Skip to main content

கரோனா மூன்றாவது அலை: ஒருமாத ஊரடங்கை அமல்படுத்தும் நாடு! 

Published on 01/04/2021 | Edited on 01/04/2021

 

LOCKDOWN

 

இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் தற்போது கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. பிரான்ஸ் நாட்டிலும் கரோனா தீவிரமாகப் பரவி வருகிறது. ஏற்கனவே கரோனாவின் இரண்டு அலைகளை எதிர்கொண்ட அந்த நாட்டில், தற்போது மூன்றாவது அலை ஏற்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.

 

இதனையடுத்து பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலும், மேலும் சில பகுதிகளிலும், கடந்த 19 ஆம் தேதியிலிருந்து ஒரு மாதத்திற்கு இலகுவான கட்டுப்பாடுகள் கொண்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது கரோனா பரவல் மேலும் அதிகரித்து வருவதால், இலகுவான கட்டுப்பாடுகளைக் கொண்ட இந்த ஊரடங்கை நாடு முழுவதும் அமல்படுத்த பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் உத்தரவிட்டுள்ளார். 

 

இந்த ஊரடங்கில், மூன்றுவார காலத்திற்குப் பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளைப் பொறுத்தவரை மக்கள், தங்கள் வசிப்பிடத்தைச் சுற்றி 10 கிலோமீட்டர் சுற்றளவில் பயணம் செய்யலாம். அத்தியாவசியத் தேவைகளுக்கான கடைகள் திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்கும் 34 வயது இளைஞர்!

Published on 10/01/2024 | Edited on 10/01/2024
A 34-year-old youth will take over as the new Prime Minister of France

பிரான்ஸ் நாட்டில், கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற இமானுவேல் மேக்ரான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 46 வயதான இமானுவேல் மேக்ரானின் பதவிக் காலம் 2027 ஆம் ஆண்டு வரை உள்ளது. பிரான்ஸ் அரசியலமைப்பு சட்டத்தின்படி அதிபர், பிரதமரை நியமிக்கும் அதிகாரத்தைப் பெற்றவர். அதன்படி, பிரான்ஸ் நாட்டின் பிரதமராகக் கடந்த 2022 ஆம் ஆண்டு எலிசபெத் போர்ன் என்ற பெண் பதவியேற்றார். இவர் நாட்டின் இரண்டாவது பெண் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையடுத்து, அரசு கொண்டு வந்த ஓய்வூதிய கொள்கைகள், குடியேற்றச் சட்டங்கள் ஆகியவற்றை எதிர்த்து இமானுவேல் மேக்ரானுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. அதுமட்டுமல்லாமல், அரசு கொண்டு வந்த சட்டங்கள் தொடர்பான விவகாரங்களில் அரசுக்கும் கட்சிக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்தது. இதன் எதிரொலியாக, பிரான்ஸில் நடைபெற்ற இடைத் தேர்தலில் மேக்ரான் அரசு தோல்வி அடைந்தது. இதனால், நாடாளுமன்றத்தில் மேக்ரான் அரசு பெரும்பான்மையை இழந்தது. 

இந்த நிலையில், பிரதமர் எலிசபெத் போர்ன் திடீரென தனது பதவியை நேற்று முன்தினம் (08-01-24) ராஜினாமா செய்தார். பிரான்ஸ் நாட்டின் இரண்டாவது பெண் பிரதமர் என்ற சிறப்பை பெற்ற எலிசபெத் போர்ன், 2 ஆண்டுகளுக்கும் குறைவாகவே அப்பதவியை வகித்துள்ளார். எலிசபெத் போர்ன் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததால், பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக கல்வி அமைச்சர் கேப்ரியல் அட்டல் (34) பெயரை அதிபர் இமானுவேல் மேக்ரான் நேற்று (09-01-24) அறிவித்தார். 

பிரான்ஸ் நாட்டின் இளம் வயது பிரதமராகப் பொறுப்பேற்கும் கேப்ரியல் அட்டல், தன்னை வெளிப்படையாக தன்பாலீர்ப்பாளராக அறிவித்துக்கொண்டவர். மேலும், நாட்டின் முதல் தன்பாலீர்ப்பாளர் பிரதமராகப் பொறுப்பேற்கவிருக்கும் கேப்ரியல், 2020 ஆம் ஆண்டு முதல் 2022 வரை அரசின் செய்தித் தொடர்பாளராகப் பணியாற்றியுள்ளார். முன்பு, பொதுவுடைமை கட்சியில் இருந்த கேப்ரியல், 2016 ஆம் ஆண்டில் மேக்ரான் தொடங்கிய அரசியல் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.