malaysia

மலேசியாவில் மாரியம்மன் கோவில் இடமாற்றம் செய்வதை கண்டித்து நடந்த வன்முறையில் 18 வாகனங்கள் தீக்கு இறையாகியுள்ளது. கலவரத்தில் ஈடுபட்டதாக 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மலேசியா, சொலாங்கூர் மாவட்டத்திலுள்ள 127 ஆண்டுகள் பழமையான சீஃபீல்டு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று மலாய் பேசும் மக்களில் ஒரு பிரிவினர் முயற்சித்து வந்தனர்.

Advertisment

இதற்கு அங்குள்ள தமிழர்கள் உள்ளிட்ட 200 இந்தியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த சொலாங்கூர் நீதிமன்றம், கோவிலை இடமாற்றம் செய்ய ஆணை பிறப்பித்தது.

இதனையடுத்து கோவிலை கைப்பற்ற வந்தவர்களிடம் இந்தியர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். அப்போது இரு தரப்பினருக்கு இடையே நடந்த மோதலில், சில நபர்கள் அந்த பகுதியில் இருந்த வாகனங்களை தீவைத்து எரித்தனர். போலிஸார் வாகனங்கள் மீது கற்கள் வீசப்பட்டதால் அந்த இடத்தில் பதற்றம் நிலவியது.

18 வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் தீக்கு இறையானதால் உடனடியாக அந்த பகுதியில் 700க்கும் மேற்பட்ட போலிஸார்கள் குவிக்கப்பட்டனர். கலவரத்தை கலைத்த போலிஸார், கலவரத்தை தூண்டியதாக 17 பேரை கைது செய்தனர். போலிஸாரின் அதிரடி நடவடிக்கையால் கலவரம் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.

Advertisment

இந்த கோவில் 1891 கட்டப்பட்டுள்ளது. 127 ஆண்டுகளாக இக்கோவிலில் பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். கோவில் இடத்தை ஒன்சிட்டி நிறுவனம் வாங்கியதால், கடந்த 2007ஆம் ஆண்டு கோவிலை இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. பின்னர், 2014ஆம் ஆண்டு நீதிமன்றம் கோவிலை வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவிட்ட நிலையில், அதற்கான நிதியை ஒன்சிட்டி நிறுவனம் அளித்தது. கடந்த 22ஆம் தேதியில் இருந்து இக்கோவிலை இடமாற்றம் செய்ய மலாய் குழுவினர் முயற்சி செய்கையில், நேற்று (திங்கள்கிழமை) கலவரம் வெடித்தது.