Skip to main content

இந்தியாவின் தேசிய மொழி எது?; ஸ்பெயினில் கேட்கப்பட்ட கேள்விக்கு கனிமொழி கொடுத்த பதில்!

Published on 03/06/2025 | Edited on 03/06/2025

 

Kanimozhi's answer in Spain What is the national language of India?

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா கடந்த மே 7ஆம் தேதி நள்ளிரவு ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம் எல்லையை மீறி தாக்குதல் நடத்தியது. மே 7ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வந்த தாக்குதல் அனைத்துக்கும் இந்தியா பதிலளித்து வந்தது. இதனையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், அமெரிக்காவின் தலையீட்டு காரணமாக கடந்த 10ஆம் தேதி இந்த தாக்குதல்கள் நிறுத்தப்பட்டது. அதனால், இரு நாடுகளிடையே தற்போது அமைதி நிலவி வருகிறது.

இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாகவும், பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் தஞ்சம் அளிப்பது, நிதி உதவி வழங்குவது உள்ளிட்ட தகவல்கள் குறித்தும் உலக நாடுகளுக்கு ஆதாரங்களுடன் விளக்கமளிக்க அனைத்துக் கட்சி எம்.பிக்கள் அடங்கிய 7 குழுக்களை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, எம்.பிக்கள் அடங்கிய குழுக்கள் பல்வேறு நாடுகளுக்குச் சென்று அங்குள்ள தலைவர்களைச் சந்தித்து விளக்கமளித்து வருகின்றனர். 

Kanimozhi's answer in Spain What is the national language of India?

அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி எம்.பியும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி தலைமையிலான குழு தற்போது ஸ்பெயினுக்குச் சென்றுள்ளனர். ஸ்பெயின் தலைநகர் மட்ரிடில் அந்நாட்டு பிரதிநிதிகளுடன் இந்திய எம்.பிக்கள் கலந்துரையாடினர். அப்போது, இந்தியாவின் தேசிய மொழி எது? என இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்த ஒருவர் கனிமொழியிடன் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த கனிமொழி, “இந்தியாவின் தேசிய மொழி ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மை. இந்தக் குழு உலகிற்குக் கொண்டு வரும் செய்தி இதுதான். அதுதான் இன்றைக்கு மிக முக்கியமான விஷயம். எங்கள் நாட்டில் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது, அதையே நாங்கள் செய்ய விரும்புகிறோம். துரதிர்ஷ்டவசமாக நாங்கள் திசைதிருப்பப்படுகிறோம். பயங்கரவாதத்தை எதிர்கொள்ள முற்றிலும் தேவையற்ற போரைச் சமாளிக்க வேண்டியுள்ளது. 

இந்திய பாதுகாப்பானது என்ற செய்தியை ஒரு இந்தியர்களாக நாங்கள் தெளிவுப்படுத்த வேண்டும். அவர்கள் என்ன வேண்டுமானாலும் முயற்சி செய்யலாம், ஆனால் அவர்களால் எங்களை தடம் புரளச் செய்ய முடியாது. காஷ்மீர் பாதுகாப்பான இடமாக இருப்பதை நாங்கள் உறுதி செய்வோம்” என்று கூறினார். 

கனிமொழி தலைமையிலான குழுவின் ஐந்து நாடுகள் பயணத்தின் இறுதிப் பகுதி ஸ்பெயின் ஆகும்.  அதைத் தொடர்ந்து அவர்கள் இந்தியா திரும்புவார்கள். இந்தக் குழுவில் சமாஜ்வாதி கட்சி எம்.பி. ராஜீவ் குமார் ராய், பாஜகவின் பிரிஜேஷ் சவுதா, ஆம் ஆத்மியின் அசோக் மிட்டல், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் பிரேம் சந்த் குப்தா மற்றும் முன்னாள் தூதர் மஞ்சீவ் சிங் பூரி ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்