india china border issue resolved

Advertisment

இந்தியா, சீனா இடையேயான எல்லைப்பிரச்சனையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகச் சீன வெளியுறவுத் துறை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

அருணாச்சல பிரதேசத்தைத் தொடர்ந்து லடாக் மற்றும் சிக்கிம் ஆகிய பகுதிகளிலும் வரையறுக்கப்பட்ட எல்லையைத் தாண்டி, இந்தியாவின் சில பகுதிகளைச் சொந்தம் கொண்டாடும் சீனா, அப்பகுதிகளில் ராணுவ நடமாட்டத்தையும் அதிகரித்தது. இதனிடையே கடந்த மே 5-ஆம் தேதி லடாக் எல்லைப் பகுதியில் இந்திய- சீன வீரர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டதாகத் தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் இருநாட்டு ராணுவமும் தங்களது படைகளைக் குவித்து வந்தது. இதன் காரணமாக இருநாடுகளுக்கும் மத்திய போர் பதட்டம் உருவானது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இருநாட்டு அதிகாரிகளுக்கும் இடையே காணொலிக்காட்சி மூலம் 12 சுற்றுப் பேச்சு வார்த்தைகள் நடந்தன. இதைத் தொடர்ந்து கடந்த 6-ஆம் தேதி இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகளின் பேச்சுவார்த்தை சீன எல்லைப் பகுதியான மால்டோவில் நடந்தது.

இந்தச் சூழலில், இந்தப் பேச்சுவார்த்தைகுறித்துச் செய்தியாளர்களிடம் பேசியுள்ள சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹுவா சூன்யிங், "கடந்த 6-ஆம் தேதி நடந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இரு நாடுகளின் தலைவர்கள் ஏற்கெனவே ஏற்படுத்திய ஒப்பந்தங்கள் முறைப்படி அமல்படுத்தப்படும். எல்லையில் அமைதியை நிலைநாட்ட இரு நாடுகளும் இணைந்து செயல்படும்" எனத் தெரிவித்துள்ளார்.