Skip to main content

உளவுத்துறைக்கு ஜோ பைடன் பிறப்பித்த உத்தரவு; சீனா எதிர்ப்பு!

Published on 27/05/2021 | Edited on 27/05/2021

 

joe biden

 

உலகையே ஆட்டிப்படைத்துரும் கரோனாவின் தோற்றம் குறித்து  சர்ச்சைகள் தொடர்ந்துவருகின்றன. கரோனா தோற்றத்தைக் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர் குழு, சீனாவிற்குச் சென்று ஆய்வு நடத்தி, ஆய்வகத்திலிருந்து கரோனா பரவியிருக்க வாய்ப்பில்லை என தெரிவித்தது. ஆனால், இதனை அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஏற்கவில்லை. அதேநேரத்தில், சீனாவில் ஆய்வு நடத்தும்போது, தங்களுக்குப் போதுமான தரவுகளை அந்த நாடு வழங்கவில்லை என உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர் குழு குற்றம் சாட்டியது.

 

இதனையடுத்து உலக சுகாதார நிறுவனம், கரோனா பரவலின் தோற்றம் தொடர்பான அடுத்த கட்ட விசாரணை குறித்து முடிவு செய்ய விரைவில் கூட இருக்கிறது. இந்தநிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கரோனா பரவல் குறித்து அமெரிக்க உளவுத்துறை நடத்திவரும் விசாரணை தொடர்பான சில தகவல்களை வெளியிட்டார்.

 

அமெரிக்க உளவுத்துறை, கரோனா வைரஸ்கள் பரவலுக்கான இரண்டு சாத்தியக்கூறுகளைக் கண்டறிந்துள்ளது. இருப்பினும் கரோனா பரவல் குறித்த உறுதியான முடிவுக்கு வர முடியவில்லை என தெரிவித்துள்ள ஜோ பைடன், கரோனா பரவல் குறித்த உறுதியான முடிவுக்கு நெருக்கமாக  அழைத்துச் செல்லக்கூடிய தகவல்களைத் திரட்டுவதிலும், அவற்றை ஆய்வு செய்வதிலும் உங்கள் முயற்சியை இரட்டிப்பாக்குங்கள் என உளவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளதோடு, 90 நாட்களில் தனக்கு கரோனா பரவல் குறித்து அறிக்கை அளிக்குமாறும் கூறியுள்ளார்.

 

மேலும் ஜோ பைடன், "ஒரு முழுமையான, வெளிப்படையான, சான்றுகளை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச விசாரணையில் பங்கேற்கவும், தொடர்புடைய அனைத்து தரவு மற்றும் ஆதாரங்களுக்கும் அனுமதியை வழங்கவும் சீனாவிற்கு அழுத்தம் தர, உலகம் முழுவதுமுள்ள ஒத்த எண்ணங்கொண்ட நண்பர்களுடன் அமெரிக்கா தொடர்ந்து செயல்படும்" என தெரிவித்தார்.

 

இதனையடுத்து ஜோ பைடனின் அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அமெரிக்காவிலுள்ள சீன தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் சீன தூதரகம், "கரோனாவின் தோற்றத்தை அரசியலாக்குவது மேலும் நடைபெறவிருக்கும் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்கும். தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதற்கான உலகளாவிய முயற்சிகளை வலுவிழக்கச் செய்யும்" என கூறியுள்ளது. மேலும், உலகளவில் கண்டறியப்பட்ட ஆரம்பகால கரோனா பாதிப்பு பற்றிய விரிவான ஆய்வுக்கும், உலகெங்கிலும் உள்ள சில ரகசிய தளங்களிலும், உயிரியல் ஆய்வகங்களிலும் முறையான விசாரணை நடத்துவதற்கும் சீனா ஆதரவளிப்பதாகவும் சீன தூதரகம் கூறியுள்ளது.

 

இதற்கிடையே ஜோ பைடனின் அறிவிப்பை தொடர்ந்து சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகையான குளோபல் டைம்ஸ் பத்திரிகை, “'(கரோனா) ஆய்வக கசிவு கோட்பாடு' மேலும் விசாரிக்கப்பட வேண்டுமானால், டெட்ரிக்போர்ட்டில் உள்ள ஆய்வகம் உட்பட அதன் சொந்த ஆய்வகள் குறித்து விசாரிக்க அமெரிக்கா அனுமதிக்க வேண்டும்” என கூறியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்