Skip to main content

கரோனா தடுப்பூசி விவகாரத்தில் ட்ரம்ப்பை நம்பமுடியாது... துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் கருத்து!!! 

Published on 08/09/2020 | Edited on 08/09/2020

 

kamala harris

 

 

கரோனா தடுப்பூசி விவகாரத்தில் ட்ரம்ப் கூறும் தகவல்கள் மீது தனக்கு நம்பிக்கை இல்லையென துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.

 

கரோனா எனும் கொடிய வைரஸின் தாக்கத்தால் உலகமே கடந்த சில மாதங்களாக முடங்கியுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நோய்த்தொற்று மற்றும் மரணங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் தவித்து வருகின்றன. இவ்வைரசுக்கு எதிரான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கும் பணியானது இரவு பகலாக நடந்து வருகிறது. இந்த ஆய்வுகளில் பெரும்பாலானவை இறுதி கட்டத்தை எட்டி விட்டன என தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்தக் கரோனா வைரஸ் தாக்கமானது பல நாடுகளில் அடுத்த தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கக்கூடிய ஒன்றாக இருக்கும் என தேர்தல் வல்லுநர்களால் கூறப்பட்டு வருகிறது. அந்த வகையில் நவம்பர் மாதம் நடைபெற இருக்கிற அமெரிக்க அதிபர் தேர்தலிலும் இது முக்கியப் பங்காற்றும் என்பதை சமீபத்திய தேர்தல் பிரச்சாரங்கள் காட்டுகின்றன. 

 

ட்ரம்ப் தலைமையிலான அரசு கரோனா கட்டுப்படுத்தலில் தோல்வியடைந்து விட்டது என்ற குற்றச்சாட்டு அமெரிக்காவில் பரவலாக எழுந்து வருகிறது. இந்நிலையில் கரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வர இருக்கிறது என்றும் அது தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பாகக்கூட இருக்கலாம் எனவும் செய்திகள் வெளியாகின. இது ட்ரம்ப் தன் அரசு மீது ஏற்பட்ட களங்கத்தை போக்குவதற்கான முயற்சியென எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. அந்த வகையில் தற்போது ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

 

அதில் அவர், "கரோனா தொற்று நோயின் வீரியத்தை ட்ரம்ப் தலைமையிலான அரசு புரிந்துகொள்ளவில்லை. இதுகுறித்து தேவையற்ற கருத்துகளைக் கூறி சுகாதார நிபுணர்களை குழப்பிவிட்டார். துறைசார் வல்லுநர்களின் கருத்துகளைக் கேட்டு அதற்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தால் நிலைமையை சரியாக புரிந்திருக்க முடியும். இந்தாண்டின் இறுதிக்குள் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் என ட்ரம்ப் கூறி வருகிறார். அவர் கூறுவதை நான் நம்பமாட்டேன். ஆராய்ச்சியாளர்கள், ஆய்வாளர்கள் கூறுவதை மட்டுமே ஏற்க முடியும்" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“டொனால்டு டிரம்ப் அதிபராவது பற்றி நினைத்தாலே பயமாக இருக்கிறது” - கமலா ஹாரிஸ்

Published on 18/01/2024 | Edited on 18/01/2024
 Kamala Harris says Just thinking about Donald Trump as president is scary

அமெரிக்காவில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றார். நான்கு ஆண்டுகள் கொண்ட அமெரிக்க அதிபரின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது 

இந்தாண்டு நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவார் எனக் கடந்த சில தினங்களுக்கு முன் கூறப்பட்டு வந்தது. இதற்கான ஆதரவுகளையும் டிரம்ப் தீவிரமாகத் திரட்டி வருகிறார்.

இதற்கிடையில், இந்த அதிபர் தேர்தலில் அதே குடியரசுக் கட்சியில் உள்ள அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த இளம் தொழிலதிபரான விவேக் ராமசாமி என்பவர் போட்டியிடுவதாக அறிவித்தார். அமெரிக்கா அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ஒருவர் போட்டியிட இருப்பது நாடு முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. மேலும், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்க்கும் விவேக் ராமசாமிக்கும் கடும் போட்டி நிலவி வந்தது. 

இதனைத் தொடர்ந்து அமெரிக்கா அதிபர் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று விவேக் ராமசாமி அறிவித்தார். இது குறித்து பேசிய அவர், “ நான் எனது பிரச்சாரத்தை இடை நிறுத்துகிறேன். டொனால்ட் ஜே. டிரம்ப்பை ஆமோதிக்கிறேன், மேலும் அவர் அடுத்த அமெரிக்க ஜனாதிபதி என்பதை உறுதிப்படுத்த, என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்” என்று கூறியிருந்தார். 

இந்த நிலையில், அமெரிக்க துணை அதிபரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர், “டொனால்டு டிரம்ப் அதிபராக வெற்றி பெற்று வெள்ளை மாளிகைக்கு மீண்டும் திரும்புவார் என்று நினைத்தாலே எனக்கு பயமாக இருக்கிறது. அதனால் தான், நான் நாடு முழுவதும் பயணம் செய்து பிரச்சாரம் செய்கிறேன். டொனால்டு டிரம்ப் அதிபராவது பற்றி நாம் அனைவரும் பயப்பட வேண்டும். நாம் பயப்படும் போது அதற்கு எதிராக நாம் போராட வேண்டும்” என்று கூறினார். 

Next Story

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு கரோனா உறுதி! 

Published on 27/04/2022 | Edited on 27/04/2022

 

Corona confirms US Vice President Kamala Harris!

 

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

 

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவுக்கு சென்ற நேற்று (26/04/2022) வெள்ளை மாளிகைக்கு திரும்பிய போது கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில், அவருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து, துணை அதிபர் கமலா ஹாரிஸ் தனது வீட்டிற்கு சென்று தனிமைப்படுத்திக் கொண்டார். கரோனாவுக்கான எந்த அறிகுறியும் இல்லாத நிலையில், தொற்று நீங்கிய பிறகு அவர் அலுவலகம் திரும்புவார் என வெள்ளை மாளிகைத் தெரிவித்துள்ளது. 

 

ஒட்டுமொத்தமாக அமெரிக்காவில் கரோனா பரவல் குறைந்து வந்தாலும், சில இடங்களில் ஒமிக்ரான் பிஏ2 வகை பரவல் சற்றே அதிகரித்துள்ளது.