Skip to main content

கோத்தபாயவின் திமிர்பேச்சு: இந்தியா கண்டிக்க வேண்டும்! ராமதாஸ்

Published on 16/10/2019 | Edited on 16/10/2019

 

ஈழத்தமிழருக்கு எதிரான கோத்தபாயவின் திமிர்பேச்சை இந்தியா கண்டிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

இலங்கை அதிபர் தேர்தலில் தாம் வெற்றி பெற்றால், இலங்கை போர்க்குற்றங்கள் குறித்த அனைத்து  விசாரணைகளும் நிறுத்தப்படும் என்றும், சிங்கள போர்ப்படையினர் அனைவரும்  குற்றச்சாட்டுகளில்  இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் கோத்தபாய இராஜபக்சே கூறியுள்ளார். ஈழத்தமிழர்களுக்கு எதிரான கோத்தபாயவின் இந்த திமிர்ப்பேச்சு கண்டிக்கத்தக்கதாகும்.

 

pmk



மகிந்த இராஜபக்சேவின் சிங்கள பொதுஜன பெரமுனா கட்சியின் சார்பில் இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் அவரது சகோதரரும், முன்னாள் பாதுகாப்புத்துறை செயலாளருமான கோத்தபாய ராஜபக்சே கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசும் போது,‘‘ஐ.நா அமைப்புடன் நாங்கள் எப்போதும் இணைந்து செயல்படுவோம். ஆனால், இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களை விசாரிப்பது தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையத்துடன், முந்தைய இலங்கை அரசுகள் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் எதையும் நாங்கள் செயல்படுத்த மாட்டோம். போர்க்குற்றச்சாட்டுகளில் தவறாக சேர்க்கப்பட்ட இராணுவத்தினர் அனைவரும் விடுவிக்கப்படுவர்’’ என்று கூறியிருக்கிறார். இதை ஒரு போது ஏற்றுக்கொள்ள முடியாது.
 

கோத்தபாய இராஜபக்சே இவ்வாறு பேசியிருப்பதன் பின்னணியில் இரு முக்கியக் காரணங்கள் உள்ளன. முதலாவது, ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு காரணமான சிங்களர்களைக் காப்பாற்றப்போவதாக கூறுவதன் மூலம், சிங்களர்களிடையே இனவெறியைத் தூண்டி, அதன் மூலம் அவர்களின் வாக்குகளை எளிதாக பெற்று வெற்றி பெறுவது. இரண்டாவது, இலங்கையில் ஒன்றரை லட்சம் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு முக்கியக் காரணம் அக்காலத்தில் இலங்கை அதிபராக இருந்த மகிந்த இராஜபக்சே, பாதுகாப்புச் செயலாளராக கோத்தபாய இராஜபக்சே ஆகியோர் தான் என்பதால் தங்களையும் போர்க்குற்ற விசாரணையிலிருந்து விடுவித்துக் கொள்வது ஆகும். இவை இரண்டுமே மிகவும் ஆபத்தானவையாகும்.
 

2009-ஆம் ஆண்டு இலங்கைப் போரில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்களும், போர்க்குற்றங்களும்  விவரிக்க முடியாதவை. உலக அளவில் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகளை வீசியும், ராக்கெட்  தாக்குதல் நடத்தியும் ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். சிங்களப் படையினரின் தாக்குதல்களில் இருந்து தப்பித்த மூன்றரை லட்சத்திற்கும் கூடுதலான தமிழர்கள் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டு கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். சிங்களப் போர்ப்படையினரால் சட்டவிரோதமாக கடத்திச் செல்லப்பட்ட ஆயிரக்கணக்கான முக்கிய பிரமுகர்கள் என்ன ஆனார்கள்? என்பது இதுவரை தெரியவில்லை. இலங்கைப் போர் முடிவடைந்து 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் சொந்தங்களை இழந்த  ஈழத்தமிழர்களுக்கு இன்னும் நீதி கிடைக்காத நிலையில், ஆட்சிக்கே இன்னும் வராத போர்க்குற்றவாளியான கோத்தபாய, போர்க்குற்ற விசாரணைகளை நடத்த மாட்டேன் என்று கொக்கரிப்பது இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளை அவமதிக்கும், சிறுமைப்படுத்தும் செயல் ஆகும்.


 

இலங்கை இனப்படுகொலைக்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும் என்று பாமக உள்ளிட்ட கட்சிகளும், உலகம் முழுவதும் உள்ள ஈழத்தமிழர்களும் தொடர்ந்து மேற்கொண்ட முன்னெடுப்புகளின் பயனாக இலங்கைப் போரில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து ஐநா மனித உரிமை ஆணையரின் விசாரணைக்கு 2014 ஆம் ஆண்டில் ஆணையிடப்பட்டது. ஐநா மனித உரிமை ஆணையர் தலைமையிலான விசாரணையில், இலங்கைப் போரில் போர்க்குற்றங்கள் நடந்தது உறுதி செய்யப்பட்டது.
 

அதைத் தொடர்ந்து இலங்கை மீதான போர் குற்றச்சாட்டுகள் பற்றி வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்கும் வகையில் சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 25 நடவடிக்கைகளை இலங்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி 2015 ஆம் ஆண்டு ஐநா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பின் 4 ஆண்டுகளுக்கு மேலாகியும், போர்க்குற்றவாளிகளை இலங்கை அரசு தண்டிக்கவில்லை.  தமிழர்கள் வாழும் பகுதிகளில் இருந்து படைகள் இன்னும் விலக்கப்படவில்லை; நிலங்கள் ஒப்படைக்கப்படவில்லை.


 

இலங்கைப் போரின் போது இராஜபக்சே சகோதரர்கள் நடத்திய போர்க்குற்றங்களும், அக்கிரமங்களும்  உலகம் அறிந்தவை. டப்ளின் தீர்ப்பாயம் உள்ளிட்ட பல தீர்ப்பாயங்கள் அவர்களை போர்க்குற்றவாளிகளாக அறிவித்தன. அப்படிப்பட்ட ஒரு போர்க்குற்றவாளி அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பாகவே தமிழர்களை அச்சுறுத்தி, சிங்கள இனவெறியை தூண்டுகிறார். அவர் தேர்தலில் வெற்றி பெற்று அதிபர் ஆனால், அதன்பின் இலங்கையில் தமிழர்கள் வாழவே முடியாத நிலை ஏற்பட்டு விடும். ஈழத்தமிழர்களின்  வாழ்வுரிமையை பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் இந்தியாவுக்கு உண்டு. எனவே, இந்த விஷயத்தில் இந்தியா தலையிட்டு கோத்தபாய இராஜபக்சேவின் நிலைப்பாட்டுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, இலங்கையில் போர்க்குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவதையும்,  ஈழத்தமிழர்கள் கண்ணியத்துடன் வாழ்வதையும் உறுதி செய்ய இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த்தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு; ராமதாஸ் கண்டனம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Ramdas said mixing of cow dung in the drinking water tank of Sangamviduthi panchayat is reprehensible

சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள்  அதிர்ச்சியளிக்கின்றன. பொதுமக்கள் குடிப்பதற்கான குடிநீர்த் தொட்டியில்  மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது மனிதநேயமற்றது மட்டுமின்றி, மனிதத் தன்மையற்ற செயலாகும்.  இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாகவே மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது. அத்தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த போது தான் இந்த உண்மை வெளிவந்திருக்கிறது. மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான குடிநீர்த் தொட்டியில் இது போன்ற மிருகத்தனமான செயல்கள் நடப்பதைக் கண்காணிக்க வேண்டியதும், ஒவ்வொரு நாளும் குடிநீர் மக்கள் பயன்படுத்தத் தக்க வகையில் பாதுகாப்பாக இருக்கிறதா?  என்பதை ஆய்வு செய்ய வேண்டியதும் அரசின் பணி. ஆனால், இந்த இரு கடமைகளிலும் திராவிட மாடல் அரசு தோல்வியடைந்து விட்டது.

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன. அதிலும் குறிப்பாக பள்ளிகளிலும், பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்வது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக இத்தகைய கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது.

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து இன்றுடன் 17 மாதங்களாகி விட்டன. ஆனால்,  அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் இத்தகைய கொடுமைகள் மீண்டும், மீண்டும் நிகழ்வதற்கு காரணம் ஆகும். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல்  குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு கொடூரமானது. அனைவரும் மனிதர்கள் தான். பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.