Skip to main content

கூகுள் நிறுவனத்துக்கு 593 மில்லியன் டாலர் அபராதம் விதித்த பிரான்ஸ்!

Published on 14/07/2021 | Edited on 14/07/2021

 

google

 

ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுவந்த புதிய டிஜிட்டல் பதிப்புரிமை வழிமுறையை, கடந்த 2019ஆம் ஆண்டு பிரான்ஸ் நாடு சட்டமாக்கியது. இந்தச் சட்டத்தின்படி, கூகுள், ஃபேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள், ஊடகங்கள் வெளியிடும் செய்திகளைத் தங்கள் தளங்களில் பயன்படுத்திக்கொள்ள, அந்த செய்தி நிறுவனங்களுக்கு இழப்பீடாக ஒரு தொகையைத் தர வேண்டும்.

 

இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டதன் தொடர்ச்சியாக, ஊடக செய்திகளைப் பயன்படுத்திக்கொள்ள இழப்பீடு வழங்குவது தொடர்பாக, ஊடகங்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டுமென்று கூகுள் நிறுவனத்துக்கு பிரான்ஸ் உத்தரவிட்டது. இதனையடுத்து கூகுள் நிறுவனம், இழப்பீடு ஒப்பந்தம் தொடர்பாக சில ஊடகங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இருப்பினும் அவை தோல்வியில் முடிந்தது.

 

இதனையடுத்து கூகுள் நிறுவனம், பிரான்ஸ் ஊடகங்கள் தங்கள் செய்திகளை இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்காவிட்டால், அந்தச் செய்திகளைத் தங்கள் தளத்தில் பயன்படுத்துவதில்லை என முடிவெடுத்தது. இதற்கு பிரான்ஸ் நாட்டின் சில முன்னணி ஊடகங்கள் எதிர்ப்பினை தெரிவித்தன. கூகுள் தனது சந்தை அதிகாரத்தை துஷ்ப்ரயோகம் செய்வதுபோல் உள்ளதாக தெரிவித்ததோடு, அந்த ஊடகங்கள் இதுதொடர்பாக புகார் அளித்தன.

 

இதனைத்தொடர்ந்து, கூகுள் நிறுவனத்துக்கு 500 மில்லியன் யூரோக்களை அபராதமாக விதித்து உத்தரவிட்டுள்ளது பிரான்ஸ். இது அமெரிக்க மதிப்பில் 593 மில்லியன் டாலர்களாகும். மேலும், கூகுள் நிறுவனம் உத்தரவை தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை எனவும் குற்றஞ்சாட்டியது. மேலும், தாங்கள் எவ்வாறு செய்திகளைப் பயன்படுத்துவதற்கு ஊடகங்களுக்கு இழப்பீடு அளிக்கப்போகிறோம் என்பதை கூகுள் நிறுவனம் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் தெரிவிக்காவிட்டால் ஒருநளைக்கு 900,000 யூரோக்களை அபராதமாக செலுத்த வேண்டும் எனவும் பிரான்ஸ் உத்தரவிட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஊழியர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு தந்த கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை!

Published on 19/01/2024 | Edited on 19/01/2024
Google CEO Sundar Pichai gave a shocking announcement to the employees!

உலகின் முன்னனி பன்னாட்டு இணையதள மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனம் தான் கூகுள் நிறுவனம். கலிபோர்னியாவை தலைமையகமாக கொண்டு இயங்கி வரும் இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இந்தியாவைச் சேர்ந்த சுந்தர் பிச்சை பொறுப்பு வகித்து வருகிறார். 

