Skip to main content

புளூட்டோவை மீண்டும் கிரகமாக்குங்கள் - ஆறுவயது சிறுமி நாசாவுக்கு எழுதிய கடிதம்!

Published on 20/02/2018 | Edited on 20/02/2018

2000ஆம் ஆண்டுக்கு முன்னர் பிறந்து வளர்ந்தவர்களிடம் சூரியக்குடும்பத்தில் எத்தனை கிரகங்கள் இருக்கின்றன என்று கேட்டால், யோசிக்காமல் 9 என்று சொல்வார்கள். ஆனால், 2006ஆம் ஆண்டு புளூட்டோ என்ற கிரகம், ஒரு கிரகமாக இருப்பதற்குத் தகுதியற்றது எனக்கூறி அதை சூரியக்குடும்பத்தின் பட்டியலில் இருந்து நீக்கியது சர்வதேச வானவியல் கூட்டமைப்பு.

 

Pluto

 

ஆனால், அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஆறு வயது சிறுமி காரா ஓ’கானர், மீண்டும் புளூட்டோவை ஒரு கிரமாக அங்கீகரியுங்கள் என்ற கோரிக்கையை முன்வைக்கும் கடிதத்தை எழுதி நாசாவுக்கு அனுப்பியுள்ளாள். எண்ணத்திலும், வார்த்தைகளிலும் மழலைமொழி மாறாமல் எழுதியுள்ள அந்தக் கடிதத்தில், ‘நான் கேட்டுக்கொண்டிருந்த பாடலொன்று, புளூட்டோவை மீண்டும் கொண்டுவாருங்கள் என்ற வரியுடன் நிறைவடைந்தது. அது நடக்கவேண்டும் என்பதே என் விருப்பம். புளூட்டோவை மீண்டும் ஒரு கிரகமாக்குங்கள். நான் பார்த்த வீடியோ ஒன்றில் கடைசி கிரகமாக புளூட்டோ இருந்தது. அதில் இருந்தது போலவே, புளூட்டோவை பூமி, புதன், செவ்வாய் போல மீண்டும் ஒரு கிரகமாக அங்கீகரியுங்கள். பூமியோ, இங்கிருக்கும் யாரோ குட்டி கிரகங்களை குப்பைத் தொட்டியில் போட்டுவிடக்கூடாது’ என தெரிவித்திருந்தாள். காராவிற்கு எதிர்காலத்தில் நாசாவில் பணிபுரியவேண்டும் என்பதே கனவு என்பதால், நாசாவிற்கே தனது கடிதத்தை அனுப்பி இருக்கிறாள்.

 

இந்தக் கடிதத்திற்கு நாசாவில் இருந்து பதிலும் கிடைத்துள்ளது. நாசா இயக்குனர் ஜேம்ஸ் கிரீன் தனது பதில் கடிதத்தில், ‘புளூட்டோ குளிராக இருக்கும் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், புளூட்டோவிற்கு இதயம் இருக்கிறது என்பதை யார்தான் ஏற்றுக்கொள்வார்கள்? இந்த கண்கவர் உலகில் விஷயங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. புளூட்டோவைப் பற்றி நாம் நிறைய படிக்க வேண்டி இருக்கிறது. நீ புதிய கிரகம் ஒன்றைக் கண்டுபிடிப்பாய் என்று நான் நம்புகிறேன். நீ உன் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு உன் கனவுகளோடு நாசாவுக்கு வா.. நாங்கள் உனக்காக காத்திருக்கிறோம்’ என எழுதியுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

விண்வெளி செல்லும் இந்திய வீரர்கள்; பிரதமர் மோடி அறிவிப்பு

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
Prime Minister Modi's announcement on Indian astronauts in space

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகப் பிரதமர் மோடி இன்று (27-02-24) காலை கேரளா சென்றார். அதனையடுத்து, அவர் அங்குள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திற்குச் சென்று ககன்யான் திட்டப்பணிகள் குறித்த பணிகளை ஆய்வு செய்தார். அவருடன், கேரளா ஆளுநர் ஆரிஃப் கான், முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் இருந்தனர். 

