Skip to main content

இலங்கையில் இடைக்கால அமைச்சரவை பதவியேற்பு - அடுத்தடுத்து நிகழும் அரசியல் திருப்பம்

Published on 04/04/2022 | Edited on 04/04/2022

 

Interim cabinet inauguration in srilanka

 

இலங்கையில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. பால்,  மாவு போன்ற உணவுப் பொருட்கள் மற்றும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு கிடைக்காததால் வெகுண்டெழுந்த மக்கள், ராஜபக்சே சகோதரர்கள் அரசியலிலிருந்து வெளியேறக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

 

இந்த நிலையில், மகிந்த ராஜபக்சே தலைமையிலான அமைச்சரவையில் பதவி வகித்து வந்த அனைத்து அமைச்சர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அனைத்து அமைச்சர்களின் ராஜினாமா கடிதத்தையும் அதிபர் கோத்தபய ராஜபக்சேவிடம் பிரதமர் மகிந்த ராஜபக்சே வழங்கினார்.

 

அமைச்சர்களின் ராஜினமா கடிதத்தை ஏற்று, அனைத்துக் கட்சிகள் அடங்கிய காபந்து அரசு அமைக்க கோத்தபய ராஜபக்சே அழைப்பு விடுத்திருந்த நிலையில், தற்போது நான்கு அமைச்சர்கள் கொண்ட இடைக்கால அமைச்சரவை பதவியேற்றுள்ளது. அதிபர் கோத்தபய ராஜபக்சே முன்னிலையில் நால்வரும் பதவியேற்றுக்கொண்டனர். 

 

நிதி அமைச்சராக அலி சப்ரியும், ஜான்ஸ்டன் பெர்ணான்டோ நெடுஞ்சாலைத்துறை அமைச்சராகவும், தினேஷ் குணவர்தனா கல்வி அமைச்சராகவும், ஜி.எல்.பெய்ரிஸ் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பதவியேற்றுள்ளனர். இந்த நான்கு அமைச்சர்களும் முந்தைய அமைச்சரவையிலும் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல கடந்த அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்த ராஜபக்சேவின் சகோதரர் பசில் ராஜபக்சேவுக்கு இடைக்கால அமைச்சரவையில் இடம் வழங்கப்படாததும் கவனிக்கத்தக்கது. 

 

அனைத்து கட்சிகள் அடங்கிய அமைச்சரவை பட்டியல் தயார் செய்யப்பட்டவுடன் இந்த இடைக்கால அமைச்சரவை கலைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

  

 

சார்ந்த செய்திகள்