Skip to main content

90 ஆண்டுகளில் முதன்முறை... வரலாறு படைத்த க்ரெட்டா தன்பெர்க்...

Published on 12/12/2019 | Edited on 12/12/2019

உலகநாடுகள் பங்குபெற்ற ஐக்கிய நாடுகள் அவையின் 74வது பொதுக்கூட்டத்தில் டிரம்ப் உள்ளிட்ட உலக தலைவர்களை கடுமையாக விமர்சித்து இணைய உலகில் பிரபலமானவர் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 16 வயது சிறுமியான க்ரெட்டா தன்பெர்க்.

 

greta thunberg named as person of the year by times

 

 

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், உலக வெப்பமயமாதலை தடுக்க வலியுறுத்தி ஸ்வீடன் நாடாளுமன்ற வளாகம் முன்பு தனி ஒரு ஆளாக போராட்டம் நடத்தி உலக மக்களின் கவனத்தை இவர் பெற்றார். அதன்பின்னர் ஐ.நா வில் இவரின் உரையும் உலக அளவில் பெரும் ஆதரவை பெற்றது. இந்நிலையில் டைம்ஸ் இதழின் 2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த மனிதர் என்ற பட்டத்தை க்ரெட்டா தன்பெர்க் பெற்றுள்ளார்.

1927 ஆம் ஆண்டு முதல் டைம்ஸ் இதழ் ஒவ்வொரு ஆண்டுக்கான சிறந்த நபர்களின் பெயரை வெளியிட்டு கௌரவித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 92 ஆண்டுகளில் இந்த விருதினை பெற்ற மிக இளம் வயது நபர் என்ற சாதனையை க்ரெட்டா படைத்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டைம்ஸ் இதழின் ஆசிரியர் எட்வர்ட் ஃபெல்செந்தல், ''இந்த ஆண்டு கிரகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனையின் வலிமையான குரலாக கிரேட்டா மாறினார், உலகளாவிய பருவநிலை மாற்றத்திற்கான இயக்கத்தை அவர் வழி நடத்துகிறார்'' என தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டைம்ஸ்-ன் 2021ஆம் ஆண்டின் செல்வாக்கு மிக்க 100 நபர்கள் பட்டியலில் மோடி, மம்தா!

Published on 16/09/2021 | Edited on 16/09/2021

 

MODI - MAMATA

 

டைம்ஸ் பத்திரிகை வருடந்தோறும் உலகின் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலை வெளியிட்டுவருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு டைம்ஸ் பத்திரிகையால் வெளியிடப்பட்டுள்ள உலகின் 100 செல்வாக்குமிக்க நபர்களின் பட்டியலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். தலிபான் அமைப்பின் இணை நிறுவனர் முல்லா அப்துல் கனி பராதரும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

 

இந்தியாவில் இருந்து இந்தப் பட்டியலில் பிரதமர் மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா, சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி ஆதர் பூனாவல்லா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். டைம்ஸ் பத்திரிகை, பிரதமர் மோடியை சுதந்திர இந்தியாவின் மூன்றாவது முக்கிய தலைவராக குறிப்பிட்டுள்ளது. நேரு மற்றும் இந்திரா காந்தியை சுதந்திர இந்தியாவின் முதலிரண்டு முக்கியத் தலைவர்களாக டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

அதேநேரத்தில், மோடி நாட்டை மதச்சார்பின்மையிலிருந்து, இந்து தேசியவாதத்தை நோக்கித் தள்ளுவதாகவும் டைம்ஸ் பத்திரிகை கூறியுள்ளது. மேலும், இந்தியாவில் முஸ்லிம் சிறுபான்மையினரின் உரிமைகளை மோடி பறிப்பதாகவும், பத்திரிகையாளர்களை சிறையில் அடைப்பதாகவும், அவர்களை மிரட்டுவதாகவும் டைம்ஸ் பத்திரிகை கூறியுள்ளது.

 

அதேபோல், இந்திய அரசியலின் உக்கிரமான முகமாக மம்தா மாறியுள்ளார் எனவும் டைம்ஸ் பத்திரிகை கூறியுள்ளது. மேலும், "மம்தா திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை வழிநடத்தவில்லை, கட்சியே அவர்தான்" என மம்தா பற்றி கூறப்படுவதாக குறிப்பிட்டுள்ள டைம்ஸ் பத்திரிகை, மம்தாவின் போராட்ட குணமும், ஆணாதிக்க கலாச்சாரத்தில் தனது வாழ்வை தானே வடிவமைத்துக்கொண்டதும் அவரை தனித்துவமாக்குகிறது எனவும் தெரிவித்துள்ளது. தேசிய அளவில் மோடியை எதிர்கொள்வதற்கு ஏதேனும் கூட்டணி ஒன்றிணைந்தால், அதில் மம்தா முக்கிய பங்கு வகிப்பது உறுதி எனவும் தெரிவித்துள்ளது.

 

 

Next Story

புதின் எதிர்ப்பாளருக்கு நோபல் பரிசு - கல்வியாளர்கள் பரிந்துரை!

Published on 02/03/2021 | Edited on 02/03/2021

 

nobel prize

 

இயற்பியல், மருத்துவம், இலக்கியம், அமைதி, வேதியல் உள்ளிட்ட துறைகளில் சிறந்த பங்களிப்பை அளிப்போருக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பரிசுக்கான பரிந்துரைகளை, இதற்கு முன் நோபல் பரிசு வென்றவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் செய்யலாம். இந்தநிலையில் இந்த ஆண்டிற்கான நோபல் பரிசுக்கு 329 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

 

இந்தப் பரிந்துரை பட்டியலில் சுவீடன் நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் க்ரெட்டா தன்பெர்க், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய எதிர்க்கட்சி தலைவரும், அந்த நாட்டின் அதிபர் புதினை கடுமையாக எதிர்த்து வருபவருமான அலெக்ஸி நவல்னி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ரஷ்யாவை ஜனநாயகமாக்கும் அமைதியான முயற்சிகளுக்காக அந்த நாட்டு கல்வியாளர்களால் அலெக்ஸி நவல்னி பரிந்துரைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

உலக சுகாதார நிறுவனமும் நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஏழைநாடுகள் கரோனா தடுப்பூசியைப் பெற, உலக சுகாதாரம் நிறுவனம் எடுத்து வரும் முயற்சிகளுக்காக, அந்த நிறுவனம் நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான நோபல் பரிசை வெல்பவர்கள், யார் யார் என்பது வரும் அக்டோபர் மாதம் அறிவிக்கப்படும்.