Skip to main content

ட்விட்டரில் பறிபோகும் வேலைகள்; உலகெங்கும் வலுக்கும் எதிர்ப்புகள்; மகிழ்ச்சியில் இந்தியர்

Published on 05/11/2022 | Edited on 05/11/2022

 

Jobs that are disappearing on Twitter; Violent protests around the world; Happy Indian

 

உலகின் நம்பர் ஒன் பணக்காரரும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனருமான எலான் மஸ்க், உலகின் முன்னணி சமூக வலைத்தளமான ட்விட்டரை தன் வசப்படுத்திக் கொண்டார். நிறுவனத்தை வாங்கியதும் ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த பராக் அகர்வாலைப் பொறுப்பிலிருந்து நீக்கினார். அத்துடன் அந்நிறுவனத்தின் சட்டத் துறைத் தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல், தலைமை நிதி அதிகாரி நெட் சேகல் ஆகியோரையும் பதவியிலிருந்து நீக்கி பல அதிரடி முடிவுகளை எலான் மஸ்க் எடுத்து வருகிறார்.

 

இதற்கு அடுத்தபடியாக மற்றொரு அறிவிப்பு வந்தது. ட்விட்டரில் ப்ளூ டிக் வசதி கொண்ட அதிகாரப்பூர்வ கணக்கு வைத்திருப்பவர்களிடம் மாதா மாதம் கட்டணம் வசூலிக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ட்விட்டரில் வேலை பார்க்கும் ஊழியர்களின் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. இதனால் 50 % ஊழியர்கள் வேலை இழக்கும் சூழல் உருவானது.  

 

தற்போது அது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ட்விட்டரில் வேலை பார்க்கும் பணியாளர்களில் ஏராளமானோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் ஊழியர்களுக்கு நிர்வாகம் அனுப்பிய கடிதத்தில் இன்றில் இருந்தே பணியில் இருந்து விலக உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் தகவல் வெளியானது.

 

அதிகாலை 4 மணியளவில் அனுப்பப்பட்ட இந்த மின்னஞ்சலில் ஒரு பணியாளராக அலுவலகத்தை அணுகும் இமெயில் போன்ற வசதிகள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் முன்னறிவிப்பு இன்றி நடைமுறைப் படுத்தப்பட்ட இந்த நடவடிக்கைக்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.  

 

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள எலான் மஸ்க் “நிறுவனத்திற்கு ஒவ்வொரு நாளும் 4 மில்லியன் இழப்பு ஏற்படுகிறது. ஆட்குறைப்பு செய்வதைத் தவிர வேறு வழியில்லை. அவர்களுக்கு மூன்று மாத பணி நீக்க ஊதியம் கொடுக்கப்பட்டுள்ளது. இது சட்டப்படி வழங்கப்படுவதை விட 50% அதிகமானது” எனக் கூறியுள்ளார். 

 

இந்நிலையில் ட்விட்டரில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த யாஷ் அகர்வால் என்ற நபர் “ட்விட்டரில் இருந்து இப்போதுதான் பணி நீக்கம் செய்யப்பட்டேன். ட்விட்டரில் பணியாற்றியது பெருமைக்குரியது. இந்த அணியில் இந்த சூழ்நிலையில் ஓர் அங்கமாக இருந்தது மிகப் பெரிய பாக்கியம்” என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இந்தியாவின் 180 ஊழியர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விவசாயிகளின் அக்கவுண்ட்டை முடக்க மத்திய அரசு உத்தரவு; எக்ஸ் நிறுவனம் அதிருப்தி

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
 Company X is dissatisfied for Central government order to freeze pages

தலைநகர் டெல்லியை நோக்கி, 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் பேரணியாகச் செல்கின்றனர். விவசாயிகளுக்கும் ஹரியானா மாநில காவல்துறையினருக்கும் இடையே பஞ்சாப், ஹரியானா எல்லைப் பகுதிகளில் கடும் மோதல் நீடித்துவருகிறது.பஞ்சாப் ஹரியானா எல்லையான ஷாம்பு எல்லைப் பகுதியில், ஏற்கெனவே விவசாயிகள் மீது தொடர்ந்து காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி வருகின்றனர்.

பஞ்சாப் - ஹரியானாவின் மற்றொரு எல்லையான காணுரியில், நேற்று (21-ஆம் தேதி) காலை முதல் தொடர்ந்து கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசும் ஹரியானா போலீசார், விவசாயிகளைக் கலைத்து வருகின்றனர். காவல்துறையினரால் வீசப்பட்ட கண்ணீர் புகைக் குண்டு வெடித்து, பஞ்சாப் மாநிலம் பதிண்டாவைச் சேர்ந்த சுப்கரன் சிங் (வயது 24) என்னும் இளம் விவசாயி உயிரிழந்தார். இது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, போராட்டத்தில் உள்ள விவசாயிகள் மீது போலீசார் நடத்தும் கண்ணீர்புகை குண்டு வீசும் வீடியோக்களை விவசாயிகள் பலர் தங்களது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்திய அரசின் உத்தரவின் பேரில் சில கணக்குகள் மற்றும் பதிவுகள் நீக்கப்பட்டதாக எக்ஸ் (ட்விட்டர்) இன்று (22-02-24) தெரிவித்துள்ளது. 

இது குறித்து, எக்ஸ் (ட்விட்டர்) நிறுவனத்தின் உலக அரசுகள் விவகார பிரிவு வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது, ‘இந்திய அரசின் உத்தரவுகளுக்கு இணங்க, குறிப்பிட்ட கணக்குகள் மற்றும் பதிவுகளை இந்தியாவில் மட்டும் நிறுத்தி வைப்போம். இந்த நடவடிக்கையை எடுத்ததில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. மேலும், கருத்து சுதந்திரம் என்பது இந்த பதிவுகளுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும். 

எங்கள் நிலைப்பாட்டிற்கு இணங்க இந்திய அரசின் தடை உத்தரவுகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ரிட் மேல்முறையீடு நிலுவையில் உள்ளது. எங்கள் கொள்கையின்படி, பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு இந்த நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பையும் நாங்கள் வழங்கியுள்ளோம். சட்டக் கட்டுப்பாடுகள் காரணமாக, இந்திய அரசின் நிர்வாக உத்தரவுகளை வெளியிட முடியவில்லை. ஆனால், வெளிப்படைத்தன்மையின் அடிப்படையில் இந்த உத்தரவை பொதுவெளியில் வைப்பது அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம்’ என்று தெரிவித்துள்ளது. 

Next Story

முடங்கியது 'எக்ஸ்'

Published on 21/12/2023 | Edited on 21/12/2023
 Disabled 'X'

உலக அளவில் எக்ஸ் எனும் ட்விட்டர் இணையதளம் முடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரபல பணக்காரரான எலான் மஸ்க்கால் வாங்கப்பட்ட பிறகு பல்வேறு பிரச்சனைகளிலும் சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறது ட்விட்டர். டிவிட்டருக்கு எக்ஸ் (x ) என பெயர் மாற்றப்பட்டது. இந்நிலையில் தற்போது 'x' வலைத்தளமானது உலகம் முழுவதும் முடங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் பல கோடி பயனர்கள் அவதியுற்று வருகின்றனர்.