Skip to main content

வெள்ளத்தில் 2000 பேர் பலி; சர்வதேச உதவியைக் கோரும் லிபியா

Published on 12/09/2023 | Edited on 12/09/2023

 

Libya appeals for international aid for 2000 people died in the flood

 

வடக்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் நாடு லிபியா. ஆப்பிரிக்க நிலப்பரப்பின் அடிப்படையில் 4வது நாடாக இருந்தாலும், இங்கு வாழும் மக்களின்  எண்ணிக்கை மிகக் குறைவு. இந்த நிலையில், மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள லிபியாவை கடந்த ஞாயிற்றுக்கிழமை (10-09-23) டேனியல் புயல் தாக்கியது. குறிப்பாக லிபியாவின் கிழக்கு பகுதிகளைக் கடும் புயல் மற்றும் மழை தாக்கியுள்ளது. இதனால், டெர்னா, பெங்காஸி, பெடா உள்ளிட்ட பல பகுதிகளில் மோசமான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 

கனமழை காரணமாக டெர்னா பகுதியில் உள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி வழிந்துள்ளன. சில அணைகள் இடிந்தும் விழுந்துள்ளன. இந்த வெள்ளத்தில் குறைந்தது 2000 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பல ஆயிரம் பேர் இதில் மாயமாகி இருக்கலாம், எனவே அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

 

இப்பகுதியில் போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்டவை தடைப்பட்டிருப்பதால், மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன. கிழக்கு லிபியாவில் இந்த வெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து மாறுபட்ட தகவல்களும் வெளியாகி வருகிறது. வெள்ளம் பாதித்த டெர்னா நகரைப் பேரழிவு மண்டலமாக அந்நாட்டுப் பிரதமர் ஹமாட் அறிவித்துள்ளார். மேலும், நாடு முழுவதும் உள்ள கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்க விடவும் உத்தரவிட்டுள்ளார். 

 

பாதிப்பு மிக மோசமாக இருக்கும் பகுதியான கிழக்கு சிரேனைக்கா மாகாணத்தில் மூன்று பகுதிகளை வெள்ளம் காரணமாக பேரழிவுப் பகுதியாக அறிவித்து சர்வதேச உதவியைக் கோரியுள்ளதாக லிபியா ஜனாதிபதி கவுன்சில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, லிபியா பிரசிடென்சி கவுன்சிலின் தலைவர் மொஹமட் மென்ஃபி, வெள்ளத்தால் ஏற்பட்ட பரவலான பேரழிவைச் சமாளிக்க சர்வதேச உதவிக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதில் அவர், "சகோதர மற்றும் நட்பு நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஆதரவை வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழ்நாடு கேட்டது... மத்திய அரசு கொடுத்தது - நிவாரண நிதி ஒதுக்கீடு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Central government relief fund allocation to tamilnadu

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு இதுவரை நிதி வழங்காமல் இருந்தது.

இதற்கிடையில், வெள்ள பாதிப்புகளுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.2 ஆயிரம் கோடி வழங்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் கடந்த 3ஆம் தேதி தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தமிழகம் சந்தித்து வரும் இயற்கை பேரிடர்கள் பற்றியும் அதன் விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் பெயரில், தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் குமணன் இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரண நிதியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Next Story

“மழை வெள்ளத்தினால் சேதமடைந்த வீட்டின் உரிமையாளர்களின் கவனத்திற்கு” - முதல்வர் முக்கிய உத்தரவு

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Attention of owners of houses damaged by rain and flood 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட பெரும் புயல், மழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நகர்ப்புற பகுதிகளில் உள்ள மக்களின் சேதமடைந்த வீடுகளைப் பழுது நீக்கம் மற்றும் கட்டுமானத்திற்காக நிவாரணம் வழங்குதல் தொடர்பாகத் தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முதன்மைச் செயலாளர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாகச் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் இம்மாவட்டங்களில் வசித்து வந்த பெரும்பாலான ஏழை மக்களின் வீடுகள் பெரிதும் சேதமுற்றன.

இவ்வாறு மழை வெள்ளத்தினால் பகுதியாகச் சேதமடைந்த வீடுகளைப் பழுது பார்ப்பதற்கு ரூ. 2 இலட்சம் வரையும் முழுமையாகச் சேதமடைந்த வீடுகளை மீண்டும் புதிதாகக் கட்டுவதற்கு ரூ. 4 இலட்சம் வரையும் நிவாரணமாக வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளிலுள்ள மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பகுதியாக மற்றும் முழுமையாகச் சேதமடைந்த 955 வீடுகளுக்குப் பழுது நீக்கம் செய்யவும் மற்றும் புதிய கட்டுமானத்திற்கும் ரூபாய் 24.22 கோடியும், பேரூராட்சி பகுதிகளில் உள்ள 577 சேதமடைந்த வீடுகளுக்கு ரூ. 21.62 கோடியும் ஆக மொத்தம் ரூ. 45.84 கோடி வழங்கி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.