மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் இடைவிடாதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மத்திய அரசுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்த நிலையில் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர். இந்த நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவாகப் பல்வேறு தரப்பினரும் குரல் எழுப்பி வருகின்றனர்.
அந்த வகையில், ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சூழலியல் போராளி கிரேட்டா தன்பெர்க், இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக நேற்று ட்வீட் செய்தார். அதில், "போராடி வரும் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்போம்" எனப் பதிவிட்டார். இந்தப் பதிவிற்காக, கிரேட்டா தன்பெர்க் மீது டெல்லி காவல்துறை சதி, வெறுப்பைத் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தது.
இந்நிலையில், இன்று மீண்டும் விவசாயிகளுக்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ளார் கிரேட்டா. அதில், "நான் இப்போதும் விவசாயிகளுடன் நிற்கிறேன். அவர்களின் அமைதியான போராட்டத்தை ஆதரிக்கிறேன். வெறுப்பு, அச்சுறுத்தல்கள், மனித உரிமை மீறல்களால் எதையும் மாற்றமுடியாது” எனக் கூறியுள்ளார்.