Skip to main content

இஸ்ரேல் போர்; சர்வதேச செய்தியாளர்கள் மனு நிராகரிப்பு

Published on 09/01/2024 | Edited on 09/01/2024
International Journalists Petition Rejected israel

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே 3 மாதத்திற்கும் மேலாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவை சுற்றி வளைத்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.

போர் விமானங்கள் மூலம் காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக் குழுவின் நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. கத்தார், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், தற்போது மீண்டும் காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த போருக்கு சர்வதேச அளவில் அழுத்தமும் அதிகரித்து வருகிறது.

அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகள் போர் நிறுத்தம் வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறது. ஆனால் எதையும் இஸ்ரேல் கண்டுகொள்ளாமல் தான் சொன்னபடி ஹமாஸ் அமைப்பில் இருக்கும் கடைசி நபரை அழிக்கும் வரை யுத்தம் முடிவுக்கு வராது என்று தொடர்ந்து காசா மீது குண்டு மழையைப் பொழிந்து வருகின்றது. இதில் காசாவில் நிமிடத்திற்கு நிமிடம் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 22,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 57,614 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், சர்வதேச ஊடகவியலாளர்கள் சங்கம் சார்பில் இஸ்ரேலின் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தொடரப்பட்டது. அதில், இஸ்ரேலிய இராணுவ துணையின்றி காசாவிற்குள் செய்தியாளர்கள் நுழைய அனுமதிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணையில் இஸ்ரேல் உச்சநீதிமன்றம், சர்வதேச ஊடகவியலாளர்கள் சங்கம் தொடர்ந்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய செய்தி இணையதளமான வாலா தெரிவித்துள்ளது.

இந்த விசாரணையின் போது, பத்திரிகையாளர்களை உள்ளே அனுமதிப்பது இஸ்ரேலிய இராணுவத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் என்று நீதிமன்றத்தில் வாதிட்டதாக கூறப்படுகிறது. 

போரின் தொடக்கத்தில் இருந்து காசாவிற்குள் நுழைந்த ஒவ்வொரு வெளிநாட்டு செய்தியாளரும் இஸ்ரேலிய இராணுவத்துடன் பயணித்துள்ளனர். இராணுவ விதிகளை கடைபிடித்து, காட்சிகளை வெளியிடுவதற்கு முன்பு இராணுவத்தால் மதிப்பாய்வு செய்ய அனுமதிக்க ஒப்புக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்