் ஒரு தமிழரின் ஓட்டும் உனக்கு இல்லை. என்ற முடிவை நாம் எடுக்க வேண்டும். அப்படி தோற்கடித்தால்தான், ஏன் நம்மை தோற்கடித்தார்கள் என அவர்கள் சிந்திப்பார்கள். காவிரியில் மக்களுக்கான நீரை பெற்றுக் கொடுக்க முடியவில்லை; கச்சத்தீவை எடுத்துக் கொடுத்தோம்; மீனவர்கள் வாழ்வுரிமையைப் பாதுகாக்கவில்லை; மீத்தேன் ஈத்தேன் என நிலத்தை நஞ்சாக்கினோம்; முல்லைப் பெரியாற்றில் தண்ணீர் தர மறுத்தோம் அதனால் நம்மை தோற்கடித்து விட்டார்கள் என உணர வேண்டும்.

தமிழக மக்களிடம் ஓட்டை வாங்க வேண்டும் என்றால் அவர்களுடைய உரிமைக்காக பேச வேண்டும். உரிமையை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்ற நிலையை நீங்கள் உருவாக்காத வரை நம்முடைய உரிமையை மீட்க முடியாது. கல்வி மாநில உரிமை அதை எடுத்துட்டு போனது காங்கிரஸ். அப்போது ஆட்சியில் இருந்தது திமுக. இந்த இரண்டு கட்சிகளும் மீண்டும் சேர்ந்து கொண்டு நம்மிடம் ஓட்டு கேட்டு வருகிறது. ஆனால் இதை நாங்கள் நினைவுபடுத்திக் கொண்டே இருப்போம். மறப்பது மக்களின் இயல்பு அதை நினைவு படுத்திக் கொண்டே இருப்பது போராளிகளின் கடமை. மறந்துடாத, விடாதே, அவர்களுக்கு ஓட்டு போடாதே எனச் சொல்லிக்கொண்டு இருக்க வேண்டியதாக இருக்கிறது.

மேகதாதுவில் அணைக் கட்டியே தீருவோம் எனச் சொல்லுகிறது காங்கிரஸ். அணைக் கட்டியே தீர வேண்டும் எனச் சொல்கிறது பாஜக. இதற்கு இங்கே இருக்கின்ற பாஜக தலைவர்கள், வேட்பாளர்களின் கருத்து என்ன? பேச மாட்டார்கள். காரணம் காவிரியில் தமிழர்களுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் எனப் பாஜக சொன்னால் அங்கு காங்கிரஸ் ஜெயிக்கும். காங்கிரஸ் சொன்னால் கர்நாடகாவில் பாஜக ஜெயிக்கும். அற்ப தேர்தல் வெற்றிக்காக, பதவிக்காக மக்களின் உரிமையை பலிகொடுக்க தயாரானவர்கள் இவர்கள். என் உரிமைக்கு, உணர்வுக்கு, உயிருக்கு நிற்காத உனக்கு என் ஓட்டு எதுக்கு என்று கேள்வியை எழுப்ப வேண்டும். நம்முடைய வாழ்க்கையைப் பற்றி கவலைப்படாத இவர்களுக்கு எதற்கு நமது வாக்கு என்ற சிந்தனை மக்களுக்கு வரவேண்டும்'' என்றார்.