Skip to main content

புதுமையான முறையில் ஊரடங்கு தளர்வை அமல்படுத்திய இலங்கை...

Published on 12/05/2020 | Edited on 12/05/2020

 

lockdown relaxation rules in srilanka

 

இலங்கையில் அடையாள எண்களின் அடிப்படையில் மக்கள் தினமும் வெளியே செல்ல அனுமதிக்கும் வகையில் ஊரடங்கு தளர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. 


கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்தும் விதமாகக் கடந்த மார்ச் 20 முதல் இலங்கையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அத்தியாவசியத் தேவைகளைத் தவிர மற்ற அனைத்தும் முடக்கப்பட்ட நிலையில், மக்கள் வெளியே செல்வதும் தடுக்கப்பட்டது. சுமார் 50 நாட்கள் ஊரடங்கால் அந்நாட்டில் கரோனா பரவல் பெருமளவு குறைக்கப்பட்டது. இதன் விளைவாக அந்நாட்டில் 869 பேர் மட்டுமே கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், ஒன்பது பேர் மட்டுமே உயிரிழந்தனர். இந்நிலையில், கரோனா பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்ததையடுத்து அந்நாட்டு அரசு நேற்று முதல் ஊரடங்கைத் தளர்த்தியுள்ளது. பெரும்பலான கடைகள் திறக்கப்பட்ட நிலையில், மக்களின் நடமாட்டத்தைக் குறைக்க அரசாங்கத்தினால் அந்நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையிலுள்ள இறுதி இலக்கத்தை அடிப்படையாகக் கொண்டே வெளியில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அடையாள அட்டையில் இறுதி இலக்கம் ஒன்று அல்லது இரண்டாக இருப்பின், அவர்களுக்குத் திங்கட்கிழமையும், மூன்று அல்லது நான்காக இருப்பின் அவர்களுக்குச் செவ்வாய்க்கிழமையும் வெளியில் செல்ல அனுமதி வழங்கப்படும். அதேபோன்று ஐந்து அல்லது ஆறு என்ற இறுதி இலக்கங்களைக் கொண்ட அடையாள அட்டை உரிமையாளர்களுக்குப் புதன்கிழமையும், ஏழு அல்லது எட்டு என்ற இறுதி இலக்கங்களை கொண்ட அடையாள அட்டை உரிமையாளர்களுக்கு வியாழக்கிழமையும் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒன்பது அல்லது பூஜ்யம் ஆகியவற்றை இறுதி இலக்கமாகக் கொண்ட அடையாள அட்டை உரிமையாளர்களுக்கு வெள்ளிக்கிழமை வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பிட்ட எண்களை உடையவர்கள் அதற்காகக் குறிப்பிடப்பட்ட நாட்களில் மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கச்சத்தீவை இந்தியாவுக்கு திரும்ப வழங்குவது சாத்தியமற்றது” - இலங்கை அமைச்சர் திட்டவட்டம்

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Sri Lankan Minister says Sri Lanka's marine resources are being destroyed by Indian fishermen

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன. இத்தகைய சூழலில் கச்சத்தீவு விவகாரத்தை பா.ஜ.க. தற்போது கையிலெடுத்து காங்கிரசையும், தி.மு.க.வையும் கடுமையாக விமர்சித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் காங்கிரஸ் மற்றும் திமுக, ‘10 ஆண்டுகால ஆட்சியில் கச்சத்தீவை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?’ என பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசிடம் கேள்வி எழுப்பி வருகிறது. 

இந்த நிலையில், கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது குறித்து இலங்கை அமைச்சர் டக்ளஸ் கூறுகையில், “இந்திய மீனவர்கள் படகுகளைப் பயன்படுத்தி இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக மீன்பிடிக்க வருகின்றனர். இந்திய மீனவர்களால் இலங்கையின் கடல் வளம் அழிக்கப்படுகிறது. 

இந்தியாவில் தேர்தல் காலங்களில் கச்சத்தீவு பற்றிய கோரிக்கைகள் மற்றும் எதிர் உரிமைகோரல்களின் சத்தம் கேட்பது அசாதாரணமானது அல்ல. இலங்கை மீனவர்கள் அந்தப் பகுதிக்குள் நுழைய முடியாது என்பதையும், அந்த வளமான பகுதியில் இலங்கை எந்த உரிமையையும் கோரக்கூடாது என்பதையும் உறுதிப்படுத்துவதற்காக இந்தியா செயல்படுகிறது என்று நான் நினைக்கிறேன். இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற கச்சத்தீவை இந்தியாவுக்கு திரும்ப வழங்குவது என்பது சாத்தியமற்றது. எனவே, கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது. கச்சத்தீவை திரும்ப வழங்குவதாக இருந்தால் இலங்கையின் கடல்வளம் முற்றிலுமாக சூறையாடப்படும்” என்று கூறினார். 

Next Story

முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ்க்கு இலங்கையில் தீவிர விசாரணை!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
 Police arrested 3 people including Murugan who arrived in Sri Lanka

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் கைது செய்யப்பட்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த 7 தமிழர்கள் விடுவிக்கப்பட்டனர். அதில் திருச்சி முகாமில் தங்க வைக்கப்பட்ட முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் தங்களது சொந்த நாட்டிற்கு செல்ல வேண்டும் என்று மத்திய அரசிடம் அனுமதி கோரியிருந்தனர். இதனைத்தொடர்ந்து மூவரையும் இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு கடந்த வாரம் அனுமதி வழங்கியது.

இந்த நிலையில் மத்திய அரசின் அனுமதியை தொடர்ந்து நேற்று திருச்சி முகாமில் இருந்து மூவரும் சென்னை அழைத்து வரப்பட்ட நிலையில், மூவரும் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

இதனையடுத்து  முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் மூவரும்  கொழும்பு விமான நிலையத்தில் இறங்கியுள்ளனர்.  அப்போது மூன்று பேரையும் இலங்கை காவல்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். 32 ஆண்டுகளுக்கு முன்பு சட்டவிரோதமாக இந்தியாவிற்கு சென்றது குறித்து வழக்கு பதிவு செய்து மூவரையும் கைது செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.