Continued incident on Indian students in America

அமெரிக்கநாட்டில் படிக்கும் இந்தியர்கள் தொடர்ந்து மர்மமான முறையில் உயிரிழக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

அமெரிக்காவில் ஜார்ஜியா மாகாணத்தின் லித்தோனியா நகரில் எம்.பி.ஏ படித்து வந்தஇந்தியரான விவேக் சைனி (25)என்பவர் கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் தேதி, மர்ம நபர் ஒருவரால் கொடூரமான முறையில் சுத்தியலால் அடித்துக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து அமெரிக்கபோலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதையடுத்து, இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இந்தியரான அகுல் பி. தவான் (18) அதே மாதத்தில் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 28 ஆம் தேதி பர்டியூ பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இந்தியரான நீல் ஆச்சார்யா காணாமல் போனதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில், அவரைப் போலீசார் தேடி வந்தனர். ஆனால், சில நாட்களுக்குப் பிறகு அவர் மரணம் அடைந்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

Advertisment

இதனைத் தொடர்ந்து, ஹைதராபாத்தைச் சேர்ந்த சையத் மஜாகீர் அலி என்ற ஐ.டி. மாணவர் ஒருவர் சிகாகோ நகரில் கடந்த 4 ஆம் தேதி மர்ம நபர்களால் துரத்தி துரத்தி தாக்கப்பட்டார். கொடூரமாகத் தாக்கப்பட்ட சையத் மஜாகீர் அலி, உதவிக்காக கெஞ்சும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து, ஹைதராபாத்தில் உள்ள தாக்குதலுக்குள்ளான அலியின் குடும்பத்தினர், அவரை சந்திக்க அவசர விசா வழங்கும்படி கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அடுத்த நாளே இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பர்டியூ பல்கலைக்கழகத்தில் இயந்திரவியல் பொறியியலுக்கான முனைவர் படிப்பு படித்து வந்த சமீர் காமத் (23) என்ற இந்திய மாணவர், வாரன் கவுண்டி பகுதியில் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி உயிரிழந்து கிடந்துள்ளார். அவரது உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தில் கிளெவ்லேண்ட் நகரில் படித்து வந்த இந்திய மாணவர் உமா சத்யசாய் கத்தே திடீரென மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார். இந்த சம்பவத்தை நியூயார்க் நகரில் உள்ள இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது. இது குறித்து இந்திய தூதரகம் கூறுகையில், உமா சத்யசாய் கத்தேவின் இறப்புக்கான காரணம் பற்றி விசாரணை நடைபெற்று வருவதாகவும், அவருடைய உடலை இந்தியாவுக்குக் கொண்டு வர அனைத்து உதவிகளை செய்து தர தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. நடப்பு ஆண்டில் இந்திய மாணவர் அல்லது இந்தியர் ஒருவர் மரணம் அடைவது இவரோடு சேர்த்துஇது 10ஆவது சம்பவம் ஆகும். இந்த தொடர் உயிரிழப்பு சம்பவங்கள்அமெரிக்காவில் படிக்கும் இந்தியர்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.