இதனையடுத்து, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்குச் செல்லும் 4 வீரர்களைப் பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். அதன்படி, குரூப் கேப்டன்கள் பிரசாந்த் பாலகிருஷ்ணன், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப் மற்றும் விங் கமாண்டர் சுபான்ஷுசுக்லா ஆகியோர் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளி செல்லவுள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களுக்கு மிஷன் லோகா பேட்ஜ்களை பிரதமர் மோடி வழங்கினார். 

அதனைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “தேர்ந்தெடுக்கப்பட்ட 4 விண்வெளி வீரர்களைச் சந்தித்து அவர்களை நாட்டுக்கு அறிமுகம் செய்து வைக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர்களுக்கு நாட்டு மக்கள் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய இந்தியாவின் பெருமை நீங்கள் தான்” என்று கூறினார். 

Next Story

கடலூர் கடற்கரையில் விழுந்த எரி விண்கற்கள்; கண்டுபிடித்த மாணவருக்குக் குவியும் பாராட்டுகள்

Published on 25/10/2023 | Edited on 25/10/2023

 

Flaming meteorites fell on Cuddalore coast; Kudos to the student who discovered it

 

கடலூர் கடற்கரையில் விழுந்த எரி விண்கற்களைக் கண்டுபிடித்த மாணவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

 

கடலூர் ஒன்றிய அலுவலகத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணியாற்றி வருபவர் வெங்கடேசன். இவரது மகன் அனீஸ்வர். இவர் கடலூரில் உள்ள கிருஷ்ணசாமி நினைவு மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் சிறு வயது முதல் விண் ஆய்வில் ஆர்வம் கொண்டு வருகிறார். விண் ஆய்வு குறித்து நடைபெறும் போட்டிகளில் இவர் தொடர்ந்து வெற்றிபெற்று வந்துள்ளார். இவரது ஆர்வத்தைப் பார்த்த அவரது தந்தை இவருக்குத் தொலைநோக்கி விண் ஆய்வு உபகரணங்களை வாங்கிக் கொடுத்து ஊக்கப்படுத்தியுள்ளார்.

 

இந்நிலையில் மாணவர் கடலூர் சில்வர் பீச் பகுதியில் தீவிர ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது விண்ணிலிருந்து விழுந்த 56 எரிகற்களைக் கண்டுபிடித்துள்ளார். பின்னர் அவை விண்ணிலிருந்து விழுந்த எரிகற்கள் என்பதை நிரூபித்து விண் ஆய்வாளர்கள் மத்தியில் அறிமுகம் செய்துள்ளார்.

 

இதனைச் சர்வதேச விண்ணியல் தேடல் குழுமம் மற்றும் ஹவாய் ஸ்டார் வான் ஆராய்ச்சி நிறுவனமும் அமெரிக்காவின் நாசா உடன் இணைந்து விண்கற்கள் குறித்த ஆய்வில் மாணவர் அனீஸ்வரை இணைத்துக் கொண்டு அவருக்கு அங்கீகார பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளது. சர்வதேச வான் ஆய்வுக் குழுமம் அவரை உறுப்பினராக அங்கீகரித்துள்ளது.

 

மாணவர் அனீஸ்வர் கடலூரில் விழுந்த 56 எரிகற்களுடன் ஏழு விண்கற்களையும் சிறு கோள்கள் கண்டுபிடித்து ஹார்ட்டின் சிமன்ஸ் பல்கலைக்கழகத்தின் டெக்சாஸ் விண் ஆய்வாளர் சான்றிதழும் பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து இவர் தமிழ்நாடு இளையோர் விண் ஆய்வு மையம் என்னும் மாணவர் அமைப்பை ஏற்படுத்தி சக மாணவர்களிடையே விண்வெளி ஆய்வு குறித்த ஆர்வத்தை ஏற்படுத்த வருகிறார். இதனை அறிந்த கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், மாணவரை நேரில் அழைத்துச் சால்வை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்துப் பாராட்டினார். சிறுவயதிலேயே மாணவர் விண் ஆய்வில் வெற்றி பெறுவது அனைவர் மத்தியிலும் பாராட்டைப் பெற்றுள்ளது.