
பணிக்காலத்தின் போது 250க்கும் மேற்பட்ட சிறுமிகளை மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் ஒட்டுமொத்த பிரான்ஸ் நாட்டையே உலுக்கியுள்ளது.
மேற்கு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் ஜோயல் லெ ஸ்கௌர்னெக் (74). இவர் அங்குள்ள அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நல மருத்துவராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த சூழ்நிலையில், தனது இரண்டு மருமகள்கள் உட்பட நான்கு குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜோயலை போலீசார் கைது செய்தனர். இந்த கொடூரச் செயலுக்காக, இவருக்கு கடந்த 2020ஆம் ஆண்டு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அதன்படி தொடர்ந்து, அவர் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார்.
தொடர்ந்து அவரிடம் நடைபெற்று வந்த விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது. அதாவது, 1989ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான பணிக்காலத்தின் போது அவரிடம் சிகிச்சைக்கு வந்த 15 வயதுக்கு உட்பட்ட 256 சிறுமிகள் உட்பட மொத்தம் 299 பெண்களை ஜோயல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என்பது தெரியவந்தது. மயக்க மருந்தை பயன்படுத்தியும் அல்லது அறுவை சிகிச்சைக்குப் பிறகு சுயநினைவு திரும்பிய பிறகும் பல பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளியே சொல்லாததாலும், போலீஸில் புகார் அளிக்காததாலும் ஜோயல் சுதந்திரமாக திரிந்துள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இந்த வழக்கு ஒட்டுமொத்த பிரான்ஸ் நாட்டையே உலுக்கியுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த பிரான்ஸ் நீதிமன்றம், கடந்த மே 28ஆம் தேதி மருத்துவர் ஜோயலுக்கு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. பிரெஞ்சு சட்டத்தின் கீழ், பல குற்றங்களுக்கான தண்டனைகள் ஒட்டுமொத்தமாக இருக்காது. லு ஸ்கௌர்னெக் தண்டனையின் மூன்றில் இரண்டு பங்கை அனுபவிக்கும் வரை பரோலுக்கு தகுதி பெற மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.