Skip to main content

இந்த வெடிகுண்டுத் தாக்குதல் யாருக்காக ? - ஆபத்தை உணர்த்தும் இலங்கை பத்திரிக்கையாளர்

Published on 24/04/2019 | Edited on 24/04/2019

கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி இலங்கையில் தேவாலயங்கள், சோகுசு விடுதிகள் என 9 இடங்களில் பயங்கர குண்டுவெடிப்புத் தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலில் சுமார் 359 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் யார் என்று குழப்பங்கள் நீடித்த நிலையில் நேற்று ஐ.எஸ்.ஐ.எஸ் திவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது. அதற்கு முன்னதாக இலங்கை பத்திரிக்கையாளர் சோமீதரன் கொடுத்த பேட்டியில்...

 

Journalist Someetharan speech about srilanka Blasts

 

“இலங்கையைப் பொருத்தவரைக்கும் அங்கு நடந்த இனப்படுகொலையையும், போர்க்குற்றங்களையும் மறைப்பதற்காக அதன்மீது மதச்சாயம் பூசப்படுகிறது. மதப் பிரிவினை இருப்பது போன்ற தோற்றம் உருவாக்கப்படுகிறது. இலங்கை அரசு ஐநா சபையில் கொடுத்த அறிக்கையில் இனப்படுகொலை, இனப்புறக்கணிப்பு போன்ற வார்த்தைகளைத் தவிர்க்கிறார்கள். மத சிறுபான்மை என்ற வார்த்தையைப் பயன்படுத்த தொடங்குகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக ஒரு பிரிவினையை உருவாக்குவதற்கான வேலை நடந்துவருகிறது. இந்துக்களைப் பாதுகாப்பதற்காக சிவசேனா அமைப்பு உருவாக்கப்பட்டது, தொடர்ந்து அதற்கும் கிறிஸ்த்தவ அமைப்புக்களுக்கும் முரண்பாடுகள் எழுந்தன. சமீபத்தில் ஒரு தேவாலயத்திற்கு அருகில் சைவ பதாகை வைக்கப்படுகிற போது அதை எடுக்கச்சொல்லிப் பிரச்சனைகள் நடந்தன. இஸ்லாம் மதத்தின் அடிப்படைவாதம் பரவ ஆரம்பிக்கிறது. அதேபோல பௌத்த அடிப்படைவாதிகள் முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். எனவே, இலங்கையில் மத நல்லினக்கத்தைத் தகர்த்துவிட்டு, மதங்களுக்கான அடிப்படைவாதம் திட்டமிட்டுக் கூர்படுத்தப்படுகிறது. இனப்படுகொலைக்கான தீர்வை நீர்த்துப்போகச்செய்து மத பாகுபாட்டை கூர்செய்கிற வேலை கடந்த 10 ஆண்டுகளாக நடந்துவருகிறது. அதன் பின்புலத்திலிருந்தும் இந்த பிரச்சனையை அணுகவேண்டியுள்ளது. 
 

ஏற்கனவே தமிழர்களை அழித்து, ஒடுக்கி அவர்களை ராணுவக்கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். போர் நிறுத்தப்பட்டு 10 ஆண்டுகள் முடிந்தபிறகும், வடக்கு மாகாணத்திலிருந்து ஒரு ராணுவ வீரரையும் வெளியேற்றவில்லை. இந்த குண்டுவெடிப்பை முஸ்லீம் திவிரவாத இயக்கங்கள் செய்தன என்று சொல்வதன்மூலமும், முஸ்லீம்களோடு இதை தொடர்புபடுத்துவதன் மூலமும் இலங்கையில் இருக்கக்கூடிய முஸ்லீம்களுக்கு ராணுவ நெருக்கடி கொடுப்பதற்கும், தொடர்ந்து அந்தப்பகுதியில் ராணுவத்தை வைத்திருப்பதற்கும் வாய்ப்பு அமைகிறது. உலகில் எங்கு குண்டுவெடித்தாலும் ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற இஸ்லாமிய அமைப்புகள்தான் காரணம் என்றுச் சொல்லி பிரச்சனையை முடித்துவிடுகிறார்கள். கடந்த காலங்களில் விடுதலைப் புலிகள் இருக்கும்போது இலங்கையில் எங்கு தாக்குதல் நடந்தாலும் அதை விடுதலைப் புலிகளே செய்தார்கள் என்றுச் சொல்லக்கூடிய நிலைமை இருந்தது. இலங்கை அரசாங்கம் இந்த குண்டுவெடிப்பை யார் செய்தார்கள் என்று சொல்லவில்லை. இதுவரை கைதுசெய்யப்பட்ட 13 பேரில் எவரும் வெளிநாட்டவர் இல்லை. எனவே, உள்நாட்டில் இருப்பவர்களுக்கு இதில் தொடர்பு இருக்க வேண்டும். 
 

பானந்துறையில் ஒரு வீட்டில்தான் குண்டு வைத்தவர்கள் இருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. அந்த வீட்டில் தான் வெடிகுண்டு தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முன்பைவிட முஸ்லீம் அடிப்படைவாதம் அதிகமாக உள்ளது. இந்தியாவில் பாஜக ஆட்சிக்கு வந்தப்பிறகு இலங்கையில் இந்து அடிப்படைவாதமும் அதிகமாக உள்ளது. இவற்றைக் கூர்தீட்டுகிற வேலையும் தொடர்ந்து நடக்கிறது. இந்த சிறிய முஸ்லீம் அடிப்படைவாதக் குழுக்களால் இந்த குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது என்பது சாத்தியமற்றது. மிகவும் நுணுக்கமாக  திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் இது. இதில் ராணுவத்துடன்  தொடர்புகொண்ட அல்லது ராணுவத்தின் அளவுக்கு திறன் கொண்ட அமைப்பு ஈடுபட்டுள்ளது தெரிகிறது. இப்போ முஸ்லீம் வாழக்கூடிய பகுதிகளை ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் முயற்சிகள் நடக்கப்போகிறது. இந்த வெடிகுண்டு தாக்குதல் பாதுகாப்பின் மிகப்பெரிய ஓட்டை. போர் முடிந்தபிறகும் 5 லட்சம் ஆயுதம் தாங்கிய வீரர்களை வைத்திருக்கும் நாடாக இலங்கை இருக்கிறது. மிக சிறிய நாட்டிற்கு இவ்வளவு வீரர்கள் தேவையே இல்லை. இவ்வளவு பேரையும் வைத்துக்கொண்டு என்ன செய்கிறார்கள்? 

 

Journalist Someetharan speech about srilanka Blasts


 

கொழும்பு துறைமுகத்தின் எல்லையோடு இருக்கிற அந்தோணியார் கோவிலில் குண்டு வெடித்திருக்கிறது. அது ராணுவம் நடமாடக்கூடிய பகுதிதான், அதற்குப் பின்னால் இலங்கை கடற்படை இருக்கிறது. இலங்கையின் கிழக்குப் பகுதியிலும் ராணுவம் இருக்கிறது. அங்கும் தாக்குதல் நடந்திருக்கிறது. இதை பாதுக்காப்பு குறைபாடாகத்தான் பார்க்கவேண்டியுள்ளது. மேலும், இந்த தாக்குதலால் யார் பயனடைகிறார் என்பதையும் பார்க்கவேண்டியுள்ளது. போர்க்குற்றங்கள் நிகழ்ந்து லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்றப்பிறகும் இலங்கை அரசு கடந்த 10 ஆண்டுகளில் எந்த ஒரு தீர்வையும் முன்வைக்கவில்லை. விசாரணை நடத்தவேண்டும், ராஜபக்‌ஷேவை குற்றவாளிக்கூண்டில் ஏற்றவேண்டும் என்பதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். போர் நடக்கும்போது இந்தியா மற்றும் அமெரிக்காவுக்குக் கொடுத்த வாக்குறுதியின்படி எந்த ஒரு சிறிய அரசியல் தீர்வை கூட இலங்கை அரசு செய்யவில்லை. மே மாதத்தில் இந்த பிரச்சனை பேசப்படக்கூடும். குண்டுவெடிப்பால் இது அடிபடப்போகிறது, போர்குற்ற விசாரணைப் போன்ற பிரச்சனைகள் அடிபடப்போகிறது. போர் முடிந்துவிட்டது, இலங்கையில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இல்லை, எனவே இலங்கை ராணுவத்தையும், பயங்கரவாத தடைச்சட்டம், அவசரகால நிலை போன்றவற்றை விலக்கிக்கொள்ளவேண்டும். இப்போது இருக்கிற பயங்கரவாத தடைச்சட்டம் அமலில் இருக்கிறது, அதனால், பல தமிழர்கள் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்கள். இதன்பிறகு எதற்கு இந்த சட்டம்? அதை விலக்கிக் கொள்ளவேண்டும் என்ற கோரிக்கைகள் வந்துகொண்டிருக்கிறது. இந்த வெடிகுண்டுத் தாக்குதல்மூலம் பயங்கரவாத தடைச்சட்டத்தை அப்படியே வைத்திருக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது. 
 

எனவே, ராணுவத்தை அப்படியே வைத்திருக்க முடியும், பயங்கரவாத தடைச்சட்டத்தை அப்படியே வைத்திருக்க முடியும், போர்க்குற்றங்கள் குறித்த பேச்சு அடங்கி குண்டுவெடிப்பு பற்றிய பேச்சுகள் எழும், இந்தியா, அமெரிக்கா போன்ற உலக நாடுகள் மனிதாபிமான அடிப்படையில் இலங்கை அரசுக்கு உதவியாக நிற்கும். இவை அல்லாமல், இந்த ஆண்டு இறுதியில் ஒரு தேர்தல் வருகிறது. இப்போது இருக்கிற அரசுக்கு இந்த தாக்குதல் பெரிய பின்னடைவு. மகேந்திர ராஜபக்‌ஷே ஆட்சியில் இப்படி நடக்கவில்லை, ரணில் விக்ரமசிங்கே ஆட்சியில் தாக்குதல் நடந்திருப்பது ராஜபக்‌ஷேவுக்கு சாதகமாக அமையும். போர்காலத்தில் பாதுகாப்புத்துறை செயலராக இருந்த ராஜபக்‌ஷேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்‌ஷே தற்போது தேர்தலில் நின்று அதிபராகப்போகிறேன் என்று சொல்கிறார். எனவே, இவரைப்போல் போரில் வெல்ல காரணமாக இருந்த ஒருவர் அதிபரானால் இதுபோன்ற பாதுகாப்பு குறைபாடுகள் இருக்காது என்ற பிரச்சாரம் முன்னெடுக்கப்படும்.  இந்த குண்டுவெடிப்பை யார் நிகழ்த்தியது என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, இதனால் ஏற்படபோகும் பின்விளைவுகளும் ஆபத்தானதாக உள்ளது.” இவ்வாறு கூறினார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கச்சத்தீவை இந்தியாவுக்கு திரும்ப வழங்குவது சாத்தியமற்றது” - இலங்கை அமைச்சர் திட்டவட்டம்

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Sri Lankan Minister says Sri Lanka's marine resources are being destroyed by Indian fishermen

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன. இத்தகைய சூழலில் கச்சத்தீவு விவகாரத்தை பா.ஜ.க. தற்போது கையிலெடுத்து காங்கிரசையும், தி.மு.க.வையும் கடுமையாக விமர்சித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் காங்கிரஸ் மற்றும் திமுக, ‘10 ஆண்டுகால ஆட்சியில் கச்சத்தீவை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?’ என பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசிடம் கேள்வி எழுப்பி வருகிறது. 

இந்த நிலையில், கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது குறித்து இலங்கை அமைச்சர் டக்ளஸ் கூறுகையில், “இந்திய மீனவர்கள் படகுகளைப் பயன்படுத்தி இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக மீன்பிடிக்க வருகின்றனர். இந்திய மீனவர்களால் இலங்கையின் கடல் வளம் அழிக்கப்படுகிறது. 

இந்தியாவில் தேர்தல் காலங்களில் கச்சத்தீவு பற்றிய கோரிக்கைகள் மற்றும் எதிர் உரிமைகோரல்களின் சத்தம் கேட்பது அசாதாரணமானது அல்ல. இலங்கை மீனவர்கள் அந்தப் பகுதிக்குள் நுழைய முடியாது என்பதையும், அந்த வளமான பகுதியில் இலங்கை எந்த உரிமையையும் கோரக்கூடாது என்பதையும் உறுதிப்படுத்துவதற்காக இந்தியா செயல்படுகிறது என்று நான் நினைக்கிறேன். இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற கச்சத்தீவை இந்தியாவுக்கு திரும்ப வழங்குவது என்பது சாத்தியமற்றது. எனவே, கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது. கச்சத்தீவை திரும்ப வழங்குவதாக இருந்தால் இலங்கையின் கடல்வளம் முற்றிலுமாக சூறையாடப்படும்” என்று கூறினார். 

Next Story

முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ்க்கு இலங்கையில் தீவிர விசாரணை!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
 Police arrested 3 people including Murugan who arrived in Sri Lanka

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் கைது செய்யப்பட்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த 7 தமிழர்கள் விடுவிக்கப்பட்டனர். அதில் திருச்சி முகாமில் தங்க வைக்கப்பட்ட முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் தங்களது சொந்த நாட்டிற்கு செல்ல வேண்டும் என்று மத்திய அரசிடம் அனுமதி கோரியிருந்தனர். இதனைத்தொடர்ந்து மூவரையும் இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு கடந்த வாரம் அனுமதி வழங்கியது.

இந்த நிலையில் மத்திய அரசின் அனுமதியை தொடர்ந்து நேற்று திருச்சி முகாமில் இருந்து மூவரும் சென்னை அழைத்து வரப்பட்ட நிலையில், மூவரும் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

இதனையடுத்து  முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் மூவரும்  கொழும்பு விமான நிலையத்தில் இறங்கியுள்ளனர்.  அப்போது மூன்று பேரையும் இலங்கை காவல்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். 32 ஆண்டுகளுக்கு முன்பு சட்டவிரோதமாக இந்தியாவிற்கு சென்றது குறித்து வழக்கு பதிவு செய்து மூவரையும் கைது செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.