ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில், ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான் கொல்லப்பட்டதன் பின்னர் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

Advertisment

iran people at streets against their government

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் நடத்திய வான்வழி தாக்குதலால் இந்த பதட்டம் அதிகமானது. இந்நிலையில், கடந்த புதன்கிழமை காலை டெஹ்ரான் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட உக்ரைன் நாட்டு விமானத்தை ஈரான் படைகள் தவறுதலாக சுட்டது. இதில் அந்த விமானத்தில் பயணம் செய்த 176 பேர் உயிரிழந்தனர். இதில் 82 ஈரானியர்கள் மற்றும் 63 கனடா நாட்டவர் ஆகியோரும் உயிரிழந்தனர். இந்த விமானத்தை தவறுதலாக சுட்டதாக ஈரான் அரசு தெரிவித்தது ஈரான் மற்றும் கனடா மக்களிடையே கடும்கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக ஈரான் நாட்டு மக்கள் தங்களது நாட்டு அரசாங்கத்திற்கு எதிராக போராட துவங்கியுள்ளனர்.

ஈரான் தலைநகர் டெஹ்ரான் பகுதியில் உள்ள அஸாதி சதுக்கம், அமீர் கபீர் பல்கலைக்கழக பகுதி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.போராட்டங்களை அடக்க பாதுகாப்புத்துறையினரும், போலீசாரும் கடுமையாக போராடி வருகின்றனர்.இந்நிலையில் போராட்டத்தை அடக்க மக்கள் மீது துப்பாக்கி சூடு நடைபெற்றதாகவும் சிலர் கூறி வருகின்றனர். ஏற்கனவே அமெரிக்கா உடன் பதட்டமான சூழல் நிலவிவரும் நிலையில், தங்களது உள்நாட்டில் ஏற்பட்டுள்ள போராட்டங்கள் காரணமாக ஈரான் அரசு செய்வதறியாது விழித்து வருகிறது.