Skip to main content

தாய்லாந்து மன்னரை விமர்சித்த ஃபேஸ்புக் குழு முடக்கம்... தொடரும் சர்ச்சைகள்!!!

Published on 25/08/2020 | Edited on 25/08/2020

 

facebook

 

 

தாய்லாந்து மன்னரை விமர்சித்ததற்காக ஒரு மில்லியன் பயனாளர்களைக் கொண்டிருந்த பிரபல ஃபேஸ்புக் குழு முடக்கப்பட்ட விவகாரம் தற்போது புது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

 

'ராயல் மார்க்கெட் பிளேஸ்' எனும் ஒரு மில்லியன் பயனாளர்களைக் கொண்டிருந்த ஃபேஸ்புக் குழு தாய்லாந்து நாட்டின் மன்னரை பற்றி விமர்சித்த காரணத்திற்காக முடக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து நாட்டில் மன்னரை விமர்சிப்பது என்பது குற்றச்செயலாக பார்க்கப்படுகிறது. இது நிருபிக்கப்படும் பட்சத்தில் அந்நாட்டு சட்டப்படி 15 வருடம் வரை சிறையில் அடைக்கமுடியும். இந்நிலையில் கடந்த 10ம் தேதி தாய்லாந்து நாட்டின் அரசு சார்பில் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு மன்னரை விமர்சித்தது குறித்து ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது. அதில் இரண்டு வார கால அவகாசத்துக்குள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில் நாள் ஒன்றுக்கு 6300 அமெரிக்க டாலர் கணினி குற்ற வழக்கின் கீழ் அபராதமாக கட்ட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. அதனையடுத்து ஃபேஸ்புக் நிறுவனம் இந்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. 

 

ஃபேஸ்புக் நிறுவனத்தின் இந்த நடவடிக்கையானது கருத்துரிமைக்கு எதிரான ஒன்று என்றும், அபராத தொகைக்கு பயந்து ஃபேஸ்புக் கருத்துச்சுதந்திரத்தை நசுக்கும் வகையில் செயல்படுகிறது எனவும் பல்வேறு தரப்புகளில் இருந்து தற்போது கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. முடக்கப்பட்ட அந்த குழுவைத் தொடங்கியவரும் அதை நிர்வகித்தவருமான பவன் இதுகுறித்து கூறும்போது, "எங்கள் குழு ஜனநாயக பூர்வமான வழியில் கருத்து சுதந்திரத்திற்கான தளமாக செயல்படக்கூடியது. ஃபேஸ்புக் நிறுவனத்தின் இத்தகைய நடவடிக்கைகள் அரசின் சர்வாதிகாரத்தன்மைக்கு வலு சேர்க்கக்கூடியதாக உள்ளது" என்றார்.

 

இந்த சர்ச்சைகள் குறித்து ஃபேஸ்புக் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறும்போது, தாய்லாந்து அரசு சட்டவிரோதமானது என்று ஒன்றை கருதும்போது அதை நாங்கள் கட்டுப்படுத்த வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகிறோம். இது மனித உரிமைகளுக்கு எதிரானது தான். ஒவ்வொரு பயனாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். அடுத்தகட்டமாக இதை சட்டப்படி எதிர்க்கொள்ள இருக்கிறோம்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடக்கம்; ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவு கோடி இழப்பா? 

Published on 06/03/2024 | Edited on 07/03/2024
Too much loss per hour for Block Facebook, Instagram

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு, மார்க் ஜுக்கர்பெர்க் என்பவர் தொடங்கிய நிறுவனம் ஃபேஸ்புக். உலகம் முழுவதும் உள்ள இணைய பயனர்களுக்கு தங்களது கருத்துகள் மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கான சமூக வலைத்தளமாக ஃபேஸ்புக் முன்னிலையில் உள்ளது. தற்போது, மார்க் ஜுக்கர்பெக் மெட்டா எனும் நிறுவனத்தைத் தொடங்கி அதன் கீழ் ஃபேஸ்புக் மற்றும் மற்றொரு பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை நிர்வகித்து வருகிறார்.

உலகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் பிரபலமான சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் செயல்பாடுகள், திடீரென்று உலகம் முழுவதும் நேற்று (05.03.2024) இரவு 9 மணியளவில் இருந்து சுமார் ஒரு மணி நேரம் வரை முடங்கியிருந்தது. சமூக வலைத்தள கணக்குகளின் பக்கங்கள் தானாகவே லாக் அவுட் (Logout) ஆகியதால் பயனர்கள் தவித்து வந்தனர். மேலும் தகவல் தொடர்பு கிடைக்காததால் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் இணையவாசிகள் அவதியடைந்தனர். இதனையடுத்து, தொழில்நுட்பக் கோளாறுகள் சரி செய்யப்பட்டு 2 தளங்களும் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தன. 

இந்நிலையில், மெட்டா நிறுவனத்தின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் 1 மணி நேரம் முடங்கியதால் அமெரிக்க பங்குச் சந்தையில் மெட்டா பங்குகளின் சந்தை மதிப்பு 1.6 சதவீதம் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம், இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் 23,127 கோடி இழந்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. 

‘புளூம்பெர்க்’ என்ற நிறுவனம் நேற்று (05-03-24) வெளியிட்ட உலகப் பணக்காரர்கள் குறித்த புதிய பட்டியலில், 179 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் உலகின் 4வது பெரும் பணக்காரராக மெட்டா சி.இ.ஓ மார்க் ஜுக்கர்பெர்க் இருந்தார். இதற்கிடையே, ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் நேற்று 1 மணி நேரம் முடங்கியதால், மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு ஒரே நாளில் $2.79 பில்லியன் டாலர் குறைந்து தற்போது $176 பில்லியனாக உள்ளது. இருப்பினும், உலகின் நான்காவது பணக்காரர் என்ற நிலையை மார்க் ஜுக்கர்பெர்க் தக்க வைத்துள்ளார். 

Next Story

பயனாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பேஸ்புக், இன்ஸ்டாகிராம்!

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Facebook, Instagram shocked the users

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளங்கள் முடங்கியுள்ளன.

உலகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் பிரபலமான சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் செயல்பாடுகள் உலகம் முழுவதும் இன்று (05.03.2024) இரவு 9 மணியளவில் இருந்து சுமார் ஒரு மணி நேரம் வரை முடங்கியிருந்தது. சமூக வலைத்தள கணக்குகளின் பக்கங்கள் தானாகவே லாக் அவுட் (Logout) ஆகியதால் பயனர்கள் தவித்து வந்தனர். மேலும் தகவல் தொடர்பு கிடைக்காததால் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் இணையவாசிகள் அவதியடைந்துள்ளனர். இந்நிலையில், தற்போது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயல்படத் தொடங்கியது.