இதற்கிடையில், கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம், கூகுள் நிறுவனம் சர்வதேச அளவில் தனது ஊழியர்களில் 6 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்தது. அப்போது, இது பேசுபொருளாக அமைந்தது. இந்த பணிநீக்க நடவடிக்கையை தொடர்ந்து, 2024ஆம் ஆண்டிற்கான திட்டங்கள் குறித்து,  கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தனது ஊழியர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘நிறுவனத்தின் செயல்பாட்டை எளிதாக்குவதற்கான சில அடுக்குகளை நீக்க வேண்டியது காலத்தின் அவசியம். அதனால், இந்த ஆண்டும் பணி நீக்கங்கள் தொடரும். இந்த பணி நீக்க நடவடிக்கைகள் நிறுவனத்தின் செயல்பாட்டை அதிகரிக்கும் வகையில் பல்வேறு துறைகளின் அடுக்குகளை நீக்குவதாக இருக்கும். ஆனால், இந்த பணி நீக்கம் கடந்தாண்டின் அளவிற்கு இருக்காது. அதே போல், இது அனைத்து துறையிலும் இருக்காது” என்று தெரிவித்தார். 

கூகுள் நிறுவனங்களில் கடந்தாண்டு சுமார் 12,000 பேர் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டும் பணிநீக்க நடவடிக்கை தொடரும் என்று கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை கூறியிருப்பது ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்கும் 34 வயது இளைஞர்!

Published on 10/01/2024 | Edited on 10/01/2024
A 34-year-old youth will take over as the new Prime Minister of France

பிரான்ஸ் நாட்டில், கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற இமானுவேல் மேக்ரான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 46 வயதான இமானுவேல் மேக்ரானின் பதவிக் காலம் 2027 ஆம் ஆண்டு வரை உள்ளது. பிரான்ஸ் அரசியலமைப்பு சட்டத்தின்படி அதிபர், பிரதமரை நியமிக்கும் அதிகாரத்தைப் பெற்றவர். அதன்படி, பிரான்ஸ் நாட்டின் பிரதமராகக் கடந்த 2022 ஆம் ஆண்டு எலிசபெத் போர்ன் என்ற பெண் பதவியேற்றார். இவர் நாட்டின் இரண்டாவது பெண் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையடுத்து, அரசு கொண்டு வந்த ஓய்வூதிய கொள்கைகள், குடியேற்றச் சட்டங்கள் ஆகியவற்றை எதிர்த்து இமானுவேல் மேக்ரானுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. அதுமட்டுமல்லாமல், அரசு கொண்டு வந்த சட்டங்கள் தொடர்பான விவகாரங்களில் அரசுக்கும் கட்சிக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்தது. இதன் எதிரொலியாக, பிரான்ஸில் நடைபெற்ற இடைத் தேர்தலில் மேக்ரான் அரசு தோல்வி அடைந்தது. இதனால், நாடாளுமன்றத்தில் மேக்ரான் அரசு பெரும்பான்மையை இழந்தது. 

இந்த நிலையில், பிரதமர் எலிசபெத் போர்ன் திடீரென தனது பதவியை நேற்று முன்தினம் (08-01-24) ராஜினாமா செய்தார். பிரான்ஸ் நாட்டின் இரண்டாவது பெண் பிரதமர் என்ற சிறப்பை பெற்ற எலிசபெத் போர்ன், 2 ஆண்டுகளுக்கும் குறைவாகவே அப்பதவியை வகித்துள்ளார். எலிசபெத் போர்ன் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததால், பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக கல்வி அமைச்சர் கேப்ரியல் அட்டல் (34) பெயரை அதிபர் இமானுவேல் மேக்ரான் நேற்று (09-01-24) அறிவித்தார். 

பிரான்ஸ் நாட்டின் இளம் வயது பிரதமராகப் பொறுப்பேற்கும் கேப்ரியல் அட்டல், தன்னை வெளிப்படையாக தன்பாலீர்ப்பாளராக அறிவித்துக்கொண்டவர். மேலும், நாட்டின் முதல் தன்பாலீர்ப்பாளர் பிரதமராகப் பொறுப்பேற்கவிருக்கும் கேப்ரியல், 2020 ஆம் ஆண்டு முதல் 2022 வரை அரசின் செய்தித் தொடர்பாளராகப் பணியாற்றியுள்ளார். முன்பு, பொதுவுடைமை கட்சியில் இருந்த கேப்ரியல், 2016 ஆம் ஆண்டில் மேக்ரான் தொடங்கிய அரசியல் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.