Definite success; Anura Kumara Disanayake is the Principal

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவின் பதவிக்காலம் நவம்பர் 17ஆம் தேதியுடன் (17.11.2024) முடிவுக்கு வருகிறது. இதனையொட்டி செப்டம்பர் 21ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளதாக இலங்கை தேர்தல் ஆணையம் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இதன் ஒரு பகுதியாக, இந்த தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி (15.08.2024) தொடங்கியது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரம சிங்கே, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுரா குமார திசநாயக்க, இலங்கையின் கடைசிக்கட்ட போரின் போது ராணுவ தளபதியாக இருந்த சரத் பொன்சேகா, உள்ளிட்ட 38 வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.

இத்தகைய சூழலில் தான் இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (21.09.2024) காலை 7 மணிக்குத் தொடங்கியது. இந்த வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெற்றது. விருப்ப வாக்கு அடிப்படையில் நடைபெறும் இந்த தேர்தலில், வேட்பாளர் பட்டியலில் உள்ள 3 பேரை வாக்காளர்கள் தேர்வு செய்து வாக்களிக்க வேண்டும். அதன்படி, 50%க்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றவரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். யாரும் 50% வாக்குகளைப் பெறாவிட்டால் முதல் இரண்டு வேட்பாளர்களுக்கான விருப்ப வாக்குகள் எண்ணப்படும். இதற்கிடையே அங்குள்ள உள்ள தமிழ் தேசியக் கூட்டணி, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தது. மேலும், சில தமிழ் கட்சிகளின் பொது வேட்பாளராக பாக்கியசெல்வம் அரியநேத்திரனும் களத்தில் இருந்தார்.

நேற்று நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 75% வாக்குகள் பதிவாகின. அதே சமயம் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்றே தொடங்கியது. இந்நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். அதன்படி 52.71 சதவீத வாக்குகளுடன் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அநுர குமார திசநாயக முன்னணியில் இருந்தார்.

Advertisment

இந்நிலையில் இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திசநாயக அதிகாரப்பூர்வமாக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இலங்கையின் ஒன்பதாவது அதிபராக அநுர குமார திசநாயக பதவி ஏற்க உள்ளார். கடும் இழுபறி நீடித்த நிலையில் அநுர குமார திசநாயக வெற்றி பெற்றதாக இலங்கை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. எந்த வேட்பாளரும் 50% வாக்குகள் கிடைக்காத நிலையில் இரண்டாவது விருப்ப வாக்கு எண்ணிக்கை நடந்தது. அதன் அடிப்படையில் தேர்தல் வெற்றியானது இலங்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.