சீனா மற்றும் ஹாங்காங்கில் கடந்த 2002 ஆம் ஆண்டில் பரவிய சார்ஸ் நோயை ஏற்படுத்திய அதே வைரஸ் குடும்பத்தை சேர்ந்த வைரஸ் தான் இந்த கரோனா என கூறப்படுகிறது. சுவாச மண்டலத்தில் கோளாறுகளை ஏற்படுத்தி, கடும் காய்ச்சலை ஏற்படுத்தி மனித உயிர்களை பறிக்கக்கூடிய ஆபத்து உள்ளது இந்த கரோனா வைரஸ்.
இந்த வைரஸ் தொற்றால் இதுவரை 170 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் உலகளவில் மிகவும் ஆபத்தில் உள்ள நாடுகள் பட்டியலை இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். இதில் அதிகப்படியான ஆபத்தை கொண்ட நாடாக தாய்லாந்து பார்க்கப்படுகிறது. அதற்கடுத்தடுத்த இடங்களிலும் சீனாவை சுற்றி உள்ள நாடுகளே பிடித்துள்ளன. இந்த பட்டியலில் ஜப்பான் 2-வது இடத்திலும், சீனாவின் சிறப்பு நிர்வாக பகுதியான ஹாங்காங் 3-வது இடத்திலும் உள்ளது. மேலும், அமெரிக்கா 6-வது இடத்திலும், ஆஸ்திரேலியா 10-வதுஇடத்திலும், இங்கிலாந்து 17-வது இடத்திலும், இந்தியா-23 வது இடத்திலும் உள்ளது.