இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 21ஆம் தேதி (21.09.2024) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெற்றது. இந்த தேர்தலில், ரணில் விக்ரம சிங்கே, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அநுரா குமார திஸநாயக, இலங்கையின் கடைசிக்கட்ட போரின் போது ராணுவ தளபதியாக இருந்த சரத் பொன்சேகா, உள்ளிட்ட 38 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் மொத்தம் 75% வாக்குகள் பதிவான நிலையில், வாக்கு எண்ணிக்கையும் அன்றே தொடங்கியது.
இந்த தேர்தலில் பதிவான வாக்குகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். அதன்படி 55.89 சதவீத வாக்குகளுடன் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அநுர குமார திஸநாயக, இந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து நேற்று (23.09.2024) இலங்கையின் 9வது அதிபராக அநுரா குமார திஸநாயக பதவியேற்றார். கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகையில் எளிமையான முறையில் பதவியேற்பு நிகழ்ச்சியில், இலங்கையின் தலைமை நீதிபதி ஜெயந்த ஜெயசூரியா, அநுரா குமார திஸ்நாயகவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதனையடுத்து இலங்கை பிரதமராக இருந்த தினேஷ் குணவர்த்தன தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். இந்நிலையில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரியஇலங்கையின் இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இலங்கை அரசியல் வரலாற்றில் 3வது பெண் பிரதமர் என்ற பெருமையை ஹரிணி அமரசூரியபெற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து அதிபர் அநுர குமார திஸ்ஸநாயக முன்னிலையில், நீதித்துறை, கல்வித்துறை மற்றும் தொழில்துறை அமைச்சராகவும் ஹரிணி அமரசூரியபொறுப்பேற்றுக்கொண்டார்.