Israel violates ceasefire and 200 people including children hit in Gaza

கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் மீது வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து, இந்த போரில், பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் என 250க்கும் மேற்பட்ட இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களை ஹமாஸ் அமைப்பினர் பணயக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இஸ்ரேலும், ஹமாஸ் அமைப்பினரைக் குறிவைத்து காசா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் காசாவைச் சேர்ந்த 45,000க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த போரால், மத்திய கிழக்கு பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வந்தது. மேலும், இந்த போர் உலகையே களங்கடிக்க செய்தது.

15 மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் - ஹமார் அமைப்பினர் இடையே நடந்து வரும் போர், அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்பின் தலையீட்டின் காரணமாக போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், பணயக் கைதிகளாக பிடித்துச் சென்ற இஸ்ரேலியர்களை, ஹமாஸ் அமைப்பினர் தொடர்ந்து விடுத்து வந்தனர். பதிலுக்கு, பாலஸ்தீன கைதிகளையும் இஸ்ரேல் தொடர்ந்து விடுவித்தது.

Advertisment

இந்த போர், முடிவுக்கு வந்தது என உலக மக்களுக்கும் பாலஸ்தீன மக்களும் பெருமூச்சு விட்ட நிலையில், மீண்டும் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. போர் ஒப்பந்தத்தை மீறி காசாவின் பல்வேறு பகுதிகளைச் குறிவைத்து இஸ்ரேல் இன்று (18-03-25) காலை வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல்களில், குழந்தைகள் உள்பட 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால், அங்கு பெரும் பதற்றம் நீடித்து வருகிறது.