
லாட்வியாவின் தலைநகர் ரிகா தேசிய நூலகத்தில் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து கனிமொழி கருணாநிதி எம்.பி மரியாதை செலுத்தினார்.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலகுக்கு அம்பலப்படுத்தவும், 'ஆபரேஷன் சிந்தூர்' போன்ற இந்தியாவின் தற்காப்பு உரிமையை எடுத்துரைக்கவும் சர்வதேச நாடுகளுக்கு இந்தியப் பிரதிநிதிகள் சென்றுள்ளனர். இதற்காக அமைக்கப்பட்டுள்ள 7 அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி தலைமையிலான குழுவும் ஒன்று. இந்த குழுவினர் ரஷியா, ஸ்லோவேனியா, கிரீஸ் உள்ளிட்ட நாடுகளில் தங்கள் பணியை முடித்துக்கொண்டு நேற்று (30/05/2025) லாட்வியா நாட்டை சென்றடைந்தனர்.
இந்த நிலையில், கனிமொழி கருணாநிதி எம்.பி தலைமையிலான எம்.பிக்கள் பிரதிநிதி குழு லாட்வியாவின் தலைநகர் ரிகாவிற்கு சென்று சேர்ந்தனர். இந்த குழுவை இந்தியத் தூதர் நம்ரதா குமார் வரவேற்றார். இதனைத் தொடர்ந்து, கனிமொழி கருணாநிதி எம்.பி தலைமையிலான அனைத்து கட்சிகளை சேர்ந்த எம்.பிக்கள் குழு, ரிகாவில் உள்ள தேசிய நூலகத்தில் நிறுவப